தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

வியாழன், 13 டிசம்பர், 2018

பேர்த் எங்களுக்கே அதிக சாதகம் - அவுஸ்திரேலியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விராட் கோலி


இந்திய-அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்து, தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை பேர்த்தில் தொடங்குகிறது. இந்நிலையில்  இந்த டெஸ்ட் போட்டி குறித்து இந்திய அணியின் தலைவர் விராட் கோலி

"பேர்த் டெஸ்டில் எங்களுக்குத்தான் அதிக அளவில் வெற்றி  வாய்ப்புள்ளது. இதில் எங்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது.

உண்மையிலேயே அவுஸ்திரேலியா பேர்த் போன்ற, வேகமான எகிறும் பந்துகளுக்கு உகந்த அதன் சொந்த மைதானத்தில் ஆதிக்கம் செலுத்தக்கூடியது.

எனினும் அவுஸ்திரேலியாவில் உள்ள மற்ற ஆடுகளங்களை விட, பேர்த் அந்த அணிக்கு  அதிக அளவில் சாதகமாக இருக்கும். ஆனால், எங்களுக்கும் அதே அளவு  சமமான வாய்ப்பு உள்ளது.

தற்போதைய காலக்கட்டத்தில் க்ரீன் பிட்ச்களை கண்டு நாங்கள் பதற்றமடையவில்லை. அதைவிட ஆர்வம்தான் அதிகமாக உள்ளது.

ஏனென்றால், நாங்கள் சிறப்பாக பந்து வீசி வருகிறோம். எங்களிடமும் சிறந்த பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.20 விக்கெட்டுக்களை வீழ்த்தும்போது, அவர்களுடைய துல்லிய பந்து வீச்சில் அதிக நம்பிக்கை உண்டாகும்.

வேகப்பந்து வீச்சாளர்கள் உச்சக்கட்ட திறமையோடு இருக்கும்போது, அணிக்கு அது சிறந்த விஷயமாகும்."

 இதனால் எகிறும் ஆடுகளமாக இருந்தாலும், வேகப்பந்துக்கு ஆதரவான ஆடுகளமாக இருந்தாலும் கூட இந்தியாவுக்கு சாதகமாக பேர்த் அமையும் என்று நம்பிக்கையுடன் கூறினார் கோலி.

2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அஷ்வின், ரோஹித் ஷர்மா இல்லை ; அவுஸ்திரேலியா அதே அணி !!

நாளை மேற்கு அவுஸ்திரேலியாவின் பேர்த்  நகரில் ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா அதே அணியை ஈடுபடுத்தவுள்ளதாக அறிவித்திருக்கும் நிலையில், இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் கட்டாயமாகச் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அடிலெய்ட்டில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றாலும் கூட, ரோஹித் ஷர்மா மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோருக்கு ஏற்பட்ட உபாதைகள் மூலமாக இருவரும் விளையாடமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ரோஹித் ஷர்மாவின் இடத்தில் துடுப்பாட்ட வீரர் ஹனுமா விஹாரி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை, நாளைய ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளருக்கு அதிக சாதகத்தை வழங்கும் என எதிர்பார்ப்பதால், சிலவேளைகளில் புவனேஷ்குமார் அணியில் சேர்த்துக்கொள்ளப்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அப்படியில்லாமல் துடுப்பாட்டத்தில் வலுவை அதிகரிக்கவும் ஒரு சுழற்பந்து வீச்சாளரையாவது வைத்திருக்கவும் விரும்பி ரவீந்திர ஜடேஜாவை அணியில் சேர்க்கவும் இடமுள்ளது.


அவுஸ்திரேலிய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.


செவ்வாய், 11 டிசம்பர், 2018

அடிலெய்ட் டெஸ்ட் - அவுஸ்திரேலியாவின் போராட்டத்தை முறியடித்து சாதனை வெற்றி பெற்ற இந்தியா

 அவுஸ்திரேலியா இந்திய அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி 31 ஓட்டங்களால் விறுவிறுப்பான வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் விராட் கோலி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தார். அவுஸ்திரேலிய அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மார்க்கஸ் ஹரிஸ் டெஸ்ட் போட்டிகளில் தனது அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டார்.

முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் இருந்தே தமது விக்கெட்டுகளை பறிகொடுக்கத் தொடங்கியது. எனினும், ஒரு பக்கத்தில் இருந்து கொண்டு சிறப்பாக துடுப்பெடுத்தாடிய செட்டேஸ்வர் புஜாரா டெஸ்ட் போட்டிகளில் தனது 16ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். புஜாரா 123 ஓட்டங்கள் பெற்றிருந்த போது துரதிஷ்டவசமாக ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்க இந்திய அணி 250 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகள் இழந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

இரண்டாம் நாளின் முதல் பந்திலே மீதி இருந்த விக்கெட்டையும் பறிகொடுக்க இந்திய அணி முதல் இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 250 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் ஜோஷ் ஹேசல்வூட் 3 விக்கெட்டுகளையும் ஸ்டார்க், லியொன் மற்றும் கமின்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி இந்திய பந்து வீச்சாளர்களின் துல்லியமான பந்து வீச்சில் குறைந்த ஓட்டங்களுக்கு அடுத்தடுத்து தமது விக்கெட்டுகளை பறிகொடுத்தது. குறிப்பாக முதலாவது ஓவரிலே ஆரோன் பின்ஞ்சின் விக்கெட் கைப்பற்றப்பட்டிருந்தது. இதனால், அவுஸ்திரேலிய அணியினர் தமது முதல் இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 235 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டு இந்திய அணியை விட 15 ஓட்டங்களால் பின்தங்கியிருந்தனர்.

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டத்தில் டிரவிஸ் ஹெட் 72 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார். இத்திய அணியின் பந்து வீச்சில் பும்ரா மற்றும் அஷ்வின் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீதமும் இஷாந்த் ஷர்மா மற்றும் மொஹமட் ஷமி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதமும் கைப்பற்றினர்.

இந்திய விக்கெட் காப்பாளர் ரிஷாப் பான்ட் 6 பிடிகளை எடுத்தார். இதன் மூலம் இந்தியா சார்பாக ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக பிடிகளை எடுத்த தோனியின் சாதனையை சமப்படுத்தினார்.

முதல் இன்னிங்ஸில் பெற்ற 15 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி சிறப்பான ஆரம்பம் மற்றும் முன்வரிசை வீரர்களின் பங்களிப்புகளின்  மூலம் சகல விக்கெட்டுகளையும் இழந்து 307 ஓட்டங்களை பெற்று அவுஸ்திரேலிய அணிக்கு 323 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இந்திய அணி சார்பாக இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டும் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் முறையே 71 மற்றும் 70 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக் கொடுத்தனர். சிறப்பாக பந்து வீசிய அவுஸ்திரேலிய அணியின் சுழல் பந்து வீச்சாளர் நேதன் லயொன் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். மிட்செல் ஸ்டார்க் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார்.

323 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நான்காம் நாள் நிறைவில் 104 ஓட்டங்களுக்கு 4 முக்கியமான விக்கெட்டுகளை இழந்திருந்தது.

வெற்றி பெறுவதற்கு அவுஸ்திரேலிய அணிக்கு மேலதிகமாக 219 ஓட்டங்களும் இந்திய அணி 6 விக்கெட்டுகள் கைப்பற்ற வேண்டிய நிலையிலும்  இறுதி நாள் ஆட்டத்தில் களமிறங்கிய இரு அணிகளும் தத்தமது அணிகளின் வெற்றிக்காக மும்முரமாக செயற்பட்டனர்.

முக்கியமான துடுப்பாட்ட வீரர்கள் ஆட்டமிழந்தாலும் பந்துவீச்சாளர்கள் இறுதிவரை பொறுமையாகத் துடுப்பாடி தம் போராட்ட குணத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் பெரிய அழுத்தத்தை வழங்கியிருந்தனர்.

எனினும், இந்திய அணியின் பந்து வீச்சு ஆஸி வீரர்களின் துடுப்பாட்டத்தை விடவும் ஆதிக்கம் செலுத்தியதால் அவுஸ்திரேலிய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 291 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. இதனால் இந்திய அணி 31 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.


இரண்டாவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டத்தில் ஷோன் மார்ஷ் 60 ஓட்டங்களும் அணித்தலைவர் டிம் பெய்ன் 41 மற்றும் நேதன் லயொன் ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக பும்ரா, அஷ்வின் மற்றும் ஷமி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக புஜாரா தெரிவானார்.

இந்தியா அவுஸ்திரேலியாவில் பெற்ற ஆறாவது டெஸ்ட் வெற்றி இது என்பதோடு அடிலெய்டில் 2003ஆம் ஆண்டுக்குப் பின் பெற்ற முதலாவது வெற்றியாகவும் அமைகிறது.

இவ்வெற்றியின் மூலம் விராட் கோலி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று இது வரையில் ஒரு போட்டியிலேனும் தோல்வியடையாத தலைவராக தனது சாதனையை தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 20 போட்டிகளில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள கோஹ்லி அவற்றில் 17 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன் மூன்று போட்டிகள் சமநிலையில் முடிந்துள்ளது.

முதலாவது போட்டியில் பெற்றுக்கொண்ட வெற்றியுடன் இந்தியா நம்பிக்கையுடன் பேர்த் மைதானத்தில் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்குத் தயாராகிறது. அவுஸ்திரேலியா தங்களுக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கின்ற ஆடுகளத்தில் காத்திருக்கிறது.

ஞாயிறு, 25 நவம்பர், 2018

மூன்று நாளில் முடிந்த கதை, வங்கச் சுழலில் சிக்கிச் சுருண்ட மேற்கிந்தியத் தீவுகள்

இரண்டாம் நாளில் இருந்து சுழற்பந்து வீச்சுக்கு சாதகத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்பட்ட சிட்டகொங் ஆடுகளத்தில் நேற்று மூன்றாவது நாளிலேயே முதலாவது டெஸ்ட் போட்டி முடிவுக்கு வந்தது,

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 64 ஓட்டங்களால் வெற்றி பெற்று இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. மேலும் இப்போட்டியின் சிறப்பம்சமாக பங்களாதேஷ் அணியின் தலைவர் ஷகிப் அல் ஹசன் உபாதையிலிருந்து மீண்டும் அணிக்குத் திரும்பியதும்,  நயீம் ஹசன் எனும் இளம் சுழல் பந்துவீச்சாளர் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி மொமினுல் ஹக் பெற்றுக் கொண்ட சதத்தின் உதவியோடு சகல விக்கெட்டுகளையும் இழந்து 324 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பங்களாதேஷ் அணி சார்பாக மொமினுல் ஹக் அதிக பட்சமாக 120 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். இது அவர் டெஸ்ட் போட்டிகளில் பெற்ற 8 ஆவது சதம் மட்டுமின்றி இவ்வாண்டில் பெற்றுக் கொண்ட 4 ஆவது சதம் ஆகும். மேலும் பங்களாதேஷ் வீரர் ஒருவர் டெஸ்ட் போட்டிகளில் பெற்றுக் கொண்ட அதிக சதங்கள் என்ற தமீம் இக்பாலின் சாதனையை சமப்படுத்தியதோடு, நடப்பாண்டில் அதிக சதம் பெற்ற வீரர் என்ற சாதனையை விராட் கோலியுடன் சமப்படுத்தியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக பந்து வீச்சில் ஜோமெல் வொரிக்கன் மற்றும் ஷன்னோன் கேப்ரியல் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்சுக்காக துடுப்பாடக் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுகளை இழந்து 88 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. எனினும் 6 ஆவது விக்கெட்டுக்காக ஹெட்மயர் மற்றும் டௌரிச் ஆகியோர் இணைந்து 92 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி  பங்களாதேஷ் அணியை விட 78 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 246 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

ஹெட்மயர் அதிரடியாக துடுப்பாடி 47 பந்துகளில் 63 ஓட்டங்களையும் டௌரிச் ஆட்டமிழக்காமல் 63 ஓட்டங்களையும் பெற்று அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். பங்களாதேஷ் அணி சார்பாக பந்துவீச்சில் அறிமுக வீரர் நயீம் ஹசன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்ததுடன் அறிமுக போட்டியில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய இளம் வீரர் என்ற சாதனையை நிலைநாட்டியிருந்தார். அவருக்கு வயது 17 வருடங்கள் 356 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அது தவிர ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

78 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த பங்களாதேஷ் அணி நேற்றைய (23) இரண்டாம் நாள் ஆட்ட நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 55 ஓட்டங்களை மட்டுமே பெற்று மோசமான துடுப்பாட்ட பிரதியை வழங்கியிருந்தது. எனினும் இன்றைய தினம் (24) அதனை சீர்செய்யும் நோக்கில் தொடர்ந்து துடுப்பெடுத்தாட களமிறங்கிய பங்களாதேஷ் அணி மேற்கிந்திய தீவுகளின் துல்லியமான பந்து வீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் மேலதிகமாக 70 ஓட்டங்களைப் பெற்று மொத்தமாக 203 ஓட்டங்கள் முன்னிலையுடன் 125 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

துடுப்பாட்டத்தில் மஹ்மதுல்லா பெற்றுக் கொண்ட 31 ஓட்டங்களை தவிர ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடனே ஆட்டமிழந்தனர். சிறப்பாக பந்து வீசிய தேவேந்திர பிஷூ நான்கு விக்கெட்டுகளையும் ரோஸ்டன் சேஸ் 3 மற்றும் வொர்ரிகன் 2 விக்கெட்டுகள் என கைப்பற்றியிருந்தனர்.

204 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி பங்களாதேஷ் சுழல் பந்து வீச்சினை எதிர் கொள்ள முடியாமல் சகல விக்கெட்டுகளையும் இழந்து 139 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 64 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. துடுப்பாட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக சுனில் அம்ப்ரிஸ் 43 ஓட்டங்களையும் வொர்ரிகன் 41 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டதோடு ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

பங்களாதேஷ் அணி சார்பாக தைஜுல் இஸ்லாம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்ததுடன் மெஹ்தி ஹசன் மிராஸ் மற்றும் ஷகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர். இரண்டாவது இன்னிங்சில் கிரன் பவலின் விக்கெட்டை கைப்பற்றிய ஷகிப், டெஸ்ட் போட்டிகளில் தனது 200 ஆவது விக்கெட்டாக அதனை பதிவு செய்திருந்தார். \

மேலும் டெஸ்ட் போட்டிகளில் 3000 ஓட்டங்களையும் 200 விக்கெட்டுகளையும் வேகமாக கடந்த வீரராகவும் சாதனை படைத்திருந்தார். அவர் 54 போட்டிகளில் இச்சாதனையை நிலைநாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆட்ட நாயகனாக சதம் பெற்ற பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட வீரர் மொமினுல் ஹக் தெரிவானார். தொடர் வெற்றியாளரை தீர்மானிக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

4வது முறையாக உலகக்கிண்ணம் வென்ற அவுஸ்திரேலிய மகளிர் அணி !!

அவுஸ்திரேலிய மகளிர் அணி தங்களுடைய நான்காவது உலக T20 கிண்ணத்தைத் தனது வசப்படுத்தியுள்ளது.

இந்திய, இலங்கை நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா அணிகள் மோதின.

னநாயகி சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி   19.4 ஓவரில் சகல விக்கெட்டுக்களை இழந்து 105 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
டானியல் வியாட் 43 ஓட்டங்களை எடுத்தார்.

106 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலகுவான இலக்குடன் அவுஸ்திரேலியா அணி  களம் இறங்கியது. ஆரம்பத் துடுப்பாட்ட  வீராங்கனைகள் அலிஸ்ஸா ஹீலி (22) மற்றும் மூனே (14) சிறப்பான தொடக்கம் கொடுக்க,
அதன்பின் வந்த கார்ட்னெர் 33 ஓட்டங்களையும்  அணித்தலைவி மெக் லானிங் 28 ஓட்டங்களையும் பெற 15.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 106 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா  அபார வெற்றி பெற்று உலகக்கிண்ணத்தை மீண்டும் வசப்படுத்திக்கொண்டது.


ஆஷ்லே கார்டனர் பந்துவீச்சிலும்  சிறப்பாகப் பிரகாசித்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

இவரே போட்டியின் சிறந்த வீராங்கனையாகவும் தெரிவானார்.
தொடரின் சிறந்த வீராங்கனையாக அலிஸ்ஸா ஹீலி தெரிவானார்.

இந்த வெற்றியின் மூலம்  அவுஸ்திரேலியா 4-வது முறையாக உலக டி20  கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.கடைசியாக  நடந்த 5  தொடர்களில் அவுஸ்திரேலிய அணி 4 முறை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2016இல் அவுஸ்திரேலிய மகளிர் அணி இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணியுடன் தோல்வி கண்டிருந்தது.
இம்முறை அந்த அணியை அரையிறுதியில் தோல்வியடையச் செய்திருந்தது.


வியாழன், 22 நவம்பர், 2018

கோலியின் சாதனையை முறியடித்த தவான் !

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய T20 போட்டியில் இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஷீக்கார் தவான், விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.

பிரிஸ்பேனில் நேற்று  நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் T 20 போட்டியில் இந்தியா 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது.

இந்தப் போட்டியில் தொடக்க வீரர் ஷீக்கார் தவான் அதிரடியாக 42 பந்துகளில் 76 ஓட்டங்களை சேர்த்தபோதும் அது அணியின் வெற்றிக்கு உதவாமல் போனது.

இருப்பினும் அவரது இந்த ஆட்டம் அணித்தலைவர் விராட் கோலியின் சாதனை ஒன்றை முறியடித்துள்ளது.

T 20 வரலாற்றில் ஒரே ஆண்டில் அதிக ஓட்டங்கள் பெற்றவர்கள் பட்டியலில் 641 ஓட்டங்களுடன் விராட் கோலி முதலிடத்தில் இருந்தார்..

இவர் இந்தச் சாதனையை 2016ம் ஆண்டு படைத்திருந்தார். தற்போது ஷீக்கார் தவான் இந்த சாதனையை முறியடித்துள்ளார்.

தவான் இந்த ஆண்டில் இதுவரை 648 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானின் ஃபக்கர் சமான் 576 ஓட்டங்களுடன் மூன்றாவது இடத்திலும்,

ரோஹித் ஷர்மா 567 ஓட்டங்களுடன்  நான்காவது இடத்திலும் உள்ளனர்.

எனினும் ரோஹித் ஷர்மா இன்னொரு முக்கிய சாதனையை நாளை நிகழ்த்தக்கூடிய வாய்ப்புள்ளது.
T 20 சர்வதேசப் போட்டிகளில் அதிகூடிய மொத்த ஓட்டங்களை பெற்றவருக்கான சாதனையே அதுவாகும்.

நியூ சீலாந்து அணியின் மார்ட்டின் கப்டில் வசமுள்ள சாதனையை நாளை ரோஹித் ஷர்மா முறியடிக்க இன்னும் 65 ஓட்டங்களைப்  பெறவேண்டியுள்ளது.
நாளை அவர் formகுத் திரும்பி அதை முறியடிப்பார் என இந்திய ரசிகர்கள் விரும்புகிறார்கள்.




#AUSvIND - அவுஸ்திரேலிய இந்திய டெஸ்ட் தொடரின் அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு !!

இந்திய அணியுடனான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அவுஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அவுஸ்திரேலிய அணியுடன் 3 T20 போட்டிகள், நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது.

இதில் நேற்று நடைபெற்ற முதல் T20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் விறுவிறுப்பான வெற்றி பெற்றிருக்கும் நிலையில் இரு அணிகள் இடையேயான இரண்டாவது T 20 போட்டி நாளை மெல்பேர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் T 20 தொடரை தொடர்ந்து நடைபெற இருக்கும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளுக்கான அவுஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.


அண்மைய நாட்களில் உள்ளூர்ப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மார்க்கஸ் ஹரிஸ் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் க்றிஸ் ட்ரேமெய்ன் ஆகியோர் புதிய வீரர்களாக அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

நான்கு ஓட்டங்களால் அவுஸ்திரேலியா விறுவிறு வெற்றி !! கார்த்திக்கின் அதிரடி வீணானது

நேற்று அவுஸ்திரேலிய – இந்திய அணிகளுக்கு இடையில் பிரிஸ்பேனில் நடைபெற்ற முதலாவது T20 போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் இறுதிநேர அதிரடித் துடுப்பாட்டத்தையும் மீறி, அவுஸ்திரேலிய அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் விறுவிறுப்பான வெற்றி பெற்றுள்ளது.


டக்வர்த் லூவிஸ் முறைப்படி அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்த 174 (17) என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 17 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களை பெற்றதுடன், நான்கு ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி, அவுஸ்திரேலிய அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. இதன்படி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி மந்தமான ஓட்ட வேகத்துடன் ஓட்டங்களை பெற்றது.

ஆரம்ப வீரர் ஷோர்ட்டின் ஆட்டமிழப்பின் பின்னர் அணித் தலைவர் ஆரோன் பின்ச் உடன் இணைந்த கிரிஸ் லின், கலீல் அஹமட்டின் ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசி அணியின் ஓட்ட வேகத்தை அதிகரித்தார். பின்னர் குல்தீப் யாதவ் வீசிய அடுத்த ஓவரில் ஆரோன் பின்ச் 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அதிரடியாக 37 (20) ஓட்டங்களை பெற்ற கிரிஸ் லின் குல்தீப்பின் பந்தில் ஆட்டமிழந்தார்.


தொடர்ந்து ஜோடி சேர்ந்த மார்க் ஸ்டொய்னிஸ் மற்றும் கிளேன் மெக்ஸ்வேல் ஆகியோர் அதிரடியாக ஆடி இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை மிரட்டினர். இருவரும் இணைந்து 78 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற, அவுஸ்திரேலிய அணி 16.1 ஓவர்களில் 153 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இதன்போது மழைக் குறுக்கிட்டதன் காரணமாக அணிக்கு தலா 17 ஓவர்களாக போட்டி மட்டுப்படுத்தப்பட, அவுஸ்திரேலிய அணி 17 ஓவர்களில் 158 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. எவ்வாறாயினும் டக்வர்த் லூவிஸ் முறைப்படி இந்திய அணிக்கு 174 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அவுஸ்திரேலிய அணி சார்பில் கிளேன் மெக்ஸ்வேல் 24 பந்துகளுக்கு 4 சிக்ஸர்கள் அடங்கலாக 46 ஓட்டங்களை பெற்றதுடன், மார்க் ஸ்டொய்னிஸ் ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களை பெற்றார்.

பின்னர், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சிக்கர் தவான் அபாரமாக துடுப்பெடுத்தாட, ரோஹித் சர்மா (7), கே.எல்.ராஹுல் (13) மற்றும் அணித் தலைவர் விராட் கோஹ்லி (4) ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து தனியொருவராக இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்திய சிக்கர் தவான் அரைச்சதம் கடந்து 76 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இந்திய அணி வெற்றிபெறுவதற்கு 30 பந்துகளில் 65 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், துடுப்பெடுத்தாட களமிறங்கிய தினேஷ் கார்த்திக் வேகமாக ஓட்டங்களை குவிக்கத் தொடங்கினார். ரிஷாப் பாண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் குறைந்த பந்துகளுக்கு 51 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற, பாண்ட் 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.


போட்டியின் இறுதி ஓவரை மார்க் ஸ்டோய்னிஸ் வீச, 13 ஓட்டங்கள் என்ற நிலையில் இந்திய அணி  விளையாடியது. எனினும் முறையே மூன்றாம், நான்காம் பந்துகளில் குர்னால் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் ஆட்டமிழக்க இந்திய அணியின் வெற்றி கைநழுவியது. இறுதிப் பந்துக்கு குல்தீப் யாதவ் பௌண்டரி விளாசிய போதும், இந்திய அணி 4 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

இந்திய அணி சார்பில் இறுதியில் களமிறங்கி, அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை மிரட்டிய தினேஷ் கார்த்திக் 13 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 30 ஓட்டங்களை விளாசியிருந்தார். அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் அடம் சம்பா மற்றும் மார்க் ஸ்டொய்னிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக சம்பா தெரிவானார்.

இதேவேளை, அவுஸ்திரேலியா – இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20I போட்டி எதிர்வரும் 23ம் திகதி மெல்போர்னில் நடைபெறவுள்ளதுடன், மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில் அவுஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை வகிக்கின்றது.

16 பந்துகளில் 74 !! அசத்தல் அதிரடி ஆட்டம் ஆடிய மொஹமட் ஷெசாட்

2வது  T10 லீக் கிரிக்கெட் தொடர்  நேற்று (புதன் கிழமை) ஷார்ஜாவில்  தொடங்கியது. மொத்தம் 8 அணிகள் இந்த தொடரில் இம்முறை பங்கேற்கின்றன.

இதன் முதல் ஆட்டத்திலேயே அதிரடியான சிக்ஸர் மழையுடன் ஆப்கனிஸ்தானின் மொஹமட் ஷெசாட் களைகட்ட வைத்துள்ளார்.

இதன் முதல் போட்டியில் சிந்திஸ் அணியும்,ராஜ்புத்ஸ் அணியும் மோதியிருந்தன. முதலில் துடுப்பாடிய சிந்திஸ் அணி, 10 ஓவர்கள் முடிவில் அணித்தலைவர் ஷேன் வொட்சனின் அதிரடியால் 4 விக்கெட் இழப்பிற்கு 94 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக வொட்சன்  20 பந்துகளில் 42 ஓட்டங்கள் விளாசினார்.

இதையடுத்து ராஜ்புத்ஸ் அணி சார்பாக அந்த அணியின் தலைவர் ப்ரெண்டன் மக்கல்லம் மற்றும் மொஹமட் ஷெசாட் ஆகியோர் ஆரம்ப வீரர்களாக களமிறங்கினர். இருவரும், எதிரணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.

குறிப்பாக, மொஹமட் ஷெசாட் 16 பந்துகளில்  74 ஓட்டங்கள் குவித்தார். இதில், 8  சிக்சர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும்.
மறுமுனையில், மக்கல்லம் தனது பங்கிற்கு 8 பந்தில் 21 ரன்கள் எடுத்தார். இதில், 2 சிக்சர், 1 பவுண்டரி அடங்கும்.

மொஹமட் ஷெசாட் மற்றும் மக்கல்லம் ஆகியோரின் அதிரடி ஆரம்பத்தினால் 4 ஓவர்களில் 96 ரன்கள் எடுத்து ராஜ்புத்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.  மொஹமட் ஷெசாட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.


செவ்வாய், 20 நவம்பர், 2018

இலகுவான வெற்றியை பரிதாபமாகத் தோற்ற பாக். நியூசீலாந்துக்கு மயிரிழையில் மகத்தான வெற்றி !!


இலகுவாக வெல்ல வேண்டிய போட்டிகளை யாருமே நம்பாத விதத்தில் தோற்று தமது ரசிகர்களை அதிர்ச்சியிலும் கவலையிலும் உறைய வைப்பது பாகிஸ்தானிய அணிக்கு எப்போதுமே கைவந்த கலையாகும்.
சப்ராஸ் அஹமட்டின் தலைமையில் உருவாகிவரும் 'புதிய' பாகிஸ்தானிய அணியிலாவது ஒரு மாற்றம் இருக்கும் என்று ரசிகர்கள் நம்பியிருக்க, மீண்டும் அதே வியாதி தொடர்ந்துள்ளது.

அபுதாபியில் நேற்று முடிவடைந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் மிக இலகுவாக வெல்ல வேண்டிய நிலையில்ருந்து நான்கு ஓட்டங்களால் தோல்வியடைந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கையில் 7 விக்கெட்டுக்கள் இருக்க 46 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையிலிருந்து இந்தத் தோல்வியானது மிகப்பெரும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியுஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. நியுஸிலாந்து அணி சார்பாக அஜாஸ் பட்டேல் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகியிருந்தார்.

தமது முதல் இன்னிங்ஸிற்காக களமிறங்கிய நியுஸிலாந்து அணி அணித்தலைவர் கேன் வில்லியம்சன் தவிர்ந்த ஏனைய வீரர்களின் மோசமான துடுப்பாட்டம் மற்றும் பாகிஸ்தான் அணியின் சிறந்த பந்து வீச்சின் காரணமாக சகல விக்கெட்டுகளையும் இழந்து 153 என்ற குறைந்த ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. கேன் வில்லியம்சன் அதிக பட்சமாக 63 ஓட்டங்களை பெற்றிருந்தார். பந்து வீச்சில் யாசிர் ஷா மூன்று விக்கெட்டுகளையும் ஹரிஸ் சொஹைல், மொஹமட் அப்பாஸ் மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதமும் கைப்பற்றியிருந்தனர். 

தொடர்ந்து தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி சார்பில் பாபர் அசாம் பெற்றுக்கொண்ட அரைச்சதம் தவிர ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களையே பதிவு செய்திருந்தனர். இதனால் அவ்வணி நியுஸிலாந்து அணியை விட மேலதிகமாக 74 ஓட்டங்கள் பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்து 227 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் பாபர் அசாம் 62 ஓட்டங்களையும் அசாத் ஷபீக் 43 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். பந்து வீச்சில் நியுஸிலாந்து அணி சார்பாக ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும் கிரன்ட்ஹோம் மற்றும் அஜாஸ் பட்டேல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.


74 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த நியுஸிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் ஓட்டமெதுவும் இன்றி முதலாவது விக்கெட் வீழ்த்தப்பட்டிருந்தது. தொடர்ந்து களமிறங்கிய துடுப்பாட்ட வீரர்களும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க அவ்வணி 108 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்தில் இருந்த சந்தர்ப்பத்தில் 5ஆவது விக்கெட்டுக்காக இணைந்த நிக்கோலஸ் மற்றும் வொட்லிங்  ஆகியோர் 112 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த போது நிக்கோலஸ் 55 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய வீரர்களின் விக்கெட்டுகளையும் தொடராக அடுத்தடுத்து கைப்பற்றிய பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் நியுஸிலாந்து அணி 175 ஓட்டங்கள் முன்னிலை இருக்க 249 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர். நியுஸிலாந்து அணி தமது கடைசி 6 விக்கெட்டுகளையும் வெறும் 29 ஓட்டங்களுக்கு இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அவ்வணி சார்பாக வொட்லிங் அதிக பட்சமாக 59 ஓட்டங்கள் பெற்றிருந்ததுடன் சிறப்பாக பந்து வீசிய பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சில் யாசிர் ஷா மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா 5 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

பின்னர் 176 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு தமது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி மூன்றாம் நாள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 37 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.


வெற்றி பெறுவதற்கு  மேலும் 139 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில் நான்காம் நாளில் தமது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 171 ஓட்டங்களை மட்டுமே பெற்று 4 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. நேற்றைய தினம் பாகிஸ்தான் அணி மேலதிகமாக 11 ஓட்டங்கள் பெற்று 48 ஓட்டங்களுக்கு முதல் மூன்று விக்கெட்டுகளையும் இழந்தது. எனினும் 4ஆவது விக்கெட்டுக்காக கைகோர்த்த அஸார் அலி மற்றும் அசாத் ஷபீக் ஜோடி 82 ஓட்டங்களை பெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் என எதிர்பார்ககப்பட்டது.

அணியின் ஓட்ட எண்ணிக்கை 130 ஆக இருந்த போது 45 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த அசாத் ஷபீக்கின் விக்கெட்டுடன் மதிய போசனைக்காக போட்டி நிறுத்தப்பட்டது. மதிய போசன இடைவேளையின் பின் நியுஸிலாந்து அணி பந்து வீச்சாளர்களின் மீள்வருகை பாகிஸ்தான் அணியின் வெற்றியை பறித்தது.

பாகிஸ்தான் அணிக்காக இறுதிவரை போராடிய அஸார் அலி வெற்றிக்கு 5 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில் அஜாஸ் பட்டேலின் பந்து வீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்தார். எனினும், அது டி.ஆர்.எஸ் மூலம் முறையீடு செய்யப்பட்டும் அதனை ஆட்டமிழப்பாக மூன்றாவது நடுவர் உறுதிப்படுத்தியதும் நியுஸிலாந்து அணியினர் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த வெற்றியானது நியுஸிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் மிகவும் குறைந்த ஓட்ட வித்தியாசத்தில் பெற்றுக் கொண்ட வெற்றியாகும்.

அத்துடன் பாகிஸ்தானின் மிக நெருக்கமான தோல்வியாகவும் அமைந்துள்ளது.

துடுப்பாட்டத்தில் அஸார் அலி 65 ஓட்டங்கள் பெற்று இறுதி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

சிறப்பாக பந்து வீசி போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவாகிய அறிமுக வீரர் அஜாஸ் பட்டேல் இரண்டாம் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியிருந்தார். முதல் இன்னிங்சில் அவர் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ளது.

ஞாயிறு, 18 நவம்பர், 2018

சுழலில் இலங்கையை சுருட்டி சரித்திரம் படைத்த இங்கிலாந்து !!

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக கண்டி – பள்ளேக்கலை சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி 2-0 என டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது.

இது இங்கிலாந்து 17 வருடங்களுக்குப் பின்னர் இங்கிலாந்து இலங்கையில் பெட்ரா டெஸ்ட் தொடர் வெற்றியாகும்.
இலங்கை மண்ணில் வைத்து இலங்கையின் பலமான சுழல் பந்துவீச்சை வைத்தே இலங்கையை மடக்கியிருப்பது விசேடமாகும்.

நான்காவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி நிர்ணயித்திருந்த 301 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நான்காவது நாள் ஆட்டநேர முடிவின் போது, 226 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்நிலையில் இன்றைய ஆட்டநேரத்தை தொடர்ந்த இலங்கை அணி மேலதிகமாக வெறும் 17 ஓட்டங்களை பெற்றநிலையில், 243 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து இந்தப் போட்டியிலும் தோற்றதோடு தொடர் தோல்வியையும் தழுவியது.

இன்றைய தினத்தை பொறுத்தவரை நிரோஷன் டிக்வெல்ல 35 ஓட்டங்களையும், அகில தனஞ்ஜய 8 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள, இங்கிலாந்து அணிசார்பில் மொயீன் அலி 2 விக்கெட்டுகளையும், ஜக் லீச் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இந்த டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, தங்களுடைய முதல் இன்னிங்ஸில், நடுவர்களால் வழங்கப்பட்ட மேலதிக 5 ஓட்டங்களுடன் 290 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் சாம் கரன் 64 ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 63 ஓட்டங்களையும் பெற, டில்ருவான் பெரேரா 4 விக்கெட்டுகளையும், மலிந்த புஷ்பகுமார 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.


தங்களது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி ரொஷேன் சில்வா, திமுத் கருணாரத்ன மற்றும் தனஞ்ஜய டி சில்வா ஆகியோரின் அரைச்சதங்களின் உதவியுடன் 336 ஓட்டங்களைப் பெற்று 46 ஓட்டங்களால் முன்னிலைப்பெற்றது. இறுதிவரை போராடிய ரொஷேன் சில்வா 85 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 63 ஓட்டங்களையும் பெற்றதுடன், தனன்ஜய டி சில்வா 59 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் ஜக் லீச் மற்றும் ஆதில் ரஷீட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்ந்து, 46 ஓட்டங்கள் பின்னடைவில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, தலைவர் ஜோ ரூட்டின் அற்புதமான சதம் மற்றும் ரோரி பேர்ன்ஸ், பென் ஃபோக்ஸின் அரைச்சதங்களின் உதவியுடன் 346 ஓட்டங்களை குவித்து, இலங்கை அணிக்கு 301 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயி்த்திருந்தது. ஜோ ரூட் 124 ஓட்டங்களையும், ரோரி பேர்ன்ஸ் 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, பென் ஃபோக்ஸ் 65 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.


பந்து வீச்சில் அகில தனஞ்ஜய 6 விக்கெட்டுளையும், டில்ருவான் பெரேரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.
தனஞ்ஜயவின் பந்துவீச்சுப் பெறுதியே இந்த மைதானத்தில் சிறப்பான பெறுதியாகும்.

ஜக் லீச் கடைசி இன்னிங்க்ஸில் பெற்ற ஐந்து விக்கெட் அவரது முதலாவது ஐந்து விக்கெட் பெறுதியாகும்.


போட்டியின் சிறப்பாட்டக்காரராக இரண்டாவது இன்னிங்ஸில் சதம் விளாசிய ஜோ ரூட் தெரிவானார்.

இதேவைளை, இந்த டெஸ்ட் தொடர் வெற்றியானது 2000-01ம் ஆண்டுகளுக்கு பின்னர், இங்கிலாந்து அணி, இலங்கையில் பெறும் முதலாவது டெஸ்ட் தொடர் வெற்றியாக பதிவாகியுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் 23ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

சனி, 10 நவம்பர், 2018

பாகிஸ்தானுக்கு அசத்தல் வெற்றி !! தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி !!

இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் பாகிஸ்தான் அணி 6
விக்கெட்டுகளால் வெற்றி பெற்று 1-1 என 3 போட்டிகள் கொண்ட தொடரை சமப்படுத்தியுள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 12 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் தோல்வியுற்றிருந்த பாகிஸ்தான் அணி இவ்வெற்றியின் மூலம் அதற்கொரு முற்றுப் புள்ளியை வைத்துள்ளது.

நேற்று  நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இறுதியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 209 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. ரொஸ் டெய்லர் ஆட்டமிழக்காமல் 86 ஓட்டங்கள் பெற்றிருந்தார். பாகிஸ்தான் அணி சார்பில் பந்து வீச்சில் ஷஹீன் அப்ரிடி நான்கு விக்கெட்டுகளையும் ஹஸன் அலி இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

210 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் முதலாவது விக்கெட் இணைப்பாட்டமாக 54 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர் லுக்கி பேர்குசன் வீசிய பௌன்சர் பந்து இமாம் உல் ஹக்கின் முகத்தை பதம் பார்த்ததன் விளைவாக அவர் மருத்துவ உதவிகளுக்காக மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

இப்போது அவர் நலமே இருப்பதாக அறியக்கிடைத்துள்ளது.

தொடர்ந்து பகர் சமான் மற்றும் பாபர் அசாம் ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டம் பாகிஸ்தான் அணியின் வெற்றியை உறுதி செய்தது. வெற்றிக்கு மேலும 55 ஓட்டங்கள் மாத்திரம் பெற வேண்டிய நிலையில் பக்கர் சமான் 88 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதே ஓவரில் பபார் அசாம் 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். எனினும் தொடர்ந்து களமிறங்கிய மொஹமட் ஹஃபீஸ் ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களை பெற்று பாகிஸ்தான் அணியின் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.


40.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது பாகிஸ்தான் அணி. நியூசிலாந்து அணியின் பந்து வீச்சில் லுக்கி பேர்குசன் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார். போட்டியின் ஆட்ட நாயகனாக ஷஹீன் அப்ரிடி தெரிவானார். இரு அணிகளுக்கும் இடையிலான தொடர் வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதி ஒருநாள் சர்வதேச போட்டி நாளை (11) நடைபெறவுள்ளது.

மோசமான தோல்வியுடன் ரங்கன ஹேரத்துக்கு விடைகொடுத்த இலங்கை !!


இலங்கை அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத்தின் கடைசி சர்வதேச போட்டியாக அமைந்த காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி நான்கே நாளில் தோற்று, மிகப்பெரிய தோல்வியுடன் ஹேரத்துக்கு சோகமயமாக விடைகொடுத்தனுப்பியுள்ளது.

இலங்கை அணிக்கு முரளிதரனின் ஓய்வுக்குப் பிறகு அதிக வெற்றிகளை பெற்றுத்தந்த ரங்கன ஹேரத்துக்கு இப்படியான தோல்வியுடனான வழியனுப்புதல் மிகத் துரதிர்ஷ்டவசமானது.

கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியிருந்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி அறிமுக வீரர் பென் ஃபோக்ஸ் பெற்ற சதத்துடன் தமது முதல் இன்னிங்ஸில் 342 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு தமது முதல் இன்னிங்ஸில் ஆடிய இலங்கை கிரிக்கெட் அணி 203 ஓட்டங்களையே பெற்றது.


பின்னர் 139 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இங்கிலாந்து அணியினர் கீட்டன் ஜென்னிங்ஸ் விளாசிய சதத்தின் உதவியோடு 6 விக்கெட்டுக்களை இழந்து 322 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது தமது துடுப்பாட்டத்தை இடைநிறுத்தி இலங்கை அணிக்கு இந்த டெஸ்ட் போட்டியின் வெற்றி இலக்காக 462 ஓட்டங்களை நிர்ணயம் செய்தனர்.
ஜென்னிங்க்ஸ் மிகச்சிறப்பாக துடுப்பாடி ஆட்டமிழக்காமல் 146 ஓட்டங்களைப் பெற்றார்.


மிகவும் சவாலாக அமைந்த இந்த வெற்றி இலக்கினை அடைவதற்காக இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடங்கிய இலங்கை அணியின் வீரர்கள் போட்டியின் மூன்றாம் நாள் (8) ஆட்ட நிறைவில் 15 ஓட்டங்களுக்கு விக்கெட் இழப்புக்கள் ஏதுமின்றி காணப்பட்டிருந்தனர்.

வெற்றி இலக்கு மிகவும் பெரியது என்பதால் களத்தில் இருந்த இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் மிகவும் நிதானமாகவே ஓட்டங்களை சேர்க்க தொடங்கினர்.

இரண்டு வீரர்களும் இணைந்து 51 ஓட்டங்களை முதல் விக்கெட்டுக்காக பகிர்ந்த நிலையில் இலங்கை அணியின் முதல் விக்கெட் பறிபோனது. இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக கெளஷால் சில்வா மாறியதோடு இங்கிலாந்து சுழல் வீரர் ஜேக் லீச்சினால் LBW முறையில் ஆட்டமிழக்கச் செய்யப்பட்டு அவர் 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தார்.
விக்கெட்டுக்களை பறிபோய்க் கொண்டேயிருந்தன.

பின்னர் நான்காம் நாளின் மதிய போசனத்தை அடுத்து குசல் மெண்டிஸுடன் கைகோர்த்த  அஞ்செலோ மெதிவ்ஸ் இலங்கை அணிக்கு சற்று ஆறுதல் தந்தார். எனினும், இங்கிலாந்து அணியின் சுழல் வீரரான ஜேக் லீச்சினை முகம்கொடுக்க முடியாமல் குசல் மெண்டிஸ் ஆட்டமிழந்தார். மெண்டிஸ் ஆட்டமிழக்கும்போது 77 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 6 பெளண்டரிகள் அடங்கலாக 45 ஓட்டங்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து புதிய வீரராக களம் வந்த அணித்தலைவர் தினேஷ் சந்திமாலும் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இப்படியாக முக்கிய துடுப்பாட்ட வீரர்களை இழந்த இலங்கை அணிக்கு நான்காம் நாளின் தேநீர் இடைவேளை வரை அஞ்செலோ மெதிவ்ஸ் – நிரோஷன் திக்வெல்ல ஜோடி ஓட்டங்கள் சேர்த்து பெறுதி சேர்த்திருந்தது.

ஆனால், தேநீர் இடைவேளையினை அடுத்து மிகவும் குறுகிய ஓட்ட இடைவெளிகளில் திக்வெல்ல, மெதிவ்ஸ் உட்பட ஏனைய பின்வரிசை வீரர்களினதும் விக்கெட்டுக்களை பறிகொடுத்த இலங்கை அணி 85.1 ஓவர்களில் 250 ஓட்டங்களுக்கு அனைத்து துடுப்பாட்ட வீரர்களையும் இழந்து 211 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அஞ்செலோ மெதிவ்ஸ் அரைச்சதம் ஒன்றினை தாண்டி 52 ஓட்டங்களைப் பெற்றதோடு, நிரோஷன் திக்வெல்ல 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தார். ஏனைய வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை காண்பித்தனர்.
இரண்டு இன்னிங்சிலும் மத்தியூஸ் மட்டுமே சிறப்பாகப் பிரகாசித்திருந்தார்.


இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பாக மொயீன் அலி 71 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், ஜேக் லீச் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி தமது தரப்பின் வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.

இந்த வெற்றியோடு இங்கிலாந்து கிரிக்கெட் அணி காலி சர்வதேச மைதானத்தில் தமது முதல் டெஸ்ட் வெற்றியினை பதிவு செய்துள்ளதோடு, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 1-0 என முன்னிலை பெற்றிருக்கின்றது.

போட்டியின் ஆட்ட நாயகனாக இங்கிலாந்து அணியின் அறிமுக வீரர் பென் போக்ஸ் தெரிவாகியிருந்தார். இதேநேரம், இப்போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து பிரியாவிடை எடுத்துக் கொள்ளும் உலகின் மிக வெற்றிகரமான இடதுகை சுழல் வீரர் ரங்கன ஹேரத்தும் கெளரவிக்கப்பட்டிருந்தார்.

இந்த டெஸ்ட் போட்டியில் மூன்று விக்கெட்டுக்களை சாய்த்த ஹேரத் 99 டெஸ்ட் போட்டிகளில் இதுவரையில் மொத்தமாக 433 விக்கெட்டுக்களை கைப்பற்றி தனது கிரிக்கெட் வாழ்க்கையினை முடித்துக் கொள்வது குறிப்பிடத்தக்கது.

இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நான்கு நாட்களுடன் நிறைவுக்கு வந்திருக்கும் நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி அடுத்த புதன்கிழமை (14) கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகின்றது.

திங்கள், 5 நவம்பர், 2018

இந்தியச் சுழலில் இடறிவிழுந்த நடப்பு உலக T20 சம்பியன்கள் !! இந்தியாவுக்கு வெற்றி !!

குல்தீப் யாதவ்வின் சுழலுக்கு முன் தடுமாற்றம் கண்ட மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிரான முதலாவது T20 போட்டியில்  5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. 

இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி இல்லாமல் இந்தியா இந்திய மண்ணில் விளையாடிய முதலாவது சர்வதேச T20 போட்டி இதுவாகும்.

நேற்று கொல்கத்தாவில் குல்தீப் யாதவ் 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்த மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 109 ஓட்டங்களையே பெற்றது. இது அந்த அணி இந்தியாவுக்கு எதிராக T 20 போட்டிகளில் பெற்ற மிகக் குறைந்த ஓட்டங்களாக இருந்தது. 

தடுமாற்றத்துடனேயே ஆரம்பித்த  இந்திய அணிக்காக தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காது 31 ஓட்டங்களை பெற அந்த அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 110 ஓட்டங்களை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மூன்று போட்டிகளைக் கொண்ட T 20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.   

கன்னிப் போட்டியில் களமிறங்கிய ஒஷேன் தோமஸ் 16 ஓட்டங்களிலேயே இந்திய அணியின் ஆரம்ப விக்கெட்டுகளை வீழ்த்தி நம்பிக்கை கொடுத்தார்.

அணித்தலைவர் கார்லொஸ் பிரத்வெயிட் மேலும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்த இந்திய அணி 45 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

எனினும், கார்த்திக் மற்றும் மனிஷ் பாண்டே ஐந்தாவது விக்கெட்டுக்கு 38 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று இந்திய அணியை வெற்றி இலக்கை நெருங்கச் செய்தனர். மனிஷ் பாண்டே 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தபோது அடுத்து வந்து தனது கன்னிப் போட்டியில் ஆடிய க்ருனால் பாண்டியா ஆட்டமிழக்காது 21 ஓட்டங்களை பெற்றதோடு இந்திய அணியின் வெற்றி ஓட்டத்தையும் எடுத்தார். பந்துவீச்சில் அவர் விக்கெட் ஒன்றையும் வீழ்த்தினார்.

மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களிலும் இதேபோன்று துடுப்பாட்டத்தில் தடுமாற்றம் கண்டது. அந்த அணி டெஸ்ட் தொடரை 2-0 என இழந்ததோடு கடைசி ஒருநாள் போட்டியில் 104 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக மிகக் குறைந்த ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக குல்தீப் யாதவ் தெரிவானார்.

இந்த இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி-20 போட்டி லக்னோவில் செவ்வாய்க்கிழமை (06) நடைபெறவுள்ளது.

சனி, 3 நவம்பர், 2018

ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய கிரிக்கெட் வீரர் சாதனை

இந்தியாவின் அதிகம் அறியப்படாத இளம் வீரர் ஒருவர் ஒரே இன்னிங்சில் எதிரணியின் 10 விக்கெட்டுக்களையும்  வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்றுவரும் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் சிதாக் சிங் எனும் வீரர்.

ஒரு இன்னிங்ஸின் பத்து விகெட்டுகளையும் ஒரே வீரர் கைப்பற்றுவதென்பது அரிதினும் அரிதாகவே நடக்கக் கூடியது.

சர்வதேச கிரிக்கெட் முதல் உள்ளூர் கிரிக்கெட் வரைக்கும் மிகச் சிலரே இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் ஜிம் லேக்கர் என்ற சுழற்பந்து வீச்சாளரும் இந்திய அணியின் சார்பில் அனில் கும்ப்ளேயும் அந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

மிக சமீபமாக கும்ப்ளே 1999ம் ஆண்டு டெல்லி பெரோஸா கோட்லாவில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையைப் படைத்தார்.

சமீப காலமாக இந்த பத்து விக்கெட் வீழ்த்திய சாதனை குறித்த போட்டிகள் நம் காதுகளுக்கு எட்டாத நிலையில் புதுச்சேரியில் அந்த சாதனையைத் தற்போது நிகழ்த்திக் காட்டியுள்ளார் புதுச்சேரி அணிக்காக விளையாடிய சிதாக் சிங் எனும் இளம் சுழற்பந்து வீச்சாளர்.

 நேற்று வெள்ளிக்கிழமை  புதுச்சேரி சிஏபி சீச்செம் அரங்கில் நடந்த போட்டியில் மணிப்பூர் அணிக்கு எதிராகத்தான் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார் அவர்.

17.5 ஓவர்கள் பந்துவீசி 7 மெய்டனுடன் 31 ரன்களை மட்டுமே கொடுத்த அவர் பத்து விக்கெட்டுகளையும் மள மளவென வீழ்த்தினார். இதனால் மணிப்பூர் அணி 71 ரன்களுக்கு சுருண்டது.

பத்து விக்கெட் வீழ்த்தி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதால் விரைவில் ஐபிஎல்லிலோ தேசிய அணியிலோ இவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


மீண்டும் பாகிஸ்தான் வெற்றி !! 11வது தொடர் வசமானது !

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச T20 போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று ஒரு போட்டி எஞ்சியிருக்கும் நிலையில் 2-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இது பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக கைப்பற்றிய 11ஆவது சர்வதேச T 20 தொடராகும்.  அத்துடன் சப்ராஸ் அஹமட்டின் தலைமையில் பாகிஸ்தான் அணி விளையாடியுள்ள 32 T20 போட்டிகளில் 28வது வெற்றியைப் பெற்றுள்ளது.

நேற்று டுபாயில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. பாகிஸ்தான் அணியில் காயத்தில் இருந்து மீண்டு வந்த ஃபக்கார் சமான் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தார். நியூசிலாந்து அணி மாற்றங்கள் எதுவும் இன்றி விளையாடியது.


இமாத் வசீம் வீசிய முதலாவது ஓவரின் முதல் பந்திலேயே சிக்ஸருடன் தமது இன்னிங்ஸை ஆரம்பித்தது நியூசிலாந்து அணி. ஆரம்பத்தில் கொலின் மன்ரோவினால்  அதிரடியாக பெறப்பட்ட 44 ஓட்டங்களும் மத்திய வரிசையில் அணித்தலைவர் கேன் வில்லியம்சன் நிதானமாக பெற்றுக் கொண்ட 37 ஓட்டங்கள் மற்றும் கடைசியில் கொரே அன்டர்சன் அதிரடியாக ஆட்டமிழக்காமல் பெற்ற 44 ஓட்டங்கள் என தமது பங்களிப்பை வழங்கியதன் மூலம் இறுதியில் நியூசிலாந்து அணி  7 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பாகிஸ்தான் அணி சார்பாக பந்து வீச்சில் ஷஹீன் அப்ரிடி சிறப்பாகப் பந்துவீசி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பம் சிறப்பாக அமைந்தது. பக்கார் சமான் மற்றும் பாபர் அசாம் ஜோடி முதலாவது விக்கெட்டுக்காக 40 ஓட்டங்களை அதிரடியாக பெற்றிருந்த போது பக்கார் சமான் 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து பாபர் அசாம் மற்றும் ஆசிப் அலி ஆகிய இருவரும் இணைந்து 56 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். பின்னர் களமிறங்கிய மொஹமட் ஹஃபீஸ் ஆட்டமிழக்காமல் அதிரடியாக 34 ஓட்டங்களைப் பெற பாகிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

 இப்போட்டியின் ஆட்ட நாயகன் விருது ஷஹீன் அப்ரிடிக்கு வழங்கப்பட்டது. இத்தொடரின் இறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ளது.  

வெள்ளி, 2 நவம்பர், 2018

மேற்கிந்தியத் தீவுகளை சுருட்டிய ஜடேஜா ! இலகுவான வெற்றியுடன் தொடரைக் கைப்பற்றிய இந்தியா !!

இந்திய மற்றும் மேற்கிந்திய  தீவுகள் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்தியா 9 விக்கெட்டுக்களால் இலகுவாக வெற்றியீட்டி 3-1 என ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

ஜடேஜா தனது சுழற்பந்து மூலம் மேற்கிந்தியத் தீவுகளை சுருட்டியெடுத்திருந்தார்.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியதீவுகள் அணி, இந்திய அணியின் சிறந்த பந்து வீச்சின் காரணமாக  31.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 104 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் 25 ஓட்டங்களையும் மார்லன் சமுவெல்ஸ் 24 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். ஏனைய வீரர்கள் மிகவும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். சிறப்பாக பந்து வீசிய ரவீந்தர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் பும்ரா மற்றும் கலீல் அஹமட் ஆகியோர் இரண்டு விக்கெட்டுகள் வீதமும் கைப்பற்றியிருந்தனர். 

ஒருநாள் தொடரை கைப்பற்றுவதற்கு இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய நிலையில் மிக இலகுவான இலக்கான 105 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி 6 ஓட்டங்கள் பெற்றிருந்த போது ஷிகர் தவான் 6 ஓட்டங்களுடன் வெளியேறினார். பின்னர் கைகோர்த்த ரோஹித் ஷர்மா மற்றும் அணித்தலைவர் விராட் கோலி ஆகியோர் பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 99 ஓட்டங்கள் பெற்றதன் மூலம் இந்திய அணி  14.5 ஓவர்களில் 211பந்துகள் மீதமிருக்க வெற்றியிலக்கை அடைந்தது.

இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் ரோஹித் ஷர்மா 63 ஓட்டங்களையும் கோலி 33 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டனர்.


இந்தப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக ரவீந்திர ஜடேஜா தெரிவு செய்யப்பட்டிருந்ததோடு தொடரின் நாயகனாக இந்திய அணித்தலைவர் விராட் கோலி தெரிவு செய்யப்பட்டார். கோலி  இந்தத் தொடரில் 453 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

இரு அணிகளுக்குமிடையிலான மூன்று போட்டிகளை கொண்ட சர்வதேச T20 தொடர் எதிர்வரும் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

வியாழன், 1 நவம்பர், 2018

விறுவிறுப்பான முதலாவது போட்டி - இரண்டு ஓட்டங்களால் பாகிஸ்தானுக்கு வெற்றி


விறுவிறுப்பாக நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது T 20 சர்வதேச போட்டியில் பாகிஸ்தான் அணி இரண்டு ஓட்டங்களால் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.


தரப்படுத்தலில் உலகின் முதல்தர அணியான பாகிஸ்தான் அணியுடன் மூன்று சர்வதேச T 20 போட்டிகள், மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியுஸிலாந்து அணி அபுதாபியில் நேற்று முதலாவது போட்டியில் மோதியது.

அவுஸ்திரேலிய அணியுடன் நடைபெற்ற T 20 தொடரை 3-0 என வெற்றி பெற்ற உற்சாகத்தோடு நியுஸிலாந்து அணியை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடியது.

இப்போட்டியில் நியுஸிலாந்து அணி சார்பாக சுழல் பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல் சர்வதேச T 20 போட்டிகளில் அறிமுக வீரராக களமிறங்கியிருந்தார்.

முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான பாபர் அசாம் மற்றும் சிப்ஷாடா பர்ஹான் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 10 ஓட்டங்களுக்கு முதல் இரண்டு விக்கெட்டுகளையும் இழந்தது. இந்நிலையில் மூன்றாவது விக்கெட்டுக்காக இணைந்த ஆசிப் அலி மற்றும் மொஹமட் ஹஃ பீஸ் ஜோடி சிறப்பாக விளையாடி 67 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த வேளை ஹஃபீஸ் 45 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ஆசிப் அலி 24 ஓட்டங்களுடனும், அதிரடியாக விளையாடிய அணித் தலைவர் சர்ப்ராஸ் அஹமட் 34 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தார். பின்னர் கடைசி ஓவரில் அதிரடி காட்டிய இமாத் வஷீம் வெறும் 5 பந்துகளில் 14 ஓட்டங்கள் பெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பந்து வீச்சில் அடம் மில்னே இரண்டு விக்கெட்டுகளையும் ஏனைய மூன்று பந்து வீச்சாளர்கள் தலா ஒரு விக்கெட் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.


பின்னர், 149 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய நியுஸிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கொலின் மன்றோ மற்றும் க்லென் பிலிப்ஸ் ஆகியோரின் அதிரடி ஆட்டம் நியுஸிலாந்து அணிக்கு நம்பிக்கையூட்டும் வகையில் இருந்தது.

இவர்கள் இருவரும் முதலாவது விக்கெட்டுக்காக 6 ஓவர்களில் 50 ஓட்டங்கள் பெற்றிருந்தனர். எனினும், சிறப்பாக பந்து வீசிய பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி போட்டியின் தன்மையை மாற்றியமைத்தார்.

நியுஸிலாந்து அணியின் முதலாவது விக்கெட்டாக  க்லென் பிலிப்ஸ் 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். கொலின் மன்றோ அதிகபட்சமாக 58 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

இறுதி ஓவரில் 17 ஓட்டங்களைப் பெறவேண்டிய நிலையில் நியூசீலாந்து அணியினால் 14 ஓட்டங்களை மட்டுமே  பெறமுடிந்தது.

கடைசி வரை வெற்றிக்காக போராடிய அனுபவ வீரர் ரோஸ் டெய்லர் ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்கள் பெற்றிருந்தார். இறுதியில் நியுஸிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழந்து 146 ஓட்டங்களை பெற்று 2 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

பாகிஸ்தான் அணி சார்பாக பந்து வீச்சில்  ஹசன் அலி மூன்று விக்கெட்டுகளையும் இமாத் வசீம் மற்றும் ஷடாப் கான் ஆகியோர் ஒரு விக்கெட் வீதமும் வீழ்த்தியிருந்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகன் விருது மொஹமட் ஹஃபீஸுக்கு வழங்கப்பட்டது.

புதன், 31 அக்டோபர், 2018

இறுதி ஒருநாள் போட்டியில் தோனி இல்லை ??

இந்தியாவுக்கு எதிராக தடுமாறும் என்று கருதப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி.  இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி வருகிறது
கடைசியாக நடந்த 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 224 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்றது.

 எனினும் 2-1 என்ற கணக்கில்  இந்திய  அணி  முன்னிலை பெற்றிருந்த போதும் மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய அணிக்கு தொடர் முழுவதும் நெருக்கடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் இறுதி மற்றும் 5வது ஒருநாள் போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. இதில் MS தோனி பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது.

ஏனெனில் நான்காவது ஒரு நாள் போட்டியில் தோனி துடுப்பாடிய போது மேற்கிந்தியத் தீவுகளின் களத்தடுப்பாளர் ஒருவர் வீசிய பந்தினால் மணிக்கட்டு உபாதை ஏற்பட்டது.  இதன் காரணமாக, தோனியின் சிகிச்சைக்காக பத்து நிமிடம் ஆட்டம் தடைப்பட்டது.

அதன் பின்னர் அவருக்கு தற்காலிகமாக சரி செய்யப்பட்டு ஆட்டமிழக்கும் வரை முழுவதுமாக ஆடினார். இந்நிலையில் இன்று வரை அவர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்று தெரிகிறது.

அவர் இன்னும் முழுமையாக குணமடையாத காரணத்தால் நாளைய 5வது போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.

மேலும் நேற்று  விமான நிலையத்திற்கு வந்திருந்தபோது கூட அவருக்கு  கையில் காயம் சரியான வகையில் இருந்ததாக கூறப்படுகிறது.

அதனைத் தாண்டி அவரது கையில் கட்டுப்போட்டிருந்தார். இதனால் இந்த காயம் இன்னும் சரியாகவில்லை என்று தென்படுகிறது.   
எனினும் இதுவரை நாளைய அணி பற்றி எந்தவொரு உறுதியான தகவலும் இந்திய முகாமிலிருந்து வரவில்லை.

திங்கள், 29 அக்டோபர், 2018

மூன்றாவது போட்டியையும் வென்றது பாகிஸ்தான் !! T20 தொடரில் 3-0 என அபார வெற்றி.

பாகிஸ்தான் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான சர்வதேச T20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான்  அணி 33 ஓட்டங்களால் வெற்றி பெற்று 3-0 என தொடரை வென்றெடுத்து தமது T 20 முதற்தர ஸ்தானத்தை நிரூபித்துள்ளது.

நேற்று  நடைபெற்ற மூன்றாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.  இத்தொடரில் மூன்று போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களை பெற்றது. பாகிஸ்தான் அணி சார்பாக முதல் இரு போட்டிகளிலும் அதிக ஓட்டங்கள் பெற்ற பாபர் அசாம் இப்போட்டியிலும் அதிக பட்சமாக 50 ஓட்டங்களை பெற்றிருந்தார். இது பபார் அசாம் கடைசி 5 T 20 இன்னிங்ஸ்களில் பெற்ற 4ஆவது அரைச்சதம் என்பது குறிப்பிடத்தக்கது. அது தவிர சிப்ஷாடா பர்ஹான் 39 ஓட்டங்களையும் மொஹமட் ஹபீஸ் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் மிட்செல் மார்ஷ் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார்.

முதலிரு போட்டிகளிலும் தோற்றிருந்த அவுஸ்திரேலியா இந்தப் போட்டியில் துடுப்பாட்ட வரிசையில் மாற்றத்தை ஏற்படுத்தி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக தலைவர் ஏரோன் பின்ஞ்சுடன் விக்கெட் காப்பாளர் அலெக்ஸ் கேரி களமிறங்கினார். எதிர்பார்த்த மாற்றத்திற்கு ஏற்றாற்போல் கேரி, முதல் இரு போட்டிகளிலும் சிறப்பாக பந்து வீசி ஆட்ட நாயகன் விருது பெற்ற பாகிஸ்தான் அணியின் சுழல் பந்து வீச்சாளர் இமாத் வசீம் வீசிய முதலாவது ஓவரிலே இரண்டு சிக்சர்கள் மற்றும் இரண்டு பௌண்டரிகளை விளாசி 20 ஓட்டங்களை அதிரடியாக பெற்றுக் கொடுத்தார். 

எனினும், கேரியின் ஆட்டம் அதனை தாண்டி நீடிக்கவில்லை. தொடர்ந்து அடுத்தடுத்த ஓவர்களில் பின்ஞ் ஒரு ஓட்டத்துடனும் கேரி 20 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர். தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அவுஸ்திரேலிய அணியினால் வெற்றியிலக்கை அடைவது சாத்தியமற்று போனது.


இறுதியில் அவ்வணி 117 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 33 ஓட்டங்களால் தோல்வியுற்று 3-0 என T 20 தொடரை இழந்தது. சிறப்பாக பந்து வீசிய ஷடாப் கான் மூன்று விக்கெட்டுகளையும் ஹஸன் அலி இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர். 

இந்தப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஷடாப் கான் தெரிவு செய்யப்பட்டிருந்ததோடு தொடரின் நாயகனாக பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர் பபார் அசாம் தெரிவு செய்யப்பட்டார்.

பாகிஸ்தானுக்கு அடுத்து நியூசீலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட T 20 தொடர் எதிர்வரும் 31ஆம் திகதி ஆரம்பமாகிறது.

சனி, 27 அக்டோபர், 2018

இலங்கை அணிக்கு பேரிழப்பு !! குசல் ஜனித் பெரேரா, அகில தனஞ்செய இன்றைய போட்டியில் இல்லை !!

இன்று கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ள T20 போட்டியிலிருந்து இலங்கை அணியின் வீரர்களான குசல் ஜனித் பெரேரா, அகில தனஞ்செய ஆகியோர் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் இளம் சுழல் பந்துவீச்சாளரான அகில தனஞ்செய இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்று முடிந்த ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் தொடை உபாதைக்கு ஆளாகியிருந்த காரணத்தினாலேயே இன்றைய போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

இதேநேரம், இங்கிலாந்து அணியுடனான T20 போட்டிக்கு  குழாமில் பெயரிடப்பட்ட அதிரடி துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேராவும் முன்பு ஏற்பட்ட தொடை உபாதையினால் போதிய உடற்தகுதியை நிரூபிக்கத் தவறியதாலேயே இன்று விளையாட முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளார்.


இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அகில தனஞ்செய சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்தியிருந்தார். எனவே, இன்றைய போட்டியில் அகில இல்லாதது இலங்கை அணிக்கு பாரிய பின்னடைவாகும். 

அத்துடன் இலங்கை அணிக்காக இந்த ஆண்டில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் வரிசையில் முன்னணியில் திகழும் குசல் ஜனித் பெரேரா இதே தொடை உபாதை காரணமாக இங்கிலாந்து அணியுடனான மூன்று ஒரு நாள் போட்டிகளில் ஏற்கனவே விளையாடாது போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ் இரண்டு வீரர்களின் இடத்தினையும் இன்றைய  T20 போட்டியில் பிரதியீடு செய்ய இடதுகை சுழல் வீரரான அமில அபொன்சோ மற்றும் துடுப்பாட்ட வீரர் சதீர சமரவிக்ரம ஆகியோர் இலங்கை அணிக்கு அழைக்கப்பட்பட்டுள்ளனர்.

இன்றைய போட்டியில் இலங்கை அணிக்கு திசர பெரேரா தலைமை தாங்குகிறார்.

மீண்டும் வென்ற பாகிஸ்தான், தொடரையும் கைப்பற்றியது !

ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் நகரில் கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாக நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியை வென்றதன் மூலம் பாகிஸ்தான் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 2-0 எனக் கைப்பற்றியுள்ளது. நாளை மூன்றாவது போட்டி எஞ்சியுள்ள நிலையில்
நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி 11 ஓட்டங்களால் வெற்றி பெற்று  மூன்று போட்டிகள் கொண்ட T 20 தொடரை 2-0 கைப்பற்றியது. தனது தொடர்ச்சியான பத்தாவது T 20 தொடரை வென்றுள்ளது பாகிஸ்தான்.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடியது. தமது 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. கடந்த முதலாவது போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டிருந்த பாகிஸ்தான் அணியின் சிரேஷ்ட வீரர் ஷோயிப் மலிக் அணியில் நேற்று மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார்.


பாகிஸ்தான் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் முதலாவது போட்டியில் அதிக ஓட்டங்கள் பெற்ற பாபர் அசாம் இப்போட்டியிலும் அதிக பட்சமாக 45 ஓட்டங்களையும் மொஹமட் ஹஃபீஸ் 40 ஓட்டங்களையும் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுச்சேர்த்தனர். பந்து வீச்சில் அவுஸ்திரேலியா அணி சார்பாக கோல்டர் நைல் மூன்று விக்கெட்டுகளையும் பில்லி ஸ்டேன்லேக் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர். 

148 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 11 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. எனினும் இறுதி ஓவர் வரை அவுஸ்திரேலியாவுக்கு வெல்லும் வாய்ப்புக்கள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த போட்டியை போன்றே அவுஸ்திரேலிய அணியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். எனினும் அணியின் வெற்றிக்காக போராடிய கிளென் மக்ஸ்வல் மற்றும் கோல்டர் நைல் ஜோடி கடைசி ஓவரில் 23 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில் இருவரும் தமது விக்கெட்டுக்களை பறிகொடுத்ததன் மூலம் பாகிஸ்தான் அணியின் வெற்றி உறுதியானது.

மக்ஸ்வல் 37 பந்துகளில் 52 ஓட்டங்களை பெற்றிருந்ததுடன் கோல்டர் நைல் 27 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

பாகிஸ்தான் அணி சார்பாக பந்து வீச்சில் சதாப் கான் மற்றும் ஷஹீன் அப்ரிடி ஆகியோர் இரண்டு விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்ததோடு இமாத் வசீம் மற்றும் மொஹமட் ஹபீஸ் ஆகியோரும் தலா ஒரு விக்கெட் வீதம் வீழ்த்தியிருந்தனர்.
இமாட் வசீம் 4 ஓவர்களில் வெறுமனே 8 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து அவுஸ்திரேலிய அணி ஓட்டங்களைப்  பெறுவதை சிரமத்துக்குள்ளாக்கினார்,

இத்தொடர் வெற்றியானது சப்ராஸ் அஹமட் தலைமையில் பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக பெற்றுக்கொண்ட 10 ஆவது சர்வதேச T20 தொடர் வெற்றியாகும்.


இப்போட்டியில் நான்கு ஓவர்கள் பந்து வீசி ஒரு ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 8 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றிய இமாத் வசீம் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

இவர் முதலாவது போட்டியிலும் ஆட்ட நாயகன் விருது பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான போட்டி நாளை (28) நடைபெறவுள்ளது.

வியாழன், 25 அக்டோபர், 2018

விராட் கோலி - ஒரே போட்டி ஏழு சாதனைகள்


மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான நேற்றைய 2வது போட்டியில்
இந்திய அணித்தலைவர்  விராட் கோலி 129 பந்துகளில் 153 ஓட்டங்களை அடித்து நொறுக்கினார்.

இந்தப் போட்டியில் அவர் 81 ஓட்டங்களை அடைந்தததன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 10,000 ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

மேலும் இந்தப் போட்டியில் பல சாதனைகளை     
படைத்துள்ளார்.அந்த சாதனைகள் விவரம் :-

1.இந்தியாவில் மிகவேகமாக 4000 ஓட்டங்களை கடந்த இந்திய வீரர்
2. சர்வதேச ரீதியில் மிகவேகமாக 10,000 ஓட்டங்களை கடந்த வீரர்
3.மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அதிக சதங்களைப் பெற்ற வீரர்
4.ஒரே ஆண்டில் குறைந்த இன்னிங்ஸில் 1000 ஓட்டங்களை கடந்த வீரர்.
  இந்த வருடத்தில் 11 இன்னிங்ஸில் 1000 ஓட்டங்களைக் கடந்துள்ளார்.
5.பத்தாயிரம் ஓட்டங்களை கடந்த வீரர்களில் அதிக சராசரி வைத்திருப்பவர்.
6.மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அதிக ஓட்டங்கள் பெற்ற இந்திய வீரர்
7.மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அதிக சதங்களைப் பெற்றவர்.
  
Related Posts Plugin for WordPress, Blogger...