தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

சனி, 31 மார்ச், 2018

குசல் ஜனித் மறுத்தார், இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் SRH அழைப்பை ஏற்றார் - #IPL2018

ஐ.பி.எல் தொடரில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியிலிருந்து டேவிட் வோர்னர் நீக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக இலங்கை அணியின் அதிரடி வீரர் குசல் ஜனித் பெரேராவை இணைப்பது பற்றிப் பேசப்பட்டு வருவதாக கிரிக்கெட் தமிழ் செய்திகளில் சொல்லியிருந்தோம். எனினும் தற்போது சன்ரைசர்ஸ் அணியினால் இங்கிலாந்து அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான அலெக்ஸ் ஹேல்ஸ் உள்வாங்கப்பட்டுள்ளார்.
இதை சன்ரைசஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் உறுதிசெய்துள்ளதோடு, அவரை பெருமையாக வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அலெக்ஸ் ஹேல்சை ஹைதராபாத் அணி, இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

குசல் தற்போது இலங்கையில் நடைபெறும் #SLCSuper4 நான்கு நாள் போட்டிகளில் கலந்து கொண்டு டெஸ்ட் அணியில் தனது இடத்தை உறுதிப்படுத்திக்கொள்ள நோக்கம் கொண்டிருப்பதாலேயே இந்த வாய்ப்பை நிராகரித்ததாகக் கூறப்படுகிறது.

பந்தின் தன்மையை வேண்டுமென்றே மாற்ற முயன்ற குற்றத்துக்காக, டேவிட் வோர்னருக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தலைவர் பதவியில் இருந்து வோர்னர் விலகிக்கொள்ள கேன் வில்லியம்சன் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார்.

அலெக்ஸ் ஹேல்ஸ் ஏற்கனவே இங்கிலாந்தில் இரவு விடுதியொன்றில், பென் ஸ்டோக்சுடன் இணைந்து ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டிலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் எப்போதுமே அவுஸ்திரேலிய அணிக்கு விளையாட முடியாது போகலாம் - டேவிட் வோர்னர்

மீண்டும் ஒரு தடவை அவுஸ்திரேலிய அணிக்கு விளையாடும் வாய்ப்புத் தனக்கு இல்லாமலே போய்விடலாம் என்று அழுகையுடன் தெரிவித்தார் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் முக்கிய சூத்திரதாரியாகக் கருதப்படும் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் உப தலைவர் டேவிட் வோர்னர்.

தடை செய்யப்பட்ட மூன்று வீரர்களில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த இறுதி நபரான வோர்னர் இன்று தனது விளக்கத்தை வழங்கிய போது இதனை மன்னிப்புடன் குறிப்பிட்டார்.

உப தலைவராக தன்னுடைய கடமையிலிருந்து தவறியதாகக் குறிப்பிட்ட வோர்னர், இந்த மோசடியில் தன்னுடைய பங்களிப்பு குறித்து மனவேதனை அடைவதாகவும் தெரிவித்தார். இந்த செயலினால் தனக்கு வழங்கப்பட்ட தடையினால் தனக்கு மீண்டும் எப்போதுமே அவுஸ்திரேலிய அணிக்கு விளையாடமுடியாது போகலாம் என்றும் வேதனையுடன் தெரிவித்தார்.

டேவிட் வோர்னருக்கு இப்போது 31 வயது என்பதுடன் இந்த விவகாரத்தின் பின்னர் அநேக அவுஸ்திரேலிய வீரர்கள் அவரையே குற்றஞ்சாட்டியிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்மித் மற்றும் வோர்னருக்கு தலா ஓராண்டு காலத் தடை விதிக்கப்பட்டதுடன், பான்க்ரொஃப்ட்டுக்கு 9 மாத காலத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வ.சோழன் - யாழ்.நல்லூர்.

வெள்ளி, 30 மார்ச், 2018

தோல்வியின் விளைவு : தலைவர், பயிற்றுவிப்பாளர்கள், தேர்வாளர் அனைவரும் பதவி நீக்கம்.

ஒரு வருடமாகப் பார்த்துப் பார்த்துக் கட்டியெழுப்பப்பட்டஒரு அணி ஒரு தொடரில் அடைந்த இரண்டு மயிரிழையிலான துரதிர்ஷ்டவசமான தோல்விகளால் தன்னுடைய அணியை உருவாக்கி, வழி நடத்திக்கொண்டிருந்த அத்தனை பேரையுமே பலி கொடுத்துள்ளது.

உலகக்கிண்ணத்துக்கு தகுதி பெறாத சிம்பாப்வே அணிக்கே இந்த நிலை...

அணித் தலைவர் கிரேம் கிரீமர், தலைமைப் பயிற்றுவிப்பாளர் - முன்னாள் சிம்பாப்வே அணித்தலைவர் ஹெத்ஸ்ட்ரீக், துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் - முன்னாள் தென் ஆபிரிக்க சகலதுறை வீரர் லான்ஸ் குளூஸ்னர், பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளர், முன்னாள் சிம்பாப்வே வீரர் டக்ளஸ் ஹோண்டோ உட்பட சிம்பாப்வே A அணியின் பயிற்றுவிப்பாளர்கள் மட்டுமன்றி தலைமைத் தேர்வாளர் டட்டேண்டா டைபுவும் பதவி விலக்கப்பட்டுள்ளார்கள்.

சொந்த நாட்டிலே நடைபெற்ற உலகக்கிண்ணத் தகுதிகாண் சுற்றுப் போட்டிகளில் தெரிவாகும் இரண்டு அணிகளில் ஒன்றாக சிம்பாப்வே இருக்கும் என்ற பெரும்எதிர்பார்ப்பு இருந்தது.
முதற்சுற்று அவ்வாறே சிம்பாப்வேக்கு அமைந்தது.
எனினும் சூப்பர் சிக்ஸ் சுற்றில் கடைசி இரு போட்டிகளிலும் - மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் துணை அங்கத்துவ அணியான ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றிடம் கண்ட மயிரிழையிலான விளிம்பு நிலைத் தோல்விகள் சிம்பாப்வேயை உலகக்கிண்ணத்துக்குத் தகுதிபெற விடாமல் செய்திருந்தன.

எனினும் கிரீமரின் தலைமையில் அண்மைக்காலமாக சிம்பாப்வே முன்னேற்றம் கண்டு வந்திருந்தது. இலங்கை அணியையும் இலங்கை மண்ணில் வைத்து ஒருநாள் தொடரில் முதன்முறை சரித்திரபூர்வ வெற்றியும் கண்டிருந்தது.

இந்த அதிரடி நீக்கங்களைத் தொடர்ந்து, அண்மையில் ஓய்விலிருந்து மீண்டு விளையாட வந்த முன்னாள் அணித்தலைவர் பிரெண்டன் டெய்லர் மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்கலாம் என்று சிம்பாப்வே ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.



மீண்டும் ஒருமுறை வெற்றி வாகைசூடுமா? கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- Kolkata Knight Riders #IPL2018


ஐபிஎல் 11ஆவது சீசன் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது. 
அந்தவகையில் இம்முறை களமிறங்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எப்படி?

இம்முறை களமிறங்கவுள்ள கொல்கத்தா அணி கடந்த சீசன்களில் தொடர்ந்து ஆடிய பல அனுபவம் நிறைந்த வீரர்களை கழற்றி விட்டுள்ளது. குறிப்பாக கொல்கத்தாவின் அணித்தலைவராக செயற்பட்ட கெளதம் கம்பீர் இவருடன் கூட யூசுப் பதான், மனிஷ் பாண்டே, உமேஷ் யாதவ், சூரியகுமார் யாதவ், ஷகிப் அல்ஹசன், கிறிஸ் மொறிஸ்,  என பட்டியல் நீண்டு செல்கின்றது. இது கொல்கத்தா அணிக்கு பெரும் பின்னடைவை இத்தொடரில் ஏற்படுத்தலாம். 

இம்முறை கொல்கத்தா அணியின் புதிய தலைவராக சுதந்திரக் கிண்ண இறுதிப்போட்டியில் 8 பந்துக்களில் 29 ஒட்டங்களை அதிரடியாக பெற்று தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெருக்கிய தமிழகவீரர் தினேஷ் கார்த்திக் செயற்படவுள்ளார். அந்தவகையில் புதிய தலைவர் தினேஷ் கார்த்திக் தலைமையில் களமிறங்கவிருக்கும்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துடுப்பாட்டம், வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு போன்றன எப்படி? ஓர் விரிவான அலசல்



இம்முறை உபாதைகள், காயங்கள் காரணமாக அதிகமான வீரர்கள் பாதிப்புக்குள்ளான ஒரு அணியாக கொல்கத்தா அணியே காணப்படுகிறது.
இதையும் கொஞ்சம் வாசியுங்கள்..

காயங்கள், உபாதைகளால் அல்லலுறும் ஐபிஎல் பிரபல வீரர்கள் - #IPL2018


கொல்கத்தா அணியின் துடுப்பாட்டவரிசையை முதலில் பார்த்தால் றொபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக், ரிங்கு சிங், நிதிஷ்  றாணா, இவ்வருடம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலக கிண்ணப் போட்டியில் தொடராட்ட நாயகன் விருதை வென்ற சுப்மன் கில் மற்றும் அவுஸ்ரேலியாவின் கிறிஸ் லின் , மேற்கிந்திய தீவுகளின் அதிரடி சகலதுறைவீரர் அன்ரே ரசல், தென் ஆபிரிக்க சகலதுறை வீரர் கமெரோன் டெல்போர்ட் ஆகியோர் காணப்படுகின்றனர். இது கடந்த சீசன்களில் ஆடிய கொல்கத்தா அணியின் துடுப்பாட்டவரிசையினை விட பலவீனமானதாக தான் தென்படுகின்றது. ஏனெனில் இவ்வணியில் IPLலில் குறைந்த போட்டிகளில் ஆடிய இளம்வீரர்களை அதிகம் கொண்டு காணப்படுகின்றது. இதில் மேலும் கொல்கத்தா அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அவுஸ்ரேலியாவின் கிறிஸ் லின், மேற்கிந்திய தீவுகளின் அன்ரே ரசல் ஆகியோர் காயத்திற்கு உட்பட்டிருப்பதால் இம்முறை ஐபிஎல் போட்டிகளில் இவர்கள் இருவரும் விளையாடுவது கேள்விக்குறியே. இது மேலும் கொல்கத்தா அணியின் துடுப்பாட்டவரிசையினை பலவீனமாக்குகின்றது.

கொல்கத்தா அணியில் இம்முறை சகலதுறைவீரர்கள் குறைவாகவே காணப்படுகின்றனர். ஏனெனில் கொல்கத்தாவில் வழமையாக ஆடிய சகலதுறைவீரர்கள் வங்கதேசத்தின் ஷகிப் அல்ஹசன், இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸ், நீயூசீலாந்தின் கிரான்ஹோம், இந்திய சகலதுறைவீரர் யூசுப் பதான் ஆகியோரைக் கழற்றி விட்டு மட்டுமல்லாது இம்முறை இடம்பெற்ற ஜபிஎல் ஏலத்தில் புதிய சகலதுறைவீரர்களையும் அணியில் உள்வாங்கவில்லை.
இந்த சீசனில் விளையாடவுள்ள இவ்வணியில் சகலதுறைவீரர்களாக மேற்கிந்தியதீவுகளின் சகலதுறைவீரர் அன்ரே ரசல், மற்றும் 19 வயதுக்குட்பட்ட உலக கிண்ணப்போட்டியில் இந்திய அணியில் ஆடிய கமலேஷ் நாகர்கோட்டியும் தென் ஆபிரிக்காவின் டெல்போர்ட்டும் தான் உள்ளனர். அதிலும் ரசல் காயத்திற்கு உட்பட்டுள்ளமை கொல்கத்தாவிற்கு பெரும் பின்னடைவு தான்.

கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சை அடுத்து பார்த்தால் ஒப்பீட்டளவில் வேகப்பந்துவரிசை பலமாக உள்ளது. அவுஸ்ரேலியாவின் மிட்சல் ஸ்ராக், மிட்சல் ஜோன்சன் ஆகியோர் இம்முறை இவ்வணிக்காக விளையாடுகின்றனர் என்பது பெரும்பலமாக இதுவரை தெரிந்தாலும், ஜோன்சனின் உபாதை பற்றிய சந்தேகம் இன்னும் இருக்கும் நிலையில், இன்று வெளியான தகவல் கொல்கத்தா ரசிகர்களை இன்னும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. மிட்செல் ஸ்டார்க் உபாதை காரணமாக இந்த IPL முழுவதுமே விளையாடமாட்டார் என்ற செய்தியே அது. மேலும் அனுபவம் வாய்ந்த வினய்குமார்,  19 வயதுக்குட்பட்ட உலக கிண்ணப்போட்டியில் இந்திய அணிக்கு ஆடிய கமலேஷ் நாகர்கோட்டி , மாவை ஷிவம் ஆகியோரும் இவ்வணிக்கே விளையாடவுள்ளனர். எனவே கொல்கத்தா அணிக்கு வேகப்பந்துவரிசை பலம் தான். இருப்பினும் ஏன் கிறிஸ் வோக்ஸ், உமேஷ் யாதவ் ஆகியோரை ஏன் கழற்றிவிட்டார்கள் என்று தான் தெரியவில்லை.

கொல்கத்தா அணியின் சுழற்பந்துவீச்சை பார்த்தால் மேற்கிந்திய தீவுகளின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைன், இந்திய சுழல் பந்துவீச்சாளர்களான பியூஷ்  சாவ்லா, குல்தீப் யாதவ், மற்றும் சகலதுறைவீரர் சிவம் மகியும் உள்ளார்கள். எனவே கொல்கத்தா அணிக்கு சுழற்பந்துவீச்சு பலமாகவே உள்ளது. ஆனால் இந்த ஐபிஎல் சீசனில் சுனில் நரைன் விளையாடுவது கேள்விக்குறியே. ஏனெனில் அவர் உபாதைக்கு உட்பட்டுள்ளார். அதே போல மீண்டும் அவரது பந்துவீச்சுப் பாணி முறையற்றது என முறையிடப்பட்டுள்ளது. இது கொல்கத்தா அணிக்கு பெரும் இழப்பாக இருக்கும்.
எனினும் சாவ்லா, யாதவ் ஆகிய இருவரும் ஏற்கெனவே முன்னைய ஐபிஎல் போட்டிகளில் சாதித்துக் காட்டியவர்கள். வெவ்வேறு பாணிகளில் வீசக்கூடியவர்கள் சாதகமான ஆடுகளங்களில் எதிரணிக்கு சவாலாகவே விளங்குவார்கள்.

எனவே மொத்தமாக பார்க்கும்போது ஒப்பிட்டளவில் கடந்த சீசன்களில் ஆடிய கொல்கத்தா அணியை பார்க்க இம்முறை களமிறங்கவுள்ள கொல்கத்தா அணி சற்று பலவீனமாகவே காணப்படுகின்றது.
எனினும் கார்த்திக்கின் தலைமைத்துவத்துக்கு ஒரு சவால் என்பதோடு இளமையின் துடிப்பு நிறைந்துள்ளது.

இரு தடவை IPL சாம்பியனாக வந்துள்ள KKR கடந்த இரு பருவகாலங்களில் தொடர்ச்சியாக Play Off சுற்றுக்குத் தெரிவாகியுள்ளது.

இது எவ்வாறோ ஐபிஎல் 11ஆவது சீசன் ஆரம்பித்த பின் தான் இந்த அணி எப்படியான பெறுபேற்றை வெளிப்படுத்தும் என்பதை அறிந்துகொள்ள முடியும்.

தர்ஷன் யோகேஸ்வரன் - இன்பர்சிட்டி, பருத்தித்துறை

சர்ச்சை, தடையினால் பலவீனப்பட்டுள்ள அவுஸ்திரேலியாவில் மிட்செல் ஸ்டார்க்கும் இல்லை - தீர்க்கமான இறுதி டெஸ்ட் ஆரம்பம்

அவுஸ்திரேலிய - தென் ஆபிரிக்க தொடரின் தீர்க்கமான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இப்போது ஜொஹான்னஸ்பேர்க்கில் ஆரம்பமாகியுள்ளது.

பந்தை சேதப்படுத்திய சர்ச்சையை அடுத்து ஸ்மித், வோர்னர், பான்க்ரொஃப்ட் ஆகியோர் இல்லாமல் களமிறங்கும் அவுஸ்திரேலிய அணியில் உபாதை காரணமாக இன்று அவர்களது பிரதான வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க்கும் இன்று விளையாடவில்லை.
இதுவும் மிகப்பெரிய இழப்பாக அமைந்துள்ளது.
கால் உபாதையால் சிலகாலம் சிக்கல்பட்டு வந்த ஸ்டார்க் இம்முறை ஐபிஎல்லிலும் விளையாட முடியாது போகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டார்க்குக்குப் பதிலாக ஸ்விங் பந்துவீச்சாளர் சட் சயர்ஸ் இன்று அறிமுகமாகிறார். கடந்த சில பருவக்காலங்களாக அவுஸ்திரேலிய உள்ளூர்ப் போட்டிகளில் அமோகமாக விக்கெட்டுக்களை எடுத்துள்ளவரான சயர்ஸ் பல கால முயற்சிக்குப் பிறகு இந்த வாய்ப்பைப் பெறுகிறார்.

டிம் பெய்ன்

அவுஸ்திரேலியாவின் 46வது டெஸ்ட் தலைவராகவும், ஐந்தாவது விக்கெட் காப்பாளர் - தலைவராகவும் இன்று அறிமுகமாகும் டிம் பெய்னின் தலைமையில் களமிறங்கும் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக ஜோ பேர்ன்ஸ், மட் ரென்ஷோ ஆகியோரும், ஸ்மித்தின் நான்காம் இடத்தில் பீட்டர் ஹான்ஸ்கொம்பும் இன்று விளையாடவுள்ளனர்.

அவுஸ்திரேலியப் பயிற்றுவிப்பாளர் டரன் லீமன்  இந்த டெஸ்ட்டோடு விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், தென் ஆபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மோர்னி மோர்க்கல் இந்த டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெறவுள்ளதும் இந்த டெஸ்ட்டின் மேலும் முக்கியமானவையாக அமைகின்றன.

கடந்த போட்டியில் வெற்றி பெற்ற அணியிலிருந்து எந்த மாற்றமும் செய்யாத தென் ஆபிரிக்கா நாணய சுழற்சியில் வென்று துடுப்பாடுகிறது.

1991இல் சர்வதேச கிரிக்கெட்டில் மீள் வருகைக்குப்பிறகு தென் ஆபிரிக்கா இதுவரை சொந்த மண்ணில் வைத்து அவுஸ்திரேலிய அணியை டெஸ்ட் தொடரில் வெற்றிகொள்ளவே இல்லை என்ற ஏமாற்றத்தை மாற்றிக்கொள்ளும் ஒரு அரிய  வாய்ப்பும் கிட்டியுள்ளது.

தற்போது தென் ஆபிரிக்கா 2-1 என்று இத்தொடரில் முன்னிலையில் உள்ளது.


வியாழன், 29 மார்ச், 2018

SunRisers அணியின் புதிய தலைவர் கேன் வில்லியம்சன்

2018 IPL பருவகாலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவராக நியூ சீலாந்து அணியின் தலைவரும் உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக விளங்குபவருமான கேன் வில்லியம்சன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த பருவ காலம் போலவே இம்முறையும் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த டேவிட் வோர்னர் பந்து சேதப்படுத்தல் - Ball Tampering விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காரணத்தால் இம்முறை விளையாட முடியாமல் போனதை அடுத்தே கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.


இதேவேளை இந்த அணியின் உப தலைவராக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் நியமிக்கப்பட்டுள்ளார் என சில மணி நேரத்துக்கு முதல் SunRisers Hyderabad ட்விட்டர் தளத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்து, அதனை புவனேஷ்வர் நன்றியுடன் ஏற்று பதிலும் அனுப்பியுள்ளார்.



பதவி விலகுகிறார் பயிற்றுவிப்பாளர் லீமன் !

மூன்று அவுஸ்திரேலிய வீரர்களின் தடை, உலகம் முழுவதும் சர்ச்சை என்ற நிலையில் கிரிக்கெட் அவுஸ்திரேலிய விசாரணையில் இந்தப் பந்து சேதப்படுத்தல் மோசடி விவகாரத்தில் எந்த சம்பந்தமும் இல்லாத 'நிரபராதி' என்று குறிப்பிடப்பட்ட பயிற்றுவிப்பாளர் டரன் லீமன் நடைபெறவுள்ள நான்காவது டெஸ்ட் போட்டிக்குப் பின்னர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

லீமனுக்குத் தெரியாமல் இந்த சதித்திட்டம் நடந்திராது என்றும் லீமன் திட்டமிட்டுத் தப்பவைக்கப்பட்டிருக்கிறார் என்றும் கடுமையான விமர்சனங்களும் அனைத்துத் தரப்பினராலும் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

"நடைபெற்றுள்ள சம்பவங்களின் பின்னணியில் தொடர்ந்தும் இந்தப் பாதையில் பயணிப்பது மிகவும் கடினமானது. இந்த இளைய அணியை சிறப்பான முறையில் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.
குற்றம் இழைத்ததை ஏற்றுக்கொண்ட இளையவர்கள் மூவரையும் அனைவரும் மன்னித்து ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் பிரதானிகளுடன் கலந்துரையாடியே இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன்"
என்று குறிப்பிட்ட லீமன் மிக உணர்ச்சிவசப்பட்டவராகக் காணப்பட்டார்.

ஸ்மித்தின் அழுகையுடனான பேட்டியின் சில மணிநேரங்களில் இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.




கண்ணீர் விட்டழுது மன்னிப்புக் கோரிய ஸ்டீவ் ஸ்மித் !! - நெகிழ்ச்சியான ஊடகவியலாளர் சந்திப்பு - காணொளியுடன்

தென் ஆபிரிக்காவிலிருந்து அவுஸ்திரேலியா திரும்பிய பதவி நீங்கி, தடை செய்யப்பட ஸ்டீவ் ஸ்மித், சிட்னி விமானநிலையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்திருந்தார்.

இந்த விவகாரத்தில் முதல் தடவையாக மௌனம் கலைத்த ஸ்மித் ஆரம்ப முதலே உணர்ச்சிவசப்பட்டவராகக் காணப்பட்டார்.
அனைத்துக் கிரிக்கெட் ரசிகரிடமும் குறிப்பாக அவுஸ்திரேலிய மக்களிடமும் பகிரங்க மன்னிப்புக் கோரிய ஸ்மித் தலைவராக அணியை சரியான முறையில் முன்மாதிரியாக வழிநடத்தாதது தனது குற்றமே என்றும் குறிப்பிட்டார்.

“நான் செய்த இந்த தவறுக்காக உலகளாவிய ரீதியில் உள்ள ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட்டை விரும்புவோர் என் மீது கோபத்துடன் இருக்கலாம். அவர்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்.
இந்த தவறின் முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். இந்த சம்பவமானது எனது தலைமைத்துவத்துக்கு கிடைத்த மிகப்பெரும் தோல்வி. இது எனக்கு ஒரு நல்ல பாடத்தை கற்றுத்தந்துள்ளது. என்னால் இந்த விடயத்தை வாழ்நாளில் எப்போதுமே மறக்க முடியாது.
உலகின் மிகச் சிறந்த விளையாட்டு கிரிக்கெட். கிரிக்கெட் தான் எனது வாழ்க்கையாக இருந்தது. மீண்டும் இருக்கும் என்றும் நம்புகிறேன். என்னால் மீண்டு வரமுடியும் என நம்புகிறேன். நான் யாரையும் குறைகூற விரும்பவில்லை. நான்தான் அணித்தலைவர். அதனால் பொறுப்பை நான்தான் ஏற்க வேண்டும்” என கண்ணீர் வழிய குறிப்பிட்டார்.

இடை நடுவே தழுதழுத்த அவர் அருகே நின்றிருந்த தந்தையையும் நினைவுபடுத்தி " வாழ்க்கையில் சந்தேகத்துக்கு இடமான, சர்ச்சைக்குரிய செயல்களை செய்ய நினைக்கும்போதும் இதனால் பாதிக்கப்படுவோர் யார், உங்கள் உங்கள் பெற்றோருக்கு அவமானத்தை இதனால் தேடித் தரப்போகிறீர்கள் என்பதை மனதில் நிறுத்துங்கள்" என்று குறிப்பிடும்போதே மீண்டும் மனமுடைந்து அழ ஆரம்பித்தார்.


உலகின் முதல் நிலை துடுப்பாட்ட வீரராகவும், வெற்றிகரமான அணித்தலைவராகவும் இருக்கும் நிலையிலேயே ஒருவருடத் தடைக்கு ஆளாகியிருக்கும் நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் இப்போது அவர்பால் அனுதாபம் தெரிவிக்க ஆரம்பித்திருப்பதும் குறிப்பிடக்கூடியது.


Ball Tampering சர்ச்சை - அனுசரணையாளர்கள் அதிரடியாக விலகல், சிக்கலில் கிரிக்கெட் அவுஸ்திரேலியா

பந்தை சேதப்படுத்தி போட்டியை மோசடியாக வெல்ல முயன்ற சர்ச்சையில் வீரர்கள் தடை செய்யப்பட்டு, தண்டனை வழங்கப்பட்ட பின்னரும் இன்னும் அதன் தாக்கங்கள் முடிந்தபாடாகவில்லை.

LG நிறுவனம் டேவிட் வோர்னருக்கு வழங்கிவந்த தனது தனிப்பட்ட அனுசரணையை உடனடியாக ரத்துச் செய்திருந்தது.
மேலும் உடைகள், உபகரணங்களை வழங்கி அனுசரணை தந்துவந்த Asics  நிறுவனம் வோர்னர் மற்றும் பான்க்ரொஃட் ஆகியோருடனான தனது ஒப்பந்தத்தை ரத்துச் செய்தது. இதைத் தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித்தின் தனிப்பட்ட அனுசரணையாளரான சுகாதார, சத்துணவு நிறுவனம் Sanitarium தன்னுடைய ஒப்பந்தத்தை ரத்துச் செய்வதாக அறிவித்தது. Weet-Bix brand ambassador  ஆக விளம்பரத் தூதுவராக விளங்கியவர் ஸ்மித்.



இவற்றுக்கெல்லாம் மேலாக கிரிக்கெட் அவுஸ்திரேலியாவுக்குப் பேரிடியாக அவர்களது பிரதான அனுசரணையாளர் - 3 வருடங்களுக்கு 20 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களுக்கு  நடக்கும் அத்தனை போட்டிகளுக்கும் பெயரிடல் அனுசரணை வழங்கியிருந்த Magellan Financial Group உடனடியாக இதிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய அணி + தலைமைத்துவத்தின் மேற்கண்ட மோசடி நடவடிக்கைகள், கண்ணியத்தையும் நம்பிக்கையையும் களங்கப்படுத்துவதாகவும் தம் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கத்தைத் தந்துள்ளதாகவும் தெரிவித்தே உடனடி நடவடிக்கையாக இதனை மகெலன் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ரசிகர்களின் கவலை, கோபம் ஒரு பக்கம், அனுசரணையாளர்களின் இழப்பு மறுபக்கம் என்று கிரிக்கெட் அவுஸ்திரேலியா சிக்கித் திணறுகிறது.


புதன், 28 மார்ச், 2018

வோர்னரின் இடத்தில் இலங்கை அதிரடி வீரர் குசல் ஜனித் பெரெரா ? #IPL2018

அவுஸ்திரேலியாவினால் தடை செய்யப்பட்டுள்ளதால், இம்முறை IPL இல் விளையாடும் வாய்ப்பையும் இழந்துள்ள அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் உப தலைவர் டேவிட் வோர்னருக்குப் பதிலாக இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரெராவை இணைப்பது பற்றி தற்போது ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த நான்கு பருவகாலங்களிலும் (2014 - 2017) டேவிட் வோர்னரே SunRisers Hyderabad அணியின் சார்பில் கூடிய ஓட்டங்கள் பெற்றவராக விளங்கினார்.
அத்துடன் இம்முறையும் தலைமை தாங்கவிருந்தார்.

எனவே அவரது இடத்தை நிரப்பும் வகையில் இப்போது சிறப்பான ஓட்டக்குவிப்பில் இருக்கும் குசல் ஜனித்தை அணுகியுள்ள சன்ரைசர்ஸ் முகாமைத்துவம் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் முடிவையும் எதிர்பார்த்துள்ளது.

வோர்னருக்குப் பதிலாக இன்னும் புதிய தலைவரும் அறிவிக்கப்படவில்லை.


வ.சோழன் - யாழ்.நல்லூர்

நான்காவது IPL கிண்ணத்தைக் குறிவைக்கும் நடப்புச் சம்பியன்கள் - Mumbai Indians #IPL2018

நடப்பு சம்பியன்களாக திகழும் மும்பாய்  அணி இந்த ஆண்டிலும் IPL  கிண்ணத்தைக் கைப்பற்றினால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை போல. மும்பாய் அணி கடந்த சீசன்களில் ஆரம்பத்தில் தோல்வியை சந்தித்துப் பின்னர் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று இறுதிப்போட்டிக்குச் சென்று கிண்ணத்தையும் கைப்பற்றி விடும். இதுதான் மும்பாய் இந்தியன்ஸ் வரலாறு.

இம்முறையும் களமிறங்க இருக்கும் மும்பாய் இந்தியன்ஸ் அணியின் துடுப்பாட்டம், வேகப்பந்துவீச்சு, சுழல் பந்துப் பக்கம், களத்தடுப்பு போன்றன எப்படி? ஒர் பார்வை...

மும்பாய் அணியின் துடுப்பாட்டத்தை முதலில் பார்த்தால் மும்பாயின் தூண் ரோஹித் ஷர்மா. இவரே இம்முறையும் இவ்வணியின் தலைவராக செயற்படவுள்ளார். இது மும்பாய் அணியின் துடுப்பாட்டவரிசைக்கு பெரும் பலம் சேர்க்கும்.

மேலும் மும்பாய் அணியின் துடுப்பாட்டவரிசையில் மேற்கிந்திய தீவுகளில் ஆரம்பவீரராக களமிறங்கி அடித்து நொறுக்கும் ஈவின் லூயிஸ் முதன் முதலாக ஐபிஎல் போட்டியில் இவ்வணிக்காக விளையாடுள்ளார். இதுவும் மும்பாய்க்கு மேலும் பலம் சேர்க்கும். இவர்களுடன் சூரியகுமார் யாதவ், செளரவ் திவாரி, இஷான் கிஷான், கடந்த காலங்களில் மும்பாய் அணியைத் தூக்கி நிறுத்திய கிரன் பொலாட், இந்தியாவின் கலக்கல் சகலந்துறை வீரர் ஹர்த்திக் பாண்டியா, குருனல் பாண்டியா, அவுஸ்திரேலியாவின் பிலிஸார்ட் என அதிரடி துடுப்பாட்டவரிசை நீன்று செல்கிறது. இம்முறையும் மும்பாய் அணிக்கு பலமான துடுப்பாட்டவரிசை காணப்படுகின்றது.

மும்பாய் அணி இம்முறை நடைபெற்ற ஏலத்தில் சகலதுறைவீரர்கள் பலரை அணியில் உள்வாங்கியுள்ளது. அந்தவகையில்  ஹர்த்திக், குருனல், பொலாட் எனும் வழமையான சகலதுறைவீரர்கள் இம்முறையும் மும்பை அணிக்கே விளையாடுவதுடன் இம்முறை புதிதாக இவ்வணியில் தென்னாபிரிக்காவின் JP டுமினி, அவுஸ்ரேலியாவின் பென் கட்டிங், இவர்களுடன் இம்முறை நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலக கிண்ணப்போட்டியில் கலக்கிய சகலதுறை வீர்ர அனுகுல் றோயும் மும்பாய் அணிக்கே விளையாடவுள்ளனர். இது அணிக்கு மேலும் பலம் சேர்க்கின்றது.

மும்பாய் அணி திறமையான  வேகப்பந்துவீச்சாளர்களை உள்ளடக்கியுள்ளது.
நீண்ட காலம் மும்பாயின் துரும்புச்சீட்டாக இருந்து பல வெற்றிகளை பெற்றுத்தந்த இலங்கையின் லசித் மாலிங்கவை இம்முறை வீரர்களின் ஏலத்தில் (வயது/உபாதைகள் காரணமாக) எடுக்காமல் விட்டாலும் அதன் பின்னர் அவரது அனுபவம் கருதி பந்துவீச்சு ஆலோசகராக இணைத்துள்ளார்கள்.
ஆனால் இலங்கையின் உள்ளூர்ப் போட்டிகளில் மாலிங்கவின் விக்கெட்டுக்களை எடுத்த ஆற்றலைக் கவனித்து மீண்டும் அணியில் சேர்த்துக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.
T20 போட்டிகளில் முதற்தர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா இம்முறையும் இவ்வணிக்கே விளையாடவுள்ளது. இது மும்பாய் அணிக்கு மிகப்பெரும் பலம் நிதஹாஸ் கிண்ண இறுதிப்போட்டியில் வங்களாதேஷ் வீரர் முஷ்பீஹர் ரகுமான் கட்டுப்பாடாகப் பந்துவீசிய சிக்கன பந்துவீச்சாளர் இவர் இம்முறை மும்பாய் இந்தியன்ஸ் அணிக்கு விளையாடுவது மேலும் பலம் சேர்க்கின்றது. இவர்களுடன் ஹர்த்திக் பாண்டியா, பிரதீப் சங்வான், அவுஸ்ரேலியாவின் பென் கட்டிங், அண்மைக்காலத்தில் வேகத்தில் கலக்கும் பட் கம்மின்ஸ் என பலமான வேகப்பந்துக் கூட்டணியை மும்பாய் அணி கொண்டுள்ளது.

மும்பாய் அணியின் சுழற்பந்துவீச்சை பார்த்தால் இவ்வளவு காலமாக மும்பையில் விளையாடிய ஹர்பஜன் சிங்கை மும்பை அணி இம்முறை கழற்றி விட்டுள்ளது. மும்பாய் அணியில் இப்போது குருனல் பாண்டியா, ராகுல் சாகர், அனுகுல் றோய் இவர்களுடன் தென்னாபிரிக்காவின் சகலதுறை சுழற்பந்துவீச்சாளர் JP டுமினியும் இருக்க, தலைமைப் பயிற்றுவிப்பாளர் மஹேல ஜெயவர்த்தனவின் வியூகத்தில் ஏலத்தில் எடுக்கப்பட்ட இலங்கையின் அகில தனஞ்சேயும் மும்பை அணிக்கே விளையாடவுள்ளனர்.

மும்பாய் அணியில் சிறந்த களத்தடுப்பு வீரர்களும் காணப்படுகின்றனர். குறிப்பாக ஹர்த்திக் பாண்டியா, கிரன் பொலாட், JP டுமினி என சிறந்த களத்தடுப்புவீரர்கள் மும்பை அணியில் இருக்கின்றனர்.

அனுபவஸ்தர்களும் எதிர்காலத்துக்குமான வீரர்களையும் கொண்டு ஒரு உறுதியான அணியை ரோஹித்தும் பயிற்றுவிப்பாளர் மஹேலவும் சேர்ந்து கட்டியெழுப்புவார்கள் என்று மும்பாய் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

எனவே  இம்முறையும் மும்பாய் இந்தியன்ஸ் அணி எல்லாவகையிலும் பலமாக தான் காணப்படுகின்றது. நடப்பு சம்பியன்ஸ் அந்தஸ்தை தொடர்ந்து இம்முறையும் மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைத்து கொள்ளுமா?
இதுவரை அதிக IPL கிண்ணங்களை வென்றுள்ள அணியாகக் கம்பீரமாக வலம்வரும் மும்பாய் அடுத்தடுத்துக் கிண்ணம் பெறுமா என்ற
எதிர்பார்ப்புகளுடன் ஐபிஎல் 11ஆவது சீசனுக்காக

தர்ஷன் யோகேஸ்வரன் - இன்பர்சிட்டி, பருத்தித்துறை

ஸ்மித், வோர்னருக்கு ஒரு வருடத் தடை ! - கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் கடுமையான நடவடிக்கை

பந்தை சேதப்படுத்தி முறைகேடு செய்யமுயன்ற குற்றத்துக்காக அவுஸ்திரேலியாவின் பதவி நீங்கிய தலைவர் ஸ்டீவ் ஸ்மித், அவரது உப தலைவராக இருந்த டேவிட் வோர்னர் ஆகியோருக்கு தலா ஒரு வருட கிரிக்கெட் விளையாடும் தடையும், தலைமை தாங்குவதற்கு இரண்டு வருடத் தடையும் விதிக்கப்பட்டுள்ளதோடு, நேரடியாக இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட கமெரோன் பன்க்ரொஃப்டுக்கு 9 மாதகாலத் தடையும் கிரிக்கெட் அவுஸ்திரேலியாவினால் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இந்த ஒரு வருடத் தடை பற்றி கிரிக்கெட் உலகமே அதிர்ந்து போயுள்ள நிலையில், ஸ்மித் IPL போட்டிகளில் பங்குபற்றப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.

இந்த விசாரணை முடிவுகள் இன்னும் கொஞ்ச நேரத்தில் கிரிக்கெட் அவுஸ்திரேலியாவினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.

இந்தத்தடையின் விளைவாக கிரிக்கெட் அவுஸ்திரேலியா நடத்தும் உள்ளக, பிராந்திய மற்றும் Big Bash League போட்டிகளிலும் இவர்கள் விளையாட முடியாது. எனினும் இங்கிலாந்தின் பிராந்திய, மற்றும் உள்ளூர் கழக மட்டப் போட்டிகள், இதர பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திக்கிடைத்த தகவலாக BCCI - இந்தியக் கிரிக்கெட் சபை கிரிக்கெட் அவுஸ்திரேலியாவினால் தடை செய்யப்பட்டிருப்பதால் IPL இல் விளையாட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவித்துள்ளது.


SunRisers Hyderabad தலைமைப் பதவியிலிருந்து விலகினார் டேவிட் வோர்னர் - #IPL2018

பந்தை சேதப்படுத்திய விவகாரம் பூதாகாரமாக உருவெடுத்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் இறுதி முடிவுக்காக கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், இம்முறை IPL பருவகாலத்தில் மீண்டும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்குத் தலைவராக ஒப்பந்தம் செய்யப்பட்ட டேவிட் வோர்னர் SunRisers Hyderabad தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதனை ஏற்றுக்கொண்டுள்ள சன் ரைசர்ஸ் முகாமைத்துவம் வெகுவிரைவில் புதிய தலைவரை அறிவிப்பதாக உத்தியோகபூர்வ ட்விட்டர் தளம் மூலமாக அறிவித்துள்ளது.

சன்ரைசர்ஸ் அணியின் தலைவராக டேவிட் வோர்னர் மிக வெற்றிகரமான தலைவராக விளங்கி வந்ததுடன் 2016ஆம் ஆண்டில் ஐபிஎல் கிண்ணத்தையும் வென்றெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வோர்னரின் தனிப்பட்ட அனுசரணையாளராக விளங்கிய LG நிறுவனம் தன்னுடைய அனுசரணை ஒப்பந்தத்தை ரத்துச் செய்வதாக அறிவித்துள்ளது.

வோர்னர், ஸ்மித், பான்க்ரொஃப்ட் ஆகியோர் மீதான முழுமையான விசாரணையும் தண்டனை பற்றிய விபரங்களும் இன்று வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது.

மூடி மறைக்கும் Cricket Australia ??!! - கேலிக்கு உள்ளாகும் சதர்லாண்ட் + லீமன் - #BallTampering


நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கிரிக்கெட் அவுஸ்திரேலியப் பிரதானி தனியே அவுஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித், வோர்னர், பான்க்ரொஃப்ட் ஆகியோர் மட்டுமே திட்டமிட்டு செயற்படுத்த முனைந்ததே இந்தப் பந்து சேதப்படுத்திய மோசடி. இதில் பயிற்றுவிப்பாளர் டரன் லீமனின் பங்கில்லை; அவருக்கு இது பற்றி எதுவும் தெரியாது. அணியில் ஏனையோருக்கும் இது பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை என்று குறிப்பிட்டது கடுமையான அதிருப்தியை கிரிக்கெட் சமூகம் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள், இந்நாள் வீரர்கள் கடுமையாக இதை விமர்சித்து வருவதோடு, ரசிகர்களும் கேலிக்குள்ளாக்கி வருகின்றனர்.

முன்னாள் அவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க், முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன், முன்னாள் இங்கிலாந்து தலைவர் மைக்கல் வோன் ஆகியோர் இதில் மிகக்கடுமையாக தமது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.




செவ்வாய், 27 மார்ச், 2018

லீமன் தப்பினார் ! ஸ்மித், வோர்னர் & பான்க்ரொஃப்ட் உடனடி வெளியேற்றம் ! பெய்ன் புதிய தலைவர் - Cricket Australia அறிவிப்பு

லீமன் தப்பினார் ! ஸ்மித், வோர்னர் & பான்க்ரொஃப்ட் உடனடி வெளியேற்றம் ! பெய்ன் புதிய தலைவர் - Cricket Australia அறிவிப்பு

இன்று தென் ஆபிரிக்காவுக்கு அவசரமாகப் போய்ச்சேர்ந்த கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜேம்ஸ் சதர்லாண்ட் உடனடி முதற்கட்ட விசாரணைகளின் முடிவை இன்று தென் ஆபிரிக்காவின் ஜொஹான்னஸ்பெர்க் நகரில் அறிவித்தார்.

முதலில் அவுஸ்திரேலிய, தென் ஆபிரிக்க மற்றும் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களிடம் தங்கள் நாட்டின் கிரிக்கெட் அணி சார்பாக பகிரங்க மன்னிப்புக் கோரிய பின்னர், பின்வரும் முக்கியமான முடிவுகளைக் குறிப்பிட்டார்.

ஒப்பந்த அடிப்படையில் தற்போதைய அவுஸ்திரேலியப் பயிற்றுவிப்பாளர் டரன் லீமன் பயிற்றுவிப்பாளர் பதவியில் தொடருவார்.

இந்தப் பந்து சேதப்படுத்திய விவகார மோசடியில் அணியில் வேறு ஒருவருக்கும் சம்பந்தமும் கிடையாது; அவர்கள் அதுபற்றி அறிந்திருக்கவும் இல்லை.

இதனால் இதைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்திய முன்னாள் தலைவர் ஸ்டீவ்  ஸ்மித், உப தலைவர் டேவிட் வோர்னர், அகப்பட்டுக்கொண்ட கமெரோன் பான்க்ரொஃப்ட் ஆகிய மூவரும் அடுத்த டெஸ்ட் போட்டியிலிருந்து இடைநிறுத்தப்படுவதுடன் உடனடியாக அவுஸ்திரேலியா புறப்படுவர்.

இவர்கள் மீதான மேலதிக நடவடிக்கைகள் அடுத்த கட்ட விசாரணைகளின் பின்னர் அடுத்துவரும் 24மணி நேரத்தினுள் அறிவிக்கப்படும்.

தாற்காலிகத் தலைவராக சர்ச்சைக்குரிய 3ம் டெஸ்ட் போட்டியின் இடையே பொறுப்பேற்ற விக்கெட் காப்பாளர் டிம் பெய்ன் அவுஸ்திரேலிய அணியின் 46வது டெஸ்ட் தலைவராகப் பொறுப்பேற்கிறார்.

அணியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட மூவருக்குப் பதிலாக சகலதுறை வீரர் கிளென் மக்ஸ்வெல்,துடுப்பாட்ட வீரர்கள் மட் ரென்ஷா, ஜோ பேர்ன்ஸ் ஆகியோர் உடனடியாக நாளையே அவுஸ்திரேலியாவிலிருந்து புறப்பட்டு தென் ஆபிரிக்காவில் வந்து அணியுடன் சேர்ந்துகொள்வர்.






ஸ்மித், வோர்னர் உட்பட்ட அவுஸ்திரேலிய பந்து மோசடிக்காரரின் தண்டனை அறிவிப்பு.. இன்னும் சில நிமிடங்களில்

அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்மித், டேவிட் வோர்னர், பான்க்ரொஃப்ட் மற்றும் பயிற்றுனர் டரன் லீமன் ஆகியோரின் தண்டனைகள் பற்றிய அறிவித்தல் இன்னும் சில நிமிடங்களில்..

தென் ஆபிரிக்கா சென்று இன்று விசாரணைகளை நடத்திய அவுஸ்திரேலிய கிரிக்கெட் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜேம்ஸ் சதர்லாண்ட் இது பற்றிய பகிரங்க அறிக்கையை வெளியிடவுள்ளார்.

திங்கள், 26 மார்ச், 2018

ராஜஸ்தான் தலைமையை விட்டு விலகினார் ஸ்டீவ் ஸ்மித் - #IPL2018

ஸ்மித்தின் #IPL ராஜஸ்தான் தலைமையும் பறிபோனது.

பந்தை முறைகேடாக சேதப்படுத்திய அவமானகர சம்பவத்தையடுத்து அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகவேண்டி வந்த ஸ்மித், இன்று ராஜஸ்தான் ரோயல்ஸின் தலைமைப் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்ததாக ராஜஸ்தான் ரோயல்ஸ் இணை உரிமையாளர் அறிவித்திருந்தார்.

இந்த #IPL2018 பருவகாலத்தில் Rajasthan Royals அணியின் தலைவராக அறிவிக்கப்பட்டிருந்த ஸ்டீவ் ஸ்மித்துக்குப் பதிலாக இப்போது இந்திய வீரர் அஜியான்கே ரஹானே புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

எனினும் இம்முறை IPLஇல் ஸ்டீவ் ஸ்மித் விளையாடுவது பற்றி இன்னும் தகவல்கள் வெளிவரவில்லை.
www.crickettamil.com

காயங்கள், உபாதைகளால் அல்லலுறும் ஐபிஎல் பிரபல வீரர்கள் - #IPL2018

இன்னும் இரு வாரங்களில் ஐபிஎல் 11ஆவது சீசன் மிக மிக கோலாகலமாக ஆரம்பிக்கவுள்ள நிலையில் இம்முறை விளையாடவுள்ள ஐபிஎல் அணிகளின் பிரபலவீரர்கள் தொடர்ச்சியாகக் காயங்களுக்கு உட்பட்டு வருவதால் ஐபிஎல் அணிகளின் நிர்வாகத்திற்கு பெரும் தலையிடியை ஏற்படுத்தி வருகின்றது.

அந்தவகையில் கொல்கத்தா நைட்ஸ் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ், ராஐஸ்தான் றோயல்ஸ் ஆகிய அணிகளின் வீரர்கள் பலர் காயத்திற்கு உட்பட்டு இந்த IPL 2018 - ஐபிஎல் சீசனில் விளையாடமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் அணிகளின் ஒன்றான கொல்கத்தா நைட்ஸ் ரைடர்ஸ் அணி தான் இதன் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட அணியாகத் தெரிகிறது.
இவ்வணியில் இம்முறையும் விளையாடவுள்ள மேற்கிந்திய தீவுகளின் சகலதுறைவீரரான அன்ரே ரசல் வலதுகையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த சீசனில் விளையாட முடியாதுள்ளது சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அதே மேற்கிந்தியதீவுகளின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைனும் உபாதைக்கு உட்பட்டுள்ளார். அதோடு அவுஸ்ரேலியாவின் அதிரடி துடுப்பாட்டவீரர் கிறிஸ் லின்னும் உபாதைக்கு உட்பட்டுள்ளார். இந்த மூவரின் இழப்பும் கொல்கத்தா அணிக்கு மிக மிகப் பெரும் இழப்பாக இந்த ஐபில் சீசனில் அமையும் .
பதினொருவரில் இடம்பெறும் உறுதியான நால்வராக இவர்கள் எப்போதுமே இருக்கக்கூடியவர்கள்.
இவர்களுக்கான பதில் வீரர்களை கொல்கத்தா அணி தற்போது தீவிரமாக தேடி வருகின்றது. மேலும் அவுஸ்ரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஜோன்சனும் இந்த ஐபிஎல் விளையாடமாட்டார் என்ற செய்தியும் தற்போது கசிந்து வருகின்றது. மேலும் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் இம்முறை இடம்பெற்ற அவுஸ்ரேலியாவின் வேகப்பந்துவீச்சாளரான நேதன் கோல்ட்டர்நைலும் காயத்திற்குட்பட்டுள்ளதால் இந்த சீசனில் விளையாடமுடியாது போயுள்ளது. இது பெங்களூர் அணிக்கு மிகப் பெரும் இழப்பாக கருதப்படுகின்றது. இவருக்கு பதிலாக பெங்களூர் அணிநிர்வாகம் பதில்வீரராக நீயூசீலாந்தின் பிரபல சகலதுறைவீரரான கோரி அண்டர்சனை அணியில் இணைத்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இரு வருடத்தடைக்கு பின்னர் இந்த சீசனில் களமிறங்கவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இம்முறை இணைத்து கொள்ளப்பட்ட நீயூசீலாந்தின் அண்மைக்கால சகலதுறைவீரர் மிட்சல் சான்ட்னருக்கு காலில் ஏற்பட்டிருக்கும் உபாதை காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை இடம்பெற்று அதன் பின்னர் 9 மாதங்கள் ஒய்வில் இருக்கவேண்டும் என்பது காரணமாக சென்னை அணியில் இம்முறை விளையாடமுடியாது என்பதால் ஐபிஎல் நிர்வாகம் அவருக்கு பதிலாக மாற்றுவீரர் ஒருவரை தெரிவு செய்யும்படி சென்னை அணி நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மாற்றுவீரரை தேடிக் கொண்டிருக்கின்றது. மேலும் இந்திய சகலதுறைவீரர் ரவீந்தீர ஜடேஜாவும் உபாதைக்குட்பட்டு தற்போது குணமடைந்துவிட்டார் எனச் சொல்லப்படுகின்றது. மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியிலும் பிரபலவீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. அவுஸ்ரேலியாவின் வேகப்பந்துவீச்சாளரான ஜெசன் பெஹ்ரேண்டோப் தான் காயத்திற்கு உட்பட்டதாக சொல்லப்படுகின்றது. மேலும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியில் இம்முறை இணைத்துக்கொள்ளப்பட்ட 19வயதிற்குட்பட்ட மேற்கிந்தியதீவுகள் அணியின் நட்சத்திர பந்துவீச்சு சகலதுறைவீரர் - இங்கிலாந்தின் எதிர்கால வீரர் என்று கருதப்படும் ஜோஃப்ரா ஆர்ச்சரும் உபாதைக்குட்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. எனவே ஐபிஎல் 11 ஆவது சீசன் இன்னும் சில நாட்களில் ஆரம்பமாகவுள்ளநிலையில் ஐபிஎல் அணிகளின் பிரபலவீரர்கள் காயத்திற்குட்பட்டு வருவது ரசிகர்களுக்கு மனவருத்ததை அளிப்பதாகவுள்ளது.
தர்ஷன் யோகேஸ்வரன் - இன்பர்சிட்டி, பருத்தித்துறை

ஸ்டீவ் ஸ்மித்துக்கு இன்னொரு இடி ! ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் இருந்து நீக்கப்படுவாரா?


பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி, கேப்டன்பதவியை இழந்துள்ள ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் நீடிப்பாரா? அல்லது நீக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்து வரும் 3-வது டெஸ்ட் போட்டியின் போது, ஆஸ்திரேலிய இளம் வீரர் கேமரூன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார். இது கேமிராவில் பதிவானது. இதையடுத்து பேட்டி அளித்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், ரிவர்ஸ் ஸ்விங் வீசுவதற்காக திட்மிட்டு பந்தை சேதப்படுத்தினோம் என்று ஒப்புக்கொண்டார்.
இதன் காரணமாக, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவி ஸ்டீவ் ஸ்மித்திடம் இருந்தும், துணைக் கேப்டன் பதவி டேவிட் வார்னரிடம் இருந்தும் பறிக்கப்பட்டது.
இந்நிலையில், பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கியுள்ளதையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஸ்டீவ் ஸ்மித் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
என்ன நடவடிக்கை இருக்கும்
இது குறித்து ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லாவிடம் நிருபர்களிடம் இன்று கேள்வி எழுப்பியபோது அவர் கூறுகையில், ‘பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். அதன்பின், பிசிசிஐ, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடவடிக்கையை எடுக்கும். இப்போதுள்ள நிலையில், எந்த நடவடிக்கையும் அவர் மீது பிசிசிஐ அல்லது ராஜஸ்தான் அணி ஏதும் எடுக்க முடியாது.
ராஜஸ்தான் அணியின் கேப்டன் மட்டுமல்ல மிக முக்கியமான வீரர் ஸ்டீவ் ஸ்மித். ஆதலால், அவருக்கு விதிக்கப்படும் தண்டனையைப் பொறுத்தே அணியின் முடிவு மாறுபடும். பொறுத்திருந்து பார்க்கலாம்’ எனத் தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு ஸ்மித், டேவிட் வார்னர் இருவரையும் பதவிநீக்கம் செய்துள்ளது குறித்து சுக்லாவிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், ‘இது கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் உள்பிரச்சினை இதில் பிசிசிஐ, ஐபிஎல் அமைப்பு எந்த தலையீடும் செய்யாது. எங்களின் கவனம் எல்லாம் ஐசிசி என்ன சொல்லப்போகிறது என்பதுதான்’எனத் தெரிவித்தார்.
ஸ்மித் மிகவும் முக்கியம்
இதற்கிடையே பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ஸ்மித், வார்னர் ஆகிய இருவீரர்களும் ஐபிஎல் போட்டிகளுக்கு மிக முக்கியமாகும். இவர்களின் ஒப்பந்தத்தை இந்த ஒரு சம்பவத்தை வைத்து மட்டும் உடனடியாக ரத்து செய்துவிட முடியாது. ஒருவேளை ஐசிசி ஒரு டெஸ்ட் போட்டிக்கு தடை விதித்தாலோ, அல்லது 3 மைனஸ் புள்ளிகள் கொடுத்தாலோ நாம் எப்படி கடினமான முடிவுகளை ஸ்மித், வார்னர் மீது எடுக்க முடியும்.
அதுமட்டுமல்லாமல் 2 ஆண்டுகளுக்கு பின் இப்போதுதான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல் போட்டிக்கு வந்துள்ளது. இப்போதுள்ள நிலையில், ஸ்மித் போன்ற நட்சத்திர வீரர் அவசியம்’ எனத் தெரிவித்தார்.
ஆதலால், ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித், வார்னர் ஆகியோர் மீது ஐசிசி கடுமையான தண்டனைகள் விதித்தால் கூட அவர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதில் பெரும்பாலும் சிக்கல் இருக்காது, அந்த தண்டனைகள் ஐபிஎல் போட்டிகளை பாதிக்காது என்றே தெரிகிறது.
நன்றி : 
தி இந்து

கன்னிக் கிண்ணக் கனவை நனவாக்குமா கிங்ஸ் லெவன் பஞ்சாப் ? - Kings XI Punjab - #IPL2018


இன்னும் சில தினங்களில் ஐபிஎல்- IPL 2018 கோலாகலமாக ஆரம்பிக்கவுள்ளது. 

இந்நிலையில் இதுவரை IPL கிண்ணத்தை ஒரு தடவையேனும்  இந்த சீசனில் முதன்முதலாக சகலதுறை தமிழகவீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் தலைமையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் இவ்வருடம் விளையாடவுள்ளது.
தன்னை இந்தியத் தேசிய அணிக்குள் மீண்டும் நுழைத்துக்கொள்ளப்போராடும் அஷ்வினுக்கு நல்லதொரு களம் . தலைமைத்துவத்தில்  தன்னை நிரூபிக்கவும் ஒரு வாய்ப்பு.
இவருக்குத் துணையாக அணியின் mentor ஆக வழிநடத்தும் சேவாக் இருப்பார் என்று நம்பப்படு
க்கிறது.


இந்நிலையில் இந்த சீசனில் விளையாடவுள்ள பஞ்சாப் அணியின் துடுப்பாட்டம், வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எப்படி உள்ளது? என்பது பற்றிய ஒர் சுருக்கமான அலசல்

முதலில் பஞ்சாப் அணியின் துடுப்பாட்டத்தை பார்த்தால் ஒர் பலமான நீளமான துடுப்பாட்டவரிசை கொண்டு காணப்படுகின்றது.
மேற்கிந்திய தீவுகளின் ஆரம்ப அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ஸ் இம்முறை பஞ்சாப் அணிக்காக விளையாடவுள்ளார். இது பஞ்சாப் அணிக்கு பலம்.
நீண்டகாலமாக பஞ்சாப் அணிக்காகத் தனித்து பிரகாசித்துவரும் டேவிட் மில்லருக்குத் துணையாக ஏலத்தில் கடைசி நேரம் வாங்கப்பட்ட கெயிலும், யுவராஜ் சிங்கும் பெரும் துணையாக விளங்குவார்கள்.
இவர்களோடு அவுஸ்திரேலிய அதிரடி வீரர் ஏரோன் பின்ச் ! கலக்கல் ஆரம்ப வரிசை.
மேலும் இந்திய ரஞ்சி கிண்ணப் போட்டியில் ஒட்டங்களை அள்ளி குவித்த மயங் அகர்வாலும் இவ்வணிக்காகவே விளையாடவுள்ளார். இந்திய அணியின் இளைய நட்சத்திரம் KL ராகுல், மனோஜ் திவாரி, கருண் நாயர், அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் இவர்களுடன் அவுஸ்ரேலியாவின் மார்க் ஸ்ரொயினிஸ், தென்னாபிரிக்காவின் அதிரடி ஆட்டக்கார்ர டேவிட் மில்லர் என துடுப்பாட்டவரிசை நின்று செல்கின்றது.
பஞ்சாப் அணிக்கு இம்முறை துடுப்பாட்டம் பெரிய பலமாக அமையும். என்பதில் ஐயமில்லை.

பஞ்சாப் அணியின் இம்முறை ஏகப்பட்ட சகலதுறை ஆட்டக்காரர்கள் காணப்படுகின்றார்கள். அஷ்வின், யுவராஜ் சிங், மனோஜ் திவாரி, அக்சர் பட்டேல் இவர்களுடன் அவுஸ்ரேலியாவின் சகலதுறைவீரர் மார்க் ஸ்ரொயினிஸும் கூட கிறிஸ் கெயிலும் உள்ளார். இந்தியாவின் ரிஷி தவான் இன்னொரு குறிப்பிடத்தக்கவர்.

பஞ்சாப் அணியின் வேகப்பந்துவீச்சை பார்த்தால் மோகித் ஷர்மா, அங்கிட் ராஜ்புட், பர்வீந்தர் அவானா அவுஸ்ரேலியாவின் வேகப் பந்துவீச்சாளர்  அன்ரூ டை ஆகிய வேகப்பந்துவீச்சாளர்கள் காணப்படுகின்றனர்.

ஆனால் பஞ்சாப் அணிக்கு சுழற் பந்துவீச்சாளர்கள் பெரும் பலம். குறிப்பாக ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் பட்டேல், யுவராஜ் சிங் போன்ற அனுபவமான சுழற்பந்துவீச்சாளர்கள் காணப்படுகின்றனர். அத்துடன் ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் முஜீவ் சட்ரானும் உள்ளார்.

இம்முறை இருக்கும் பஞ்சாப் கடந்த சீசன்களில் விளையாடிய பெங்களூர் அணியைப் போலவே காணப்படுகின்றது.
துடுப்பாட்டம் நடச்சத்திர வீரர்களோடும் பந்துவீச்சு ஊகிக்க முடியாதவாறும்.

முதலாவது IPL இல் அரையிறுதிவரை முன்னேறிய பஞ்சாப் அணி அதற்குப் பின் ஒரேயொரு தடவை 2014இல் இறுதிப்போட்டிக்கு வந்திருந்தது. அடிக்கடி தலைவர்களை மட்டுமன்றி அணியின் ஒட்டுமொத்த வீரர்களையுமே மாற்றிவருவது பழமையானது.

எவ்வாறு இருப்பினும்  இம்முறையாவது பஞ்சாப் அணி தனது கன்னி  ஐபிஎல் கிண்ணக் கனவை நனவாக்குமா? எதிர்பார்ப்புடன் ஜபில் 11ஆவது சீசனுக்காக

தர்ஷன் யோகேஸ்வரன் - இன்பர்சிட்டி, பருத்தித்துறை

ஞாயிறு, 25 மார்ச், 2018

நிரபராதி என்று BCCI விடுவித்த ஷமி - பல பெண்களுடனான தகாத உறவை ஒத்துக்கொண்டார் !

சர்ச்சைகளின் நாயகனாக இந்தியக் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஷமி தொடர்ந்து வருகிறார்.
படம் : Free Press Journal
அண்மையில் மனைவியினால் போலீஸில் முறைப்பாடு செய்யப்பட்ட இவரைக் குற்றமற்றவர் என்று BCCI - இந்தியக் கிரிக்கெட் சபை தீர்மானித்து ஊதிய ஒப்பந்தமும் வழங்கியிருந்தது.
எனினும் அடுத்த நாளே கார் விபத்தில் சிக்கினார் மொஹமட் ஷமி.
கடந்த நாட்களில் இந்தப் புகார்கள் + சர்ச்சைகளால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த ஷமி அதிலிருந்து மீண்டு வர டெஹ்ராடூனில் உள்ள தனது வழக்கமான பயிர்சியிடமான அபிமன்யு கிரிக்கெட் அகடமிக்கு பயிற்சிக்காக சென்றிருந்தார்.
 பயிற்சி நிறைவடைந்து டெஹ்ராடூனில் இருந்து டெல்லி திரும்பியபோது அவரது கார் ஒரு டிரக் வண்டியில் மோதி விபத்துக்குள்ளானது. எனினும் தலையில் சிறிய காயங்களோடு அவர் தப்பித்திருந்தார்.
இன்று காலை ஊடகங்களுக்கு வழங்கிய பெட்டியில் ஷமி மேலும் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
மனைவிக்குத் தெரியாமல் நிறைய பெண்களுடன் தொடர்பில் இருந்தது உண்மை தான் என இதில் மொஹமட் ஷமி பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.
மொஹமட் ஷமி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும், நிறைய பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் ஷமியின் மனைவி ஹசின் ஜகான் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்த நிலையில், அவர் இந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார்.
முக்கியமாக பாகிஸ்தானை சேர்ந்த அலீஷ்பா என்ற பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகவும், அவரை பார்க்கவே தென் ஆபிரிக்கக் கிரிக்கெட் தொடரை முடித்துவிட்டு டுபாய் சென்றதாகவும் அவர் இப்போது ஏற்றுக்கொண்டுள்ளார்.
எனினும், மனைவி சொன்னது போலவும் பல ஊடகங்களில் வெளியான தகவல்கள் போலல்லாமலும் அலீஷ்பாவிடம் இருந்து ஒரு ரூபாய் கூட பணம் வாங்கியதில்லை என அவர் தெரிவித்துள்ளார். 
சூதாட்டக் குற்றச்சாட்டு சந்தேகம் என்று இது கருதப்பட்டாலும், குறித்த விடயம் அவரது குடும்ப பிரச்சனை என்பதால் இதுகுறித்து இந்தியக் கிரிக்கெட் சபை எவ்வித நடவடிக்கையும் எடுக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தனிப்பட்ட ஒழுக்கக் குறைபாடு என்னும் வகையில் BCCI ஷமி மீது நடவடிக்கை எடுத்திருக்கவே வேண்டும் என்று அதிருப்திகள் எழுந்துள்ளன.

சென்னை G.பிரசாத் 

வேகமான 100 ஒருநாள் சர்வதேச விக்கெட்டுகள் - உலக சாதனையை நெருங்கும் 19 வயது சுழல் புயல்

யுத்த பூமியில் மலர்ந்த செந்தாமரை என கிரிக்கெட் உலகில் வர்ணிக்கப்படும் ஆப்கானிஸ்தானின் இளம் சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கான், ஒருநாள் சர்வதேச போட்டிகளில் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை நெருங்கியுள்ளார்.

இதுவரை 43 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 99 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள ரஷீத் கான், பெரும்பாலும் இன்று நடைபெறும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான உலகக்கிண்ணத் தகுதிகாண் இறுதிப் போட்டியில் இந்த சாதனையை உறுதிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனை அவுஸ்ரேலியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வசம் இப்போது உள்ளது. அவர், 52 போட்டிகளில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார். இந்த சாதனையை ரஷீத் கான் இன்று தகர்ப்பார் என நம்பப்படுகின்றது.

ஒருநாள் சர்வதேச போட்டிகளில் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில், சக்லைன் முஷ்தாக் 53 போட்டிகளிலும், ஷேன் பொண்ட் 54 போட்டிகளிலும், பிரெட் லீ 55 போட்டிகளிலும், 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் 50 ஒருநாள் சர்வதேச விக்கெட்டுக்களை 26 போட்டிகளில் வீழ்த்திய ரஷீத் கான், கடைசியாக விளையாடிய 17 போட்டிகளில் 49 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் வியக்கவைத்துள்ளார்.

வ.சோழன் - யாழ்.நல்லூர்.

இதுவரை கிண்ணம் வெல்லாத டெல்லிக்கு இந்த IPL எப்படி அமையும்? - Delhi Daredevils - #IPL2018

ஐபிஎல் சீசன் 11 இன்னும் சில தினங்களில் கோலாகலமாக ஆரம்பிக்கவுள்ளது. 

இந்நிலையில் இம்முறை விளையாடவுள்ள, இதுவரை கிண்ணம் வெல்லாத  டெல்லி அணி முதலாவது ஐபிஎல் கிண்ணத்தை கைப்பற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனெனில் இம்முறை டெல்லி அணி திறமையான அணிவீரர்களை உள்வாங்கியுள்ளது. குறிப்பாக அனுபவமான வீரர்களை உள்வாங்கியுள்ளது. கடந்த சீசன்களில் டெல்லி அணி அனுபவம் குறைந்த இளம்வீரர்களை அதிகம் கொண்டிருந்தது.  இதனால் இந்திய தேசிய அணியில் துடுப்பாட்ட வீரராகவும், 19 வயதுக்குட்பட்ட அணியின் பயிற்றுவிப்பாளராகவும் தன்னை நிரூபித்துக்கொண்ட ராகுல் டிராவிட் பொறுப்பாக இருந்தும் கூட எதுவும் செய்ய முடியாத நிலை, இதுதான் டெல்லி அணியால் அரையிறுதிக்குக் கூட நுழைய முடியாமல் போனது என்றார்கள் டெல்லி ரசிகர்கள்.

2008, 2009 ஆகிய முதலிரு பருவகாலங்கள் தவிர டெல்லி அணியால் முதற்சுற்றை தாண்ட முடிந்தது 2012இல் மட்டும் தான்.

ஆனால் இம்முறை டெல்லி, முன்னாள் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ரிக்கி பொன்டிங்கின் பயிற்றுவிப்பு நெறியாள்கையில், அனுபவமான வீரர்களை அணியில் உள்வாங்கியுள்ளது. அந்தவகையில் இந்த சீசனில் விளையாடவுள்ள டெல்லி அணியின் துடுப்பாட்டம், வேகப்பந்துவீச்சு, சுழல் பந்துவீச்சு போன்றவற்றை விரிவாக ஒரு அலசல் பார்ப்போம்.

முதலில் டெல்லி அணியின் துடுப்பாட்டவரிசையை பார்த்தால் மீண்டும் தனது சொந்த ஊருக்கே திரும்பியுள்ள, அதுவும் தலைவராக மீண்டுள்ள  கெளதம் கம்பீர்,இளைய நட்சத்திரம்  ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பாண்ட், நமன் ஓஜா இவர்களுடன் அவுஸ்ரேலிய அதிரடி ஆட்டக்காரர் கிளென் மக்ஸ்வெல், நீயூசீலாந்து அதிரடி ஆரம்ப துடுப்பாட்டவீரர் கொலின் மூன்றோ, இங்கிலாந்து அதிரடி ஆரம்ப துடுப்பாட்டவீரர் ஜெசன் றோய் , இவர்களுடன் சகலதுறை அதிரடி ஆட்டகாரர்களான தென்னாபிரிக்காவின் கிறிஸ் மொறிஸ் , அவுஸ்ரேலியவீரர் டானியேல் கிறிஸ்டன் என ஒர் அதிரடி துடுப்பாட்டவரிசையை இம்முறை டெல்லி அணி கொண்டுள்ளது.
டெல்லி அணிக்கு இம்முறை இன்னொரு பலம் தலைமைத்துவம் தான். கடந்த சீசன்களில் டெல்லி அணிக்கு அனுபவம் நிறைந்த நிலையான அணித்தலைவர் இல்லை. ஆனால் இம்முறை டெல்லி அணியின் தலைவராக கெளதம் கம்பீர் செயற்படவுள்ளது. டெல்லி அணிக்கு பெரும் பலம் இக் கம்பீரே கொல்கத்தா அணிக்கு தலைமை தாங்கி இரண்டு முறை கிண்ணத்தை வென்று கொடுத்துள்ளார். என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

டெல்லி அணியில் சகலதுறை வீரர்களும் அதிகமாக காணப்படுகின்றனர். தென்னாபிரிக்காவின் கிறிஸ் மொறிஸ், அவுஸ்ரேலியாவின் கிறிஸ்டனும் மக்ஸ்வெல்லும் நீயூசீலாந்தின் கொலின் மன்றோ இவர்களுடன் தமிழகவீரர் விஜய் ஷங்கர், ஜெயந் யாதவ் மற்றும் இம்முறை நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலக்கிண்ணப்போட்டியில் கலக்கிய சகலதுறைவீரர் அபிஷேக் ஷர்மாவும் இவ்வணியிலே உள்ளார்.

டெல்லி அணி இம்முறை சிறந்த உலகத்தர வேகப்பந்துவீச்சாளர்களை கொண்டுள்ளது. குறிப்பாக தென்னாபிரிக்காவின் அண்மைக்கால நட்சத்திரம், உலகின் முதற்தர டெஸ்ட் வேகப்பந்துவீச்சாளர் ககிஸோ றபாடா இம்முறையும் அவர் ஏனைய அணி துடுப்பாட்டவீர்ரகளை பாடாய்ப்படுத்துவார். இவருடன் நீயூசீலாந்தின் வேகப்பொறி ட்ரெண்ட் போல்ட் போதாதுக்கு இந்தியாவின் டெஸ்ட் வேகப்பந்துவீச்சாளர் முகமட் ஷமியும் சகலதுறை வேகப்பந்துவீச்சாளர்களான கிறிஸ் மொறிஸ். எனவே இந்த சீசனில் டெல்லி வேகத்தில் எதிரணியை விரட்டும். என்பதில் ஜயமில்லை.

டெல்லி அணியில் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்களும் உள்ளார்கள். இந்திய சுழல் அமித் மிஸ்ரா, ஜெயந் யாதவ், நதீம், குர்தீராட் சிங் இவர்களுடன் சகலதுறை சுழற்பந்துவீச்சாளர் மக்ஸ்வெல்லும் உள்ளார்.
அத்துடன் எல்லோரும் எதிர்பார்த்துள்ள 17 வயது மட்டுமே நிரம்பிய நேபாள அணியின் சுழற்பந்து நட்சத்திரம் லமிச்சேனையும் ஆச்சரியமாக டெல்லி ஏலத்தில் பெற்றுக்கொண்டுள்ளது. இம்முறை உலகக்கிண்ணத் தகுதிகாண் சுற்றிலே அசத்திய இந்த டீன் ஏஜ் வீரர் இந்தியாவின் IPL களத்திலே என்ன சாதிப்பார் என்பதை அறிய எல்லோருமே ஆவலுடன் உள்ளனர்.
எனவே டெல்லி அணி சுழலிலும் மாஜாயாலம் நிகழ்த்தும்.

எனவே கடந்த சீசன்களில் டெல்லி அணி பெற்ற தோல்விகளை சரியான பாடமாக கற்றுக் கொண்டு இம்முறை அணியின் எல்லாக் கட்டமைப்பையும் சரி செய்து இந்த சீசனில் விளையாட உள்ளது. இம்முறையாவது டெல்லி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை வழங்காது விடுமா?
எதிர்பார்ப்புகளுடன் ஐபில் 11ஆவது  சீசனுக்காக

தர்ஷன் யோகேஸ்வரன் - இன்பர்சிட்டி, பருத்தித்துறை

சனி, 24 மார்ச், 2018

கோலியின் கோடி ரூபாய் பெறுமதியான வீட்டுக்கு நடந்தது என்ன?

இந்திய அணியின் தலைவர் விராட் கோலி பதிவுசெய்திருந்த 34 கோடி (இந்திய ரூபாய்) பெறுமதியான சொகுசு தொடர் மாடி குடியிருப்பொன்றை திடீரென இரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

மும்பையின் வோர்லி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் அதி உயர் சொகுசு உயர்மாடி கட்டிடமான ஒம்கார் 1973 என்ற தொடர்மாடி கட்டிடத்தின் 35வது மாடி கட்டிடத்தை விராட் கோலி, தனது காதல் மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் கொள்வனவு செய்வதற்காக பதிவுசெய்திருந்தார்.

எனினும் தற்போது குறித்த தொடர் மாடி கட்டிடத்தை வாங்க மறுத்துள்ள கோலி, குறித்த பதிவினையும் இரத்து செய்துள்ளார்.
குறித்த சொகுசு தொடர் மாடி குடியிருப்பை விராட் கோலி கடந்த வருடம் பதிவுசெய்திருந்தார். குறித் கட்டிடமானது அதி உயர் சொகுசு மற்றும் பாதுகாப்புக் கட்டமைப்புடன் அமைக்கப்படுவதுடன், ஒவ்வொரு குடியிருப்பும் வாங்குபவர்களின் விருப்பத்திற்கேற்ப சில மாற்றங்களும் செய்து கட்டமைக்கப்பட்டு வருகின்றது.

எனினும் குறித்த தொடர் மாடி குடியிருப்பை தவிர்த்துள்ள கோலி, திருமணத்துக்கு பின்னர் மும்பையில் உள்ள ரெஹேஜா லெஜன் என்ற சொகுசு தொடர் மாடி குடியிருப்பின் 40வது மாடியை மாதம் 15 இலட்சம் ரூபாவுக்கு வாடகைக்கு எடுத்துள்ளார்.

இதேவேளை இந்திய அணியின் மற்றுமொரு வீரரான யுவராஜ் சிங், விராட் கோலி ரத்துசெய்த ஒம்கார் 1973 கட்டிடத்தின் 29வது மாடியை 2016ம் ஆண்டு பதிவுசெய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி ரத்துச் செய்த காரணத்தை அறிந்துகொள்ள அந்தத் தொடர்மனையில் ஏற்கெனவே வீடுகளைப் பதிவு செய்துகொண்டவர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.
இதற்குப் பின்னர் அந்த சொகுசுத் தொடர் மாடி வீடுகளின் விற்பனை பாதிக்கப்படுமோ என்றும் கட்டட ஒப்பந்தக்காரர்கள் அஞ்சுகிறார்கள்.

- சென்னை G.பிரசாத் 

CSK - சென்னை சூப்பர் கிங்ஸ் - மூன்றாவது முறையாகவும் IPL கிண்ணத்தை சுவீகரிக்குமா? - CSK - ஒரு பார்வை #IPL2018

CSK - சென்னை சூப்பர் கிங்ஸ் - மூன்றாவது முறையாகவும் IPL கிண்ணத்தை சுவீ கரிக்குமா? - CSK - ஒரு பார்வை #IPL2018

இவ்வருடம் நடக்கவுள்ள 11 ஆவது ஐபிஎல் - IPL 2018 தொடரில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வந்து விளையாடவிருக்கும் சென்னை அணி எப்படி?
ஓர் அலசல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 முறை தோனி தலைமையில் IPL கிண்ணம் கைப்பற்றியுள்ளது. ஆனால் 2015 ஆண்டில் ஏற்பட்ட சூதாட்ட, போட்டி நிர்ணயக் குற்றச்சாட்டுக்கள் காரணமாக சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு 2 வருடத்தடை விதிக்கப்பட்டதால் கடந்த இரண்டு சீசன்களில் இவ்விரண்டு அணிகளும் விளையாட முடியாமல் போனது. இந்த சீசனில் இவ்விரண்டு அணிகளுமே மீண்டும் வந்து விளையாடவுள்ளன. இது சென்னை ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி

உலகம் முழுவதும் வாழும் ஏராளமான தமிழ் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சென்னை அணி தமக்கேயான அணி என்பது போல ஒரு தனியான பாசமுண்டு. கடந்த இரண்டு ஐபிஎல் தொடர்களில் இல்லாத ஆர்வம் இம்முறை இந்த ரசிகர்களுக்கு இப்போதே ஏற்பட்டிருப்பதற்கான காரணம் மஞ்சள் சட்டை அணியான சென்னையின் மீள்வருகையே.

சென்னை அணி இவ்வருடத்திற்கான ஐபிஎல் ஏலத்தில் திறமையான வீரர்களை உள்வாங்கவில்லை எனவும் ஒப்பீட்டளவில் வயதில் மூத்த வீரர்களையுமே வாங்கியதாகவும் CSK ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் தமது ஆதங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக தமிழகவீரர்  ரவிச்சந்திரன் அஸ்வினை ஏலத்தில் சென்னை வாங்கவில்லை. அத்தோடு சென்னை அணியில் தமிழக வீரர்களை பெருமளவு உள்வாங்கவில்லை என்பதும் சென்னை ரசிகர்களுக்கு வருத்தமாக அமைந்தது.

அஷ்வின் இதுபற்றி பகிரங்கமாகவே தனது மனவருத்தத்தைப் பதிவு செய்திருந்தார். அவர் மட்டுமன்றி அண்மைய கடைசிப் பந்து கதாநாயகன் தினேஷ் கார்த்திக்கும் CSKக்காக விளையாட முடியாமல் போகும் தனது மனவருத்தத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
எனினும் அஷ்வின் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கும், கார்த்திக் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் தலைமை தாங்கவுள்ளனர்.

இவர்கள் மட்டுமன்றி அண்மைக்காலத்தில் பிரகாசித்த மேலும் சில தமிழக இளைய வீரர்கள் வொஷிங்டன் சுந்தர், விஜய் ஷங்கர் ஆகியோரையும் ஏலத்தில் பெற சென்னை சூப்பர் கிங்ஸ் முயலவில்லை.

இவ் வருடம் விளையாடவுள்ள சென்னை அணியின் துடுப்பாட்டம், வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு, களத்தடுப்பு போன்றவற்றை விரிவாக ஆராய்ந்து பார்ப்போம்.

சென்னை அணியின் துடுப்பாட்டவரிசை ரெய்னா, அம்பதி ராயுடு, தமிழக வீர்ர முரளி விஐய், கேதார் யாதவ், தோனி, மற்றுமொரு தமிழக வீரர்  ஜெகதீசன், அவுஸ்திரேலிய அதிரடி வீரர் ஷேன் வொட்சன், சாம் பில்லிங்ஸ், தென் ஆபிரிக்க அணித்தலைவர்  டூ பிளேஸி  என நீண்டு செல்கின்றது. ஆனால் முன்னைய சென்னை அணியின் பிரண்டன் மக்கலம், டுவைன் ஸ்மித் போன்ற அதிரடி வீரர்களை தவறவிட்டமை அணிக்கு பின்னடைவே. ஏனெனில் இவ்வருடம் விளையாடவுள்ள சென்னை அணியின் துடுப்பாட்டவரிசையில் அதிரடி துடுப்பாட்டவீரர்களாக ரெய்னா, தோனி, வொட்சன் மட்டுமே உள்ளனர். இது சென்னைக்கு சற்று பின்னடைவு தான். 
சகலதுறைவீரர்களை பொறுத்தவரையில் மேற்கிந்திய தீவுகள் வீரர் டுவைன் பிராவோ, அவுஸ்ரேலிய வீரர் வொட்சன், ரவீந்தீர ஜடேஜா மற்றும் தீபக் சாகர் போன்றோர் இவ்வணியில் உள்ளனர். 

இருப்பினும் இதிலும் சென்னைக்கு சிக்கல் தான் ஏனெனில் ஜடேஜா முழுமையான உடற்தகுதியுடன் உள்ளாரா என்ற கேள்வியுள்ளது. நியூசீலாந்தின் மிச்சேல் சண்ட்னர் சத்திர சிகிச்சை காரணமாக இம்முறை விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அணியின் வேகப்பந்து வீச்சுவரிசையை பார்த்தால் அதுதான் பின்னடைவே. கடந்த சீசன்களில் சென்னை அணியில் விளையாடிய  வேகப்பந்துவீச்சாளர்கள் ஊதாநிற தொப்பியை வென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணம் - மோகித் ஷர்மா. ஆனால் இந்த சீசனில் வேகப்பந்துவீச்சு வரிசை தான் சென்னைக்கு தலையிடியாக இருக்கும் போல. டுவைன் பிராவோவும், வொட்சனும் தான் சென்னை அணியில் அனுபவமான (மித) வேகப்பந்துவீச்சாளர்கள். இவர்களை விடுத்து இளம் வீரர்கள் அண்மையில் இந்திய அணியில் கலக்கி வரும் ஷர்துல் தாகூர், தீபக் சாகர் மற்றும் ஐபிஎல் போட்டியில் இதுவரை ஒரு போட்டி கூட விளையாடாத தென்னாபிரிக்காவின் லுங்கி ங்கிடி, மற்றும் இங்கிலாந்தின் மாக் வூட் ஆகியோர் தான் உள்ளனர் என்பது சென்னையின் வேகப்பந்துவீச்சு வரிசையில் பின்னடைவை ஏற்படுத்துகின்றது.

எனினும் சென்னை அணியில் சுழல் மாயாஜாலத்திற்கு பஞ்சம் இல்லை. இவ்வணியில் சுழற்பந்துவீச்சாளர்கள் குவிந்து காணப்படுகின்றார்கள். ரவீந்தீர ஜடேஜா, ஹர்பஜன் சிங், கரன் ஷர்மா மற்றும் தென்னாபிரிக்காவின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் இம்ரான் தாகீர் இவர்களை விட பகுதி நேரத்தில் சுழலில் விக்கெட்டுகளை எடுக்கும் சுரேஸ் ரெய்னா, கேதார் யாதவ் ஆகியோரும் சென்னை அணியின் சுழலுக்கு பலம் சேர்க்கின்றது. 

அத்துடன் சென்னை அணியில் அதிகமான சிறந்த களத்தடுப்பு வீரர்கள் உள்ளனர். குறிப்பாக மகேந்திரசிங் தோனி , ரெய்னா, ஜடேஜா, டுபிளிசிஸ், பிராவோ எனப் பல சிறந்த களத்தடுப்பு வீரர்கள் சென்னை அணியில் உள்ளனர்.


இதேபோல, சென்னை அணியில் என்ன குறைகள் இருந்தாலும் மகேந்திர சிங் தோனி என்ற ஒரு வார்த்தை போதும், சென்னை அணி கிண்ணத்தை கைப்பற்றி வர  அவரது தலைமைத்துவம், அவரது அனுபவம் சென்னை அணிக்கு மிக மிகப் பெரும் பலம்.
Finisher என்ற அந்த மந்திர வார்த்தை தான் ரசிகர்களின் ஏக நம்பிக்கை.
அணியை எந்தக் கட்டத்திலும் தூக்கி நிமிர்த்திவிடக் கூடியவராக 'தள்ள தோனி இருக்கிறார்.

 நடைபெறவுள்ள IPL தொடரில் சென்னை அணி மூன்றாவது முறையாகவும் கிண்ணத்தை கைப்பற்றுமா? 
உங்களுடன் நானும் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன். ஐபில் 11 ஆவது சீசனுக்காக..

தர்ஷன் யோகேஸ்வரன் - இன்பர்சிட்டி, பருத்தித்துறை

Related Posts Plugin for WordPress, Blogger...