இலங்கை அணிக்கு பேரிழப்பு !! குசல் ஜனித் பெரேரா, அகில தனஞ்செய இன்றைய போட்டியில் இல்லை !!

இன்று கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ள T20 போட்டியிலிருந்து இலங்கை அணியின் வீரர்களான குசல் ஜனித் பெரேரா, அகில தனஞ்செய ஆகியோர் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் இளம் சுழல் பந்துவீச்சாளரான அகில தனஞ்செய இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்று முடிந்த ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் தொடை உபாதைக்கு ஆளாகியிருந்த காரணத்தினாலேயே இன்றைய போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

இதேநேரம், இங்கிலாந்து அணியுடனான T20 போட்டிக்கு  குழாமில் பெயரிடப்பட்ட அதிரடி துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேராவும் முன்பு ஏற்பட்ட தொடை உபாதையினால் போதிய உடற்தகுதியை நிரூபிக்கத் தவறியதாலேயே இன்று விளையாட முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளார்.


இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அகில தனஞ்செய சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்தியிருந்தார். எனவே, இன்றைய போட்டியில் அகில இல்லாதது இலங்கை அணிக்கு பாரிய பின்னடைவாகும். 

அத்துடன் இலங்கை அணிக்காக இந்த ஆண்டில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் வரிசையில் முன்னணியில் திகழும் குசல் ஜனித் பெரேரா இதே தொடை உபாதை காரணமாக இங்கிலாந்து அணியுடனான மூன்று ஒரு நாள் போட்டிகளில் ஏற்கனவே விளையாடாது போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ் இரண்டு வீரர்களின் இடத்தினையும் இன்றைய  T20 போட்டியில் பிரதியீடு செய்ய இடதுகை சுழல் வீரரான அமில அபொன்சோ மற்றும் துடுப்பாட்ட வீரர் சதீர சமரவிக்ரம ஆகியோர் இலங்கை அணிக்கு அழைக்கப்பட்பட்டுள்ளனர்.

இன்றைய போட்டியில் இலங்கை அணிக்கு திசர பெரேரா தலைமை தாங்குகிறார்.

கருத்துரையிடுக

புதியது பழையவை