இளம் வீரர்களால் வெற்றியைச் சுவைத்த ஹைதராபாத் ! வயதேறும் வீரர்கள், தடுமாறும் தோனி - மூன்றாவது தோல்வி #CSK க்கு #IPL2020

 நீண்ட நாட்களுக்கு பிறகு மகேந்திரசிங் தோனி பெஸ்ட் பினிஷர் அவதாரம் எடுப்பார் என்று சென்னை ரசிகர்கள் நம்பியிருக்க, அவரும் சென்னையின் துடுப்பாட்ட வீரர்களும்  சில தடுமாற்றங்களை சந்தித்ததால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் நேற்று வெற்றிபெற்றது.



நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் முதலில் களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முதல் வரிசை துடுப்பாட்ட வீரர்கள் ஜானி பேர்ஸ்டோ, டேவிட் வோர்னர் போன்றவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து திரும்பியதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கை ஓங்கியிருந்தது. இருப்பினும், இளைய துடுப்பாட்ட வீரர்கள் பிரியம் கார்க், அபிஷேக் ஷர்மா சிறப்பாக இணைப்பாட்டம் அமைத்து ரன் மழை பொழிந்தனர்.



பிரியம் கார்க் 51* ஓட்டங்களும், அபிஷேக் ஷர்மா 31 ஓட்டங்களும் எடுத்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் எண்ணிக்கையை  164ஆக உயர்த்தினர். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் பிரியம் கார்க், தனது முதல் ஐபிஎல் அரை சதத்தை கடந்தார். அதேபோல், மற்றொரு இளம் வீரர் அபிஷேக் ஷர்மா இவருடன் இணையை அமைத்து கூட்டாக 77 ரன்களை குவித்தனர்.

கடைசி 4 ஓவர்களில் 53 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினர். 

தனது சாதனைக்குரிய 194ஆவது போட்டியில் களமிறங்கிய மகேந்திரசிங் தோனி தொடக்கத்தில் மிகவும் தடுமாறி ஓட்டங்களை குவிக்கத் தவறினாலும், இறுதியில் அதிரடியாக விளையாடினார். நேற்றைய போட்டியில் முன்னரைப் போல பெஸ்ட் பினிஷராக மாறுவார் என்று எதிர்பார்த்த நிலையில், கடைசி நேரத்தில் சந்தித்த சிறு தடுமாற்றத்தால் சென்னை அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.


இறுதியாக மொத்தம், 36 பந்துகளில் 47 ஓட்டங்களைப் பெற்றுகொண்டார். மகேந்திரசிங் தோனி.

கடைசி வரிசையில் களமிறங்குகிறார் என விமர்சனங்கள் எழுந்த நிலையில், நேற்றைய போட்டியில் 5ஆவது வீரராகக் களம் கண்டார். ரவிந்திர ஜடேஜாவுடன் இணைந்து 72 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நிதானமாக ஓட்டங்கள் சேர்த்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 102 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.


கடைசி 18 பந்துகளில் 63 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் ரவிந்திர ஜடேஜா, மகேந்திரசிங் தோனி இணைப்பாட்டம்  ஆனது அதிரடியாக விளையாடி ஓட்டங்களை குவித்தது. ரவிந்திர ஜடேஜா அதிரடியாக ஆடிசென்னை அணியை வெற்றிக்கு நெருக்கமாக கொண்டு சென்றனர். 

இருப்பினும், அவர் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், மகேந்திரசிங் தோனி அதிரடி காட்டத் தொடங்கினார். கடைசி இரண்டு ஓவர்களுக்கு 44 ஓட்டங்கள் தேவைப்பட்டது.



புவனேஸ்வர் குமார் 19ஆவது ஓவரின் முதல் பந்தை வீசிய நிலையில், காலில் காயம் ஏற்பட்டு, பெவிலியன் திரும்பினார். இதனால், கலீல் அஹமது மாற்றுப் பந்து வீச்சாளராகச் செயல்பட்டார். அந்த ஓவரில் தோனி ஒரு சிக்ஸர், பவுண்டரி அடித்ததால், கடைசி ஓவருக்கு 23 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இளம் பந்துவீச்சாளர்  அப்துல் சமதை டேவிட் வோர்னர் இறுதி ஓவருக்காகத் தெரிவு செய்தது பலருக்கும் ஆச்சரியத்தை வழங்கியது.

அவர்  சாமர்த்தியமாகப் பந்து வீசி சென்னை அணியை 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்தார்.


மகேந்திரசிங் தோனி முன்கூட்டியே அதிரடி காட்டியிருந்தால், சென்னை அணி ஹாட்ரிக் தோல்வியைத் தவிர்த்திருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

தோனியின் வயது முதிர்வும் அவரதும சக முப்பது வயது தாண்டிய சென்னை வீரர்களதும் துடுப்பாட்டத் தடுமாற்றம் தொடர்கிறது.


நேற்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரராக ப்ரியம் கார்க் தெரிவானார்.

கருத்துரையிடுக

புதியது பழையவை