Latest Updates

6/recent/ticker-posts

சுழலில் இலங்கையை சுருட்டி சரித்திரம் படைத்த இங்கிலாந்து !!

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக கண்டி – பள்ளேக்கலை சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி 2-0 என டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது.

இது இங்கிலாந்து 17 வருடங்களுக்குப் பின்னர் இங்கிலாந்து இலங்கையில் பெட்ரா டெஸ்ட் தொடர் வெற்றியாகும்.
இலங்கை மண்ணில் வைத்து இலங்கையின் பலமான சுழல் பந்துவீச்சை வைத்தே இலங்கையை மடக்கியிருப்பது விசேடமாகும்.

நான்காவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி நிர்ணயித்திருந்த 301 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நான்காவது நாள் ஆட்டநேர முடிவின் போது, 226 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்நிலையில் இன்றைய ஆட்டநேரத்தை தொடர்ந்த இலங்கை அணி மேலதிகமாக வெறும் 17 ஓட்டங்களை பெற்றநிலையில், 243 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து இந்தப் போட்டியிலும் தோற்றதோடு தொடர் தோல்வியையும் தழுவியது.

இன்றைய தினத்தை பொறுத்தவரை நிரோஷன் டிக்வெல்ல 35 ஓட்டங்களையும், அகில தனஞ்ஜய 8 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள, இங்கிலாந்து அணிசார்பில் மொயீன் அலி 2 விக்கெட்டுகளையும், ஜக் லீச் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இந்த டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, தங்களுடைய முதல் இன்னிங்ஸில், நடுவர்களால் வழங்கப்பட்ட மேலதிக 5 ஓட்டங்களுடன் 290 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் சாம் கரன் 64 ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 63 ஓட்டங்களையும் பெற, டில்ருவான் பெரேரா 4 விக்கெட்டுகளையும், மலிந்த புஷ்பகுமார 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.


தங்களது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி ரொஷேன் சில்வா, திமுத் கருணாரத்ன மற்றும் தனஞ்ஜய டி சில்வா ஆகியோரின் அரைச்சதங்களின் உதவியுடன் 336 ஓட்டங்களைப் பெற்று 46 ஓட்டங்களால் முன்னிலைப்பெற்றது. இறுதிவரை போராடிய ரொஷேன் சில்வா 85 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 63 ஓட்டங்களையும் பெற்றதுடன், தனன்ஜய டி சில்வா 59 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் ஜக் லீச் மற்றும் ஆதில் ரஷீட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்ந்து, 46 ஓட்டங்கள் பின்னடைவில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, தலைவர் ஜோ ரூட்டின் அற்புதமான சதம் மற்றும் ரோரி பேர்ன்ஸ், பென் ஃபோக்ஸின் அரைச்சதங்களின் உதவியுடன் 346 ஓட்டங்களை குவித்து, இலங்கை அணிக்கு 301 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயி்த்திருந்தது. ஜோ ரூட் 124 ஓட்டங்களையும், ரோரி பேர்ன்ஸ் 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, பென் ஃபோக்ஸ் 65 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.


பந்து வீச்சில் அகில தனஞ்ஜய 6 விக்கெட்டுளையும், டில்ருவான் பெரேரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.
தனஞ்ஜயவின் பந்துவீச்சுப் பெறுதியே இந்த மைதானத்தில் சிறப்பான பெறுதியாகும்.

ஜக் லீச் கடைசி இன்னிங்க்ஸில் பெற்ற ஐந்து விக்கெட் அவரது முதலாவது ஐந்து விக்கெட் பெறுதியாகும்.


போட்டியின் சிறப்பாட்டக்காரராக இரண்டாவது இன்னிங்ஸில் சதம் விளாசிய ஜோ ரூட் தெரிவானார்.

இதேவைளை, இந்த டெஸ்ட் தொடர் வெற்றியானது 2000-01ம் ஆண்டுகளுக்கு பின்னர், இங்கிலாந்து அணி, இலங்கையில் பெறும் முதலாவது டெஸ்ட் தொடர் வெற்றியாக பதிவாகியுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் 23ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்