தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

செவ்வாய், 31 ஜூலை, 2018

இங்கிலாந்தின் 1000வது டெஸ்ட் !! - டெஸ்ட் முதல் நிலை இந்தியாவை வீழ்த்தக் குறி வைக்கிறது

உலகின் அத்தனை கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்துள்ள உலகின் மிகப்பெரிய டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பிக்கிறது. தற்போது டெஸ்ட்  தரப்படுத்தலில் முதலாமிடத்தில் உள்ள இந்திய அணிக்கும் அண்மைக்காலத்தில் சகலவிதமான போட்டிகளிலும் முன்னேற்றம் கண்டுவரும் இங்கிலாந்து அணிக்குமிடையிலான மோதல் இது.

ஐந்தாமிடத்தில் உள்ள இங்கிலாந்து இந்த ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை வெல்வதன் மூலம் தங்கள் நிலையை உயர்த்திக்கொள்வதுடன் தமது முன்னேற்றம் நிலையானது என்பதைக் காட்டுவதற்கு ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பு இது.

இந்தியா எப்போதுமே இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர்களில் தடுமாறி வரும் அணி என்பதனால் இம்முறையும் இங்கிலாந்து இந்திய அணியை உருட்டி எடுப்பதற்கான சகலவித உத்திகளோடும் தயார் நிலையில் இருக்கிறது.

நாளை போட்டி இடம்பெறவுள்ள எட்ஜ்பஸ்டன் ஆடுகளம் வேகப்பந்துக்கும் ஸ்விங் + எகிறலுக்கும் உதவக்கூடியது போலவே தெரிகிறது.


இங்கிலாந்து சர்வ நம்பிக்கையோடு மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் + மிதவேகப்பந்து வீசும் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் என்று அடுக்கியிருக்கும் அதேவேளை மூன்று வருடங்களுக்குப் பிறகு பல சர்ச்சைகளோடு நம்பிக்கையோடு அணியில் சேர்க்கப்பட்டுள்ள அடில் ரஷீட்டுடன் பதினொருவர் கொண்ட முழுமையான அணியையே அறிவித்துள்ளது.

ஒருநாள் போட்டிகளில் சிறப்பாகப் பந்துவீசிய ரஷீட், விராட் கோலியை வீழ்த்திய அந்த மாயாஜால பந்து ஒன்றே அவரை மொயின் அலியைத் தாண்டி அணிக்குள் வந்துள்ளார்.

போதாக்குறைக்கு பல சுழல்பந்துவீச்சாளர்களை வைத்து விசேட பயிற்சிகளும் எடுக்கிறார்கள்.
இங்கிலாந்து தனது வியூகத்தில் குறியாக உள்ளது.

அதுவும் நாளை ஆரம்பிக்கும் டெஸ்ட் இங்கிலாந்தின் ஆயிரமாவது டெஸ்ட் போட்டி.
டெஸ்ட் வரலாற்றில் முதல் அணியாக ஆயிரமாவது டெஸ்ட் போட்டிகளை எட்டிப்பிடிக்கும் முதல் அணி இங்கிலாந்து.

எனவே அந்த மகத்தான மைல்கல் போட்டியை எப்படியாவது வென்றாகவேண்டும் என்று சகலவிடயங்களையும் தயார்ப்படுத்தியுள்ளது.

இந்தியா இன்னும் இறுதி பதினொருவர் பற்றி இன்னும் உறுதிப்படுத்தாத அதே நேரம், கோலியும் ரவி சாஸ்திரியும் இந்திய அணியை வெளிநாட்டு மண்ணிலும் தொடர்ந்து வெல்கின்ற ஒரு அணியாக மாற்றவேண்டும் என்ற விடாப்பிடியான நம்பிக்கையோடு களமிறங்கவுள்ளனர்.
கோலியின் தன்னம்பிக்கையும் எந்த ஆடுகளங்களிலும் சோபிக்கக்கூடிய அணியாக ஒருநாள் போட்டிகளில் மாற்றியதை போல டெஸ்ட்டிலும் மாற்ற எண்ணியுள்ளதும் சேர்ந்து இந்தியாவும் முன்னைய அணிகள் போல இலகுவாகத் தோற்றுவிடாது என்றே தோன்றுகிறது.

துடுப்பாட்ட வரிசை ஓரளவு உறுதியான போதும் இந்தியா இரண்டு சுழல்பந்துவீச்சாளர்களோடு ஆடுமா? அதில் யார் யார் சேர்க்கப்படுவார்கள் என்பதெல்லாம் சுவாரஸ்யமான கேள்விகள்.
இப்போதைக்கு

திங்கள், 30 ஜூலை, 2018

வீணாகிப்போன குசல் பெரேராவின் அதிரடி ! சுழல் + வேகத்தில் இலங்கையைச் சுருட்டிய தென் ஆபிரிக்கா

டெஸ்ட் தொடரில் தென் ஆபிரிக்கா அணியை இலகுவாக வீழ்த்திய இலங்கை அணி மீண்டும் மத்தியூஸின் தலைமையில் களம் கண்ட முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் நேற்று தோல்வி அடைந்தது. இது அஞ்செலோ மத்தியூஸ் தலைமை தாங்கிய 100வது ஒருநாள் சர்வதேசப் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.

ககிசோ றபாடா மற்றும் தப்ரைஸ் ஷம்சியின் சிறப்பான பந்துவீச்சின் மூலம் முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாபிரிக்க அணி 1-0 என முன்னிலை பெற்றது.


ரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில்  நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஒரு கட்டத்தில் 36 ஓட்டங்களுக்கு முதல் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது குசல் பெரேரா மற்றும் திசர பெரேரா ஆகியோர் அபாரமாக ஆடி அணியை நெருக்கடியில் இருந்து மீட்டனர். எனினும், இலங்கை அணியால் தென்னாபிரிக்காவுக்கு சவாலான வெற்றி இலக்கொன்றை நிர்ணயிக்க முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது.   

இந்தப் போட்டியில் இலங்கை ஒருநாள் அணித்தலைவர் அஞ்செலோ மத்தியூஸ் மீண்டும் ஒருநாள் அணிக்குத் திரும்பினார். கடந்த ஜனவரி மாதம் இலங்கை ஒருநாள் அணிக்கு மீண்டும் தலைவராக நியமிக்கப்பட்டது தொடக்கம் ஒரே ஒரு போட்டியில் அணியை வழிநடத்திய நிலையில் இரண்டு வாரத்திற்குள் காயம் காரணமாக அணியில் இருந்து விலகிய மத்தியூஸ் ஒருநாள் அணிக்கு மீண்டும் திரும்புவது இது முதல் முறையாக இருந்தது.

இலங்கை அணி கடந்த ஆறு மாதங்களில் ஆடிய முதல் ஒருநாள் போட்டியாக இது அமைந்தது. அத்துடன் மத்தியூஸ் இலங்கை அணித்தலைவராக தனது 100 ஆவது போட்டியில் அவரால் வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியாதுபோனது.  இலங்கை ஒருநாள் அணிக்கு 100 போட்டிகளில் தலைமை வகிக்கும் நான்காவது வீரராக அவர் பதிவாகினார். இதற்கு முன்னர் அர்ஜுன ரணதுங்க (193), சனத் ஜயசூரிய (118) மற்றும் மஹேல ஜயவர்தன (117) ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர். மத்தியூஸ் தலைமையில் நேற்றைய போட்டியின் தோல்வியோடு 47 வெற்றிகளும் 47 தோல்விகளும் கிடைத்துள்ளன.

இலங்கை அணி 36 ஓட்டங்களுக்குள் முதல் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இலங்கை அணி ஒருநாள் போட்டிகளில் மிகக் குறைந்த ஓட்டங்களுக்கு முதல் ஐந்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த வரிசையில் இது இரண்டாவது இடத்தில் உள்ளது.

எனினும், 6 ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த குசல் பெரேரா மற்றும் திசர பெரேரா ஜோடி அபாரமாக துடுப்பெடுத்தாடி இலங்கை அணிக்கு நம்பிக்கை தந்தனர். விக்கெட்டுகள் சரிந்திருந்தபோதும் இந்த இருவரும் தமது அதிரடி பாணியில் வேகமாக ஓட்டங்களை சேர்த்தனர். இதன்மூலம் இருவரும் இணைந்து 55 பந்துகளில் 92 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர்.

திஸர பெரேரா 30 பந்துகளில் 49 ஓட்டங்களைப் பெற்றார்.

72 பந்துகளுக்கு முகம்கொடுத்த குசல் பெரேரா 11 பௌண்டரிகள் ஒரு சிக்ஸருடன் 81 ஓட்டங்களை பெற்றார். இலங்கை அணி 34.3 ஓவர்களில் 193 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

தென்னாபிரிக்க அணி சார்பில் மிரட்டும் பந்துவீச்சை வெளிக்காட்டிய வேகப்பந்து வீச்சாளர் ககிசோ றபாடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒருநாள் போட்டிகளில் தனது நான்காவது சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அதேபோன்று இடதுகை சுழல் வீரர் ஷம்சியும் நான்கு விக்கெட்டுகளை பதம்பார்த்து தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார்.

தனஞ்செயவின் பந்துவீச்சில் சிக்கலை எதிர்கொண்டிருந்தாலும்
மூன்றாவது விக்கெட்டுக்கு இணைந்த குயின்டன் டி கொக் மற்றும் அணித்தலைவர் ஃபப் டூ பிளசிஸ் 86 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணியை நெருக்கடியில் இருந்து மீட்டனர். இந்நிலையில் இருவரும் தலா 47 ஓட்டங்களை பெற்று 3 ஓவர்கள் இடைவெளியில் ஆட்டமிழந்தபோதும் தென்னாபிரிக்க அணிக்கு அது சவாலாக இருக்கவில்லை.

மத்திய வரிசையில் அனுபவம் வாய்ந்த ஜே.பி. டுமினி அணியை வெற்றி வரை அழைத்துச் சென்றார். இதன்மூலம் தென்னாபிரிக்க அணி 31 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. டுமினி ஆட்டமிழக்காது 53 ஓட்டங்களை பெற்றார்.

இலங்கை சார்பில் தனஞ்சய ஒருநாள் போட்டிகளில் தனது மூன்றாவது சிறந்த பந்துவீச்சை வெளிக்காட்டி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இலங்கை அணியின் விக்கெட்டுகளை சாய்த்து தென்னாபிரிக்காவின் வெற்றியை உறுதி செய்த தப்ரேய்ஸ் ஷம்சிக்கு போட்டியின் ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. 


இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் ஓகஸ்ட் முதலாம் திகதி தம்புள்ளையில் பகலிரவு ஆட்டமான நடைபெறவுள்ளது.

சனி, 21 ஜூலை, 2018

சாதனைக்கு மேல் சாதனை !! பாகிஸ்தான் + ஃபக்கார் சமான் அசுர ஆட்டம் !!

சாதனைக்கு மேல் சாதனைகளுடன் சிம்பாப்வே அணியை நான்காவது தொடர்ச்சியான போட்டியில் இன்று வதம் செய்தது பாகிஸ்தான் அணி.


இதில் சில உலக சாதனைகள், இன்னும் சில பாகிஸ்தானின் தனிப்பட்ட சாதனைகள்..
தொடர்ச்சியாக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில்  ஓட்டங்களை மலையாகக் குவித்துவரும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஃபக்கார் சமான் பாகிஸ்தானின் முதலாவது ஒருநாள் சர்வதேச இரட்டைச் சதத்தையும் பெற்றுக்கொண்டார்.


சிம்பாப்வே அணிக்கு எதிராக இன்று  புலவாயோ மைதானத்தில் நடைபெற்ற நான்காவது ஒரு நாள் போட்டியில், பாகிஸ்தான் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடியாக களமிறங்கிய ஃபக்கார் சமான் மற்றும் இமாம் உல் ஹக், ஒரு நாள் போட்டிகளில் ஆரம்ப விக்கெட்டுக்காக அதிகூடிய ஓட்டங்களை பகிர்ந்து உலக சாதனை படைத்துள்ளதுடன், தங்களது அணியின் அதிகூடிய ஒரு நாள் ஓட்டங்களை பதிவுசெய்யவும் உதவியுள்ளனர்.

12 வருடங்களாக நிலைத்திருந்த இலங்கை அணி படைத்த உலக சாதனை முதலில் முறியடிக்கப்பட்டது.

சதங்களைக் குவித்த  இருவரும் 39.3 ஓவரில் இணைப்பாட்டமாக 287 ஓட்டங்களைபெற்று, இலங்கையின் சனத் ஜயசூரிய மற்றும் உபுல் தரங்க ஆகியோர் கடந்த 2006ஆம்ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக லீட்ஸ் மைதானத்தில் பெற்றிருந்த 286 என்ற முதல் விக்கெட்டுக்கான இணைப்பாட்ட உலக சாதனையை முறியடித்தனர்.

தொடர்ந்தும் பாகிஸ்தான் அணியின் ஓட்டங்கள் விரைவாக உயர்த்தப்படஇமாம் உல் ஹக், 42 ஓவரில் தனது விக்கெட்டினை வெலிங்டன் மசகட்சாவிடம் பறிகொடுத்து, சாதனை இணைப்பாட்டத்துக்குமுற்றுப்புள்ளி வைத்தார்.

இமாம் உல் ஹக் 122 பந்துகளை எதிர்கொண்டு, எட்டு பௌண்டரிகள் அடங்கலாக 113 ஓட்டங்களை பெற, பாகிஸ்தான் அணி304 என்ற முதல் விக்கெட் இணைப்பாட்ட உலக சாதனையை பதிவுசெய்தது.

ஒரு நாள் போட்டிகளில் முதல் விக்கெட்டுக்காக அதிக ஓட்டங்களை இணைப்பாட்டமாகப்  பெற்ற வரிசையில் தற்போது 304 ஓட்டங்களுடன் ஃபக்கார் சமான் மற்றும் இமாம் உல் ஹக் ஜோடி முதலிடத்தை பிடித்துள்ளது.
இலங்கை அணியின் சனத் ஜயசூரிய மற்றும் உபுல் தரங்க ஜோடி286 ஓட்டங்களுடன் இரண்டாவது இடத்தையும், அவுஸ்திரேலிய அணியின்டேவிட் வோர்னர் மற்றும் ட்ராவிஸ் ஹெட் 284 ஓட்டங்களுடன் மூன்றாவதுஇடத்தையும் பிடித்துள்ளனர்.


இவர்களது இந்த இணைப்பாட்டம் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் பெறப்பட்ட அனைத்து விக்கெட்டுக்களுக்குமான  மூன்றாவது அதிகூடிய இணைப்பாட்டம் என்ற சாதனைப் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது.
2015ஆம் ஆண்டு சிம்பாப்வேஅணிக்கு எதிரான உலகக்கிண்ண ஒரு நாள் போட்டியில் கிறிஸ் கெயில் மற்றும் சாமுவேல்ஸ் 372 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுள்ளனர்.
சச்சினும் டிராவிட்டும் 1999 உலகக்கிண்ணப் போட்டிகளில் 331 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.

இதற்கு அடுத்த இடத்தை கங்குலி மற்றும் ட்ராவிட் ஜோடி பிடித்துள்ளது. இவர்கள் நியூஸிலாந்து அணிக்கு எதிராக 1999ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் 2ஆவது விக்கெட்டுக்காக 318 ஓட்டங்களை குவித்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாகவே ஃபக்கார் சமான் மற்றும் இமாம் உல் ஹக்ஆகியோரின் இன்றைய சாதனை ஓட்டம் பதிவாகியுள்ளது.


இவர்களது இணைப்பாட்ட சாதனையை தொடர்ந்து, பாகிஸ்தான் அணிதங்களது அதிகூடிய ஒரு நாள் ஓட்ட சாதனையை நிலை நாட்டியதுடன், ஃபக்கார் சமான், பாகிஸ்தான் அணிக்காக ஒரு நாள் போட்டியில் அதிகூடியஓட்டங்களை விளாசிய வீரர் என்ற சாதனையும் பதிவுசெய்துள்ளார்.

2010ஆம் ஆண்டு தம்புள்ளையில் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்குஎதிரான ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி, 7 விக்கெட்டுகளை இழந்து385 ஓட்டங்களை பெற்றிருந்ததே பாகிஸ்தான் பெற்ற கூடுதல் ஒருநாள் சர்வதேச ஓட்ட எண்ணிக்கையாக இருந்தது. இன்றைய தினம் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 399 ஓட்டங்களை குவித்து, தங்களது சாதனையை புதுப்பித்துள்ளது. ஒரேயொரு ஓட்டத்தினால் 400 ஓட்டங்களை பெறும் வாய்ப்பை இழந்தது.



இந்த சாதனையுடன் ஃபக்கார் சமான் இன்று பாகிஸ்தான் அணி சார்பில் இரட்டை சதம்அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும், அணிக்காக அதிக ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டார்.

சயீட் அன்வர் 1997ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 194 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், குறித்த ஓட்ட எண்ணிக்கையை ஃபக்கார் சமான் கடந்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பெறப்பட்ட 9வது இரட்டைச் சதம் இதுவாகும். ஆறாவது வீரர் சமான் ஆவார்.
ரோஹித் ஷர்மா மட்டுமே ஒன்றுக்கு மேற்பட்ட இரட்டைச் சதங்களைப் பெற்றுள்ளார்.


அதன் பின்னர் தனது துல்லியமான பந்துவீச்சு மூலம் சிம்பாப்வே அணியை 155 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழக்கச் செய்த பாகிஸ்தான் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தன்னுடைய இரண்டாவது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக்கொண்டது.

பாகிஸ்தானின் மிகப்பெரிய வெற்றி அயர்லாந்து அணிக்கு எதிராக 2015இல் பெற்ற 255 ஓட்ட வெற்றியாகும்.

இன்றைய போட்டியில் ஷடாப் கான் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதேவேளை சிம்பாப்வே அணியின் இரண்டாவது மோசமான தோல்வியும் இதுவாகும். தென் ஆபிரிக்காவுக்கு எதிராக எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் 272 ஓட்டங்களால் தோற்றதே சிம்பாப்வே அணியின் மோசமான தோல்வியாகும்.

முன்னாள் அணித் தலைவர்கள் உட்பட முன்னணி வீரர்கள் பலரும் சிம்பாப்வே கிரிக்கெட் சபையுடன் ஒப்பந்த, ஊதிய விவகாரங்களால் மோதி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதால் மிகப் பலவீனமடைந்துள்ள சிம்பாப்வே அணி தொடர்ந்தும் மோசமான தோல்விகளைக் கொண்டுவருகிறது.


புதன், 18 ஜூலை, 2018

இங்கிலாந்தின் சுழலில் சிக்கிய இந்தியா ! ரூட்டின் சதத்துடன் தொடர் வெற்றி !

ஜோ ரூட்டின் அபாரமான ஆட்டமிழக்காத சதத்துடன் நேற்றைய லீட்ஸ் ஒருநாள் சர்வதேசப் போட்டியை வென்றது இங்கிலாந்து.
ஜோ ரூட் அவரது 13வது ஒருநாள் சதத்தைப் பெற்றதன் மூலம் இங்கிலாந்து சார்பாக அதிக ஒருநாள் சதங்களைப் பெற்றவர் ஆனார். முன்னைய சாதனை மார்க்கஸ் ட்ரெஸ்கோதிக் 12 சதங்கள்.

இங்கிலாந்து – இந்திய அணிகளுக்கிடையில் லீட்ஸ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற தொடரைத் தீர்மானித்த மூன்றாவது ஒரு நாள் போட்டியில் ஜோ ரூட் மற்றும் அணியின் தலைவர் ஒயின் மோர்கன் ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டத்தின் உதவியுடன் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரையும் அவ்வணி 2-1 எனக் கைப்பற்றியுள்ளது.

இந்திய அணி 1997ஆம் ஆண்டுக்கு பின்னர் சந்தித்த 7 தீர்மானம் மிக்க இறுதிப் போட்டிகளிலும் வெற்றியை தக்கவைத்திருந்த நிலையில், நேற்று அந்த வரலாறு இங்கிலாந்து அணியால் தகர்க்கப்பட்டது.

இந்த வெற்றியுடன் இங்கிலாந்து பெற்றுள்ள தொடர்ச்சியான எட்டாவது ஒருநாள் தொடர் வெற்றி.
இந்தியாவின் தொடர்ச்சியான 9 ஒருநாள் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி இடப்பட்டது.இந்தத் தொடரில் இந்தியா அடைந்துள்ள தோல்வியே விராட் கோலியின் தலைமையில் இந்தியா கண்டுள்ள முதலாவது ஒருநாள் தொடர் தோல்வியாகும்.

இந்தியா துடுப்பாடியவேளையில் விராட் கோலி மிகச்சிறப்பாக ஆடி 71 ஓட்டங்களைப் பெற்றார்.
எனினும் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் அனைவருமே இங்கிலாந்தின் சுழல் பந்து வீச்சாளர்கள் அடில் ரஷீத் மற்றும் மொயின் அலியின் பந்துவீச்சை எதிர்கொள்வதில் சிரமப்பட்டனர்.
ரஷீத்தின் சிறப்பான சுழல்பந்துவீச்சில் விராட் கோலி கூடத் தடுமாறி ஆட்டமிழந்தார்.

ரஷீத் 49/3
வேகப்பந்துவீச்சாளர் டேவிட் வில்லி 40/3

இங்கிலாந்து துரத்தியவேளையில் வெற்றி இலக்கை அடையும் ஓட்டங்களைப் பெறும் நேரம் தனது சதத்தையும் பெற்றார்.
அணியின் தலைவர் ஒயின் மோர்கன் ஆட்டமிழக்காமல் 88 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

சுழற்பந்து வீச்சில் மிரட்டிய அடில் ரஷீத் போட்டியின் சிறப்பாட்டக்காரர்.

தொடரின் நாயகன் - ஜோ ரூட்.
#ENGvIND

சிம்பாப்வே 67 !! பாகிஸ்தானின் அதிரடி வெற்றி, சாதனையுடன்..

சிம்பாப்வேக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 67 ஓட்டங்களுக்கு சிம்பாப்வே அணியை சுருட்டிய பாகிஸ்தான் 9 விக்கெட்டுக்களால் அபாரமான சாதனை வெற்றியைப் பெற்றது.

பாகிஸ்தான் எதிரணியொன்றை சுருட்டிய மிகக்குறைவான ஓட்ட எண்ணிக்கையை மூன்றே மூன்று ஓட்டங்களால் முந்திக்கொண்டு சிம்பாப்வே பாகிஸ்தானின் துல்லியமான பந்துவீச்சில் 25.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

Lowest totals Pakistan has bowled out the opposition for in ODIs: 64 versus New Zealand in 1986 67 versus Zimbabwe today

மிதவேகப்பந்து வீசும் சகலதுறை வீரர் ஃபஹீம் அஷ்ரப் தனது மிகச்சிறந்த பந்துவீச்சுப் பெறுதியையும் கன்னி ஐந்து விக்கெட் பெறுதியையும் பெற்றுக்கொண்டார்.
அஷ்ரப் - 22/5

பல காலத்துக்குப் பிறகு இந்தத் தொடருக்காக அணியில் சேர்க்கப்பட்ட ஜுனைத் கானும், யசீர் ஷாவும் பிரகாசித்திருந்தார்கள்.
ஜுனைத் கான் - ஐந்து ஓவர்களில் 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்கள்.
யசீர் ஷா - 7 ஓவர்களில் 10 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கெட்.

வெற்றி இலக்கை 241 பந்துகள் மீதமிருக்க ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து கடந்தது பாகிஸ்தான்.

அதிக பந்துகள் மீதமிருக்க வெற்றி இலக்கை அடைந்த பாகிஸ்தானின் சாதனை இதுவாகும்.
முன்னதாக 28 ஆண்டுகளுக்கு முதல் 1990இல் நியூசீலாந்து அணிக்கு எதிராக 206 பந்துகள் மீதமிருக்க வெற்றியைப் பெற்றதே பாகிஸ்தானின் சாதனையாக இருந்தது.

இன்றைய வெற்றியுடன் பாகிஸ்தான் தொடரையும் இப்போதே கைப்பற்றியுள்ளது.

இன்றைய போட்டியின் நாயகனாக ஃபஹீம் அஷ்ரப் தெரிவானார்.


வியாழன், 5 ஜூலை, 2018

தடை தாண்டி தலைவராக விளையாடுவாரா சந்திமால்? இலங்கை அணி அறிவிப்பு !


எதிர்வரும் 12 ஆம் திகதி  காலியில் ஆரம்பமாகவிருக்கும் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள 16 பேர் அடங்கிய இலங்கை குழாத்தினை தேசிய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்கள் இன்று வெளியிட்டிருக்கின்றனர்.


இந்த டெஸ்ட் தொடரிலும் இலங்கை அணியினை வழிநடாத்தும் பொறுப்பு தினேஷ் சந்திமாலுக்கே கொடுக்கப்பட்டிருக்கின்றது. எனினும், சென். லூசியாவில் மேற்கிந்திய தீவுகள் – இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தினை இரண்டு மணிநேரம் தாமதித்த குற்றச்சாட்டு சந்திமால் மீது உள்ள நிலையிலேயே அவர் அணித்தலைவராக நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

சந்திமாலின் இந்த தவறு கிரிக்கெட்டின் மகத்துவத்தினைப் பேணத்தவறிய மூன்றாம் நிலை (Level 3) குற்றம் என்பதால் அவர் இந்த டெஸ்ட் தொடரில் விளையாடும் வாய்ப்பினை முழுமையாக இழக்கும் நிலை காணப்படுகின்றது என்று கிரிக்கெட் தமிழில் இதற்கு முந்தைய செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

சந்திமாலோடு சேர்த்து இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க, இலங்கை அணியின் பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்க ஆகியோரும் போட்டியினை தாமதித்த மூன்றாம் நிலை குற்றத்தில் தாம் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட நிலையில் இவர்களுக்கு ஜூலை 10 ஆம் திகதி (முதலாம் டெஸ்ட் போட்டிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக) ஐ.சி.சி. இன் நீதியாணையாளர் தலைமையில் இடம்பெறும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நான்கு தொடக்கம் எட்டு வரையிலான போட்டி இடைநிறுத்தல் புள்ளிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திமால் போட்டி இடைநிறுத்தல் புள்ளிகளை பெறுவராயின் அவருக்கு தென்னாபிரிக்க அணியுடனான இந்த டெஸ்ட் தொடரிலும் அதனை அடுத்துவரும் இன்னும் சில போட்டிகளிலும் விளையாட முடியாது போகலாம்.

எனவே, சந்திமால் போட்டித் தடையினைப் பெறுகின்ற நிலையில் இலங்கை அணியினை தென்னாபிரிக்காவுடனான இந்த டெஸ்ட் தொடரில் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளரான, உப தலைவர் சுரங்க லக்மால் வழிநடாத்துவார். லக்மாலின் தலைமையிலான இலங்கை அணி பார்படோஸ் டெஸ்ட் வெற்றியுடன் மேற்கிந்திய தீவுகளுடனான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை 1-1 என சமநிலைப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த டெஸ்ட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட்  தொடரில் காயம் காரணமாக விளையாடாது போயிருந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான டிமுத் கருணாரத்ன மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டிருக்கின்றார். டிமுத் கருணாரத்ன இலங்கை அணியில் தொடக்க வீரரான மஹேல உடவத்தவின் இடத்தினை எடுத்துக் கொள்கின்றார். மஹேல உடவத்த அண்மைய மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடரில் நான்கு இன்னிங்ஸ்களில் துடுப்பாடி வெறும் 23 ஓட்டங்களினை மாத்திரமே குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தனது இரண்டாவது குழந்தையின் பிறப்பின் காரணமாக மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட்  தொடரின் இறுதி இரண்டு போட்டிகளிலும் விளையாடாது நாடு திரும்பியிருந்த இலங்கையின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட அணியின் தலைவர் அஞ்செலோ மெதிவ்சும் தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடருக்கு அழைக்கப்பட்டிருக்கின்றார்.


இன்னும், இத்தொடருக்கான இலங்கை அணிக்கு சைனமன் சுழல் (இடதுகை மணிக்கட்டு) வீரரான லக்ஷான் சந்தகனுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றது. சந்தகன் மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடரின் போது ஒழுக்க விதிகளை மீறிய குற்றச்சாட்டில் நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்ட சுழல் வீரரான ஜெப்ரி வன்டர்செயினை அணியில் பிரதியீடு செய்திருக்கின்றார்.

அதேநேரம் குசல் பெரேரா, ரங்கன ஹேரத் ஆகியோரும் இந்த டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியில் இணைக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் உடற்தகுதியினை நிரூபிக்க வேண்டிய கட்டாய நிலையில் காணப்படுகின்றனர். குசல் ஜனித் பெரேரா மேற்கிந்திய தீவுகளுடன் பார்படோஸில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது விளம்பர பலகையில் மோதி உபாதைக்கு ஆளாகியிருந்துடன், ரங்கன ஹேரத் மேற்கிந்தியத் தீவுகளுடனான டெஸ்ட் தொடரில் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த போது காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாளை மறுதினம் தென் ஆபிரிக்காவுக்கு எதிராகக் கொழும்பில் ஆரம்பமாகவுள்ள பயிற்சிப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் சபை அணிக்குத் தலைவராக மத்தியூஸ் நியமிக்கப்பட்டுள்ள அதேநேரம், மேற்கிந்தியத் தீவுகளில் சோபிக்காத துடுப்பாட்ட வீரர்கள் தனஞ்சய டீ சில்வா, ரொஷேன் சில்வா மற்றும் தனுஷ்க குணத்திலக்க ஆகியோரும் பெயரிடப்பட்டுள்ளார்கள்.

இலங்கை குழாம்

தினேஷ் சந்திமால் (அணித்தலைவர்), சுரங்க லக்மால் (உப அணித்தலைவர்), அஞ்செலோ மத்தியூஸ், டிமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், தனுஷ்க குணத்திலக்க, தனஞ்சய டி சில்வா, ரொஷேன் சில்வா, நிரோஷன் திக்வெல்ல, குசல் ஜனித் பெரேரா (உடற்தகுதி சரியாகும் பட்சத்தில்), ரங்கன ஹேரத் (உடற்தகுதி சரியாகும் பட்சத்தில்), தில்ருவான் பெரேரா, அகில தனன்ஞய, லக்ஷான் சந்தகன், லஹிரு குமார, கசுன் ராஜித

மேலதிக வீரர்கள்

அசித்த பெர்னாந்து, தசுன் சானக்க, மலிந்த புஷ்பகுமார, ஷெஹான் ஜயசூரிய

- அசீம் ஷெரிப்

பதிலடி கொடுத்த பாகிஸ்தான் ! முத்தரப்பு T20 தொடரின் இறுதிப்போட்டிக்குத் தெரிவு !!

பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் சிம்பாப்வேயின் ஹராரே மைதானத்தில் இன்று  நடைபெற்ற T20 போட்டியில் பாகிஸ்தான் அணி 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சில் சுருண்டு தோற்றிருந்த பாகிஸ்தான்
இன்றைய வெற்றி மூலம் முத்தரப்பு T20 தொடரின் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ள பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.



சிம்பாப்வே, பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதும் முத்தரப்பு T20 தொடர் சிம்பாப்வேயில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இத்தொடரின் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட அவுஸ்திரேலிய அணி, 55 பந்துகள் மீதமிருக்க ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிக இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது. T20 தரவரிசையில் முதலிடத்தை பிடித்திருக்கும் பாகிஸ்தான் அணிக்கு இந்த தோல்வியானது அதிகளவான தாக்கத்தையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், இன்றைய போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுத்து, T20 தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ள அணி என்பதை நிரூபிக்கும் கட்டாயத்தில் பாகிஸ்தான் அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்கியிருந்தது. சிம்பாப்வே அணிக்கெதிரான T20 போட்டியில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலிக்குப் பதிலாக 19 வயதான இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி அணிக்குள் உள்வாங்கப்பட, அவுஸ்திரேலிய அணி மாற்றங்கள் இன்றி களமிறங்கியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை பாகிஸ்தான் அணிக்கு வழங்கியது.

பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்
ஃபக்கர் சமான் 42 பந்துகளுக்கு முகங்கொடுத்து 3 சிக்ஸர்கள் மற்றும் 9 பௌண்டரிகள் அடங்கலாக 73 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.  பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களை குவித்துக்கொண்டது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அன்றூ டை 4 ஓவர்கள் பந்து வீசி, 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கடினமான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு ஏரோன் பின்ச்சின் ஆட்டமிழப்பு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது. சிம்பாப்வே அணிக்கெதிரான போட்டியில் 172 ஓட்டங்களை விளாசி உலக சாதனை படைத்திருந்த பின்ச்சை, பாகிஸ்தான் அணியின் ஷஹீன் அஃப்ரிடி போல்ட் முறையில் ஆட்டமிழக்கச் செய்து வெளியேற்றினார். ஏரோன் பின்ச் 11 பந்துகளை எதிர்கொண்டு 16 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொடுத்திருந்தார்.

அவுஸ்திரேலிய அணியின் மத்திய வரிசை வீரர்களும் பாகிஸ்தானின் பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

நிதானமாக துடுப்பெடுத்தாடிய டார்சி ஷோர்ட் அதிக பந்துகளை எதிர்கொண்ட போதிலும் போதுமான வேகத்தில் ஓட்டங்களை பெற்றுக்கொள்ள தவறினார். இவர் 34 பந்துகளுக்கு 28 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொடுத்து வெளியேறினார். இவரைத் தொடர்ந்து ஏனைய துடுப்பாட்ட வீரர்களும் தொடர்ச்சியாக ஆடுகளம் விட்டு நடையைக் கட்டினர்.

எனினும், அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு சற்று வலிமை கொடுத்த அலெக்ஸ் கெரி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 37 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தாலும், அவுஸ்திரேலிய அணியால் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுகளை இழந்து 149 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது.

பாகிஸ்தான் அணி சார்பில் தனது வேகத்தால் மிரட்டிய இளம் புயல் ஷஹீன் அப்ரிடி நான்கு ஓவர்கள் பந்து வீசி 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


இதனால், இந்த போட்டியில் அவுஸ்திரேலிய அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் T20 தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறுவதற்கு வாய்ப்பிருந்த போதும், அந்த வாய்ப்பினை அவுஸ்திரேலிய அணி தவறவிட்டது. இன்றைய போட்டியில் தோல்வியடைந்தாலும் முத்தரப்பு தொடருக்கான இறுதிப் போட்டியின் வாய்ப்பை 8 புள்ளிகளுடன் அவுஸ்திரேலிய அணி தக்கவைத்துள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலிய அணி, சிம்பாப்வே அணியுடன் மோதவுள்ள அடுத்த T20 போட்டியில் தோல்வியடைந்து, இந்திய அணி இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டு T20 போட்டிகளிலும் வெற்றி பெறுமாயின் அவுஸ்திரேலிய அணி ஐசிசி T20 தரவரிசையில் மூன்றாவது இடத்துக்கு பின்தள்ளப்படும். இதன்மூலம்  இந்திய அணி ஐசிசி T20 தரவரிசையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும்.

எனினும் இன்றைய வெற்றியுடன் பாகிஸ்தான் குறைந்தது எதிர்வரும் ஒக்டொபர் மாதம் வரை T20 தரவரிசையில் முதலிடத்திலிருந்து கீழே இறங்க வாய்ப்பில்லாத உறுதியான நிலையைப் பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியா மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான அடுத்த T20 போட்டி நாளை (06) ஹராரே மைதானத்தில் நடைபெறவுள்ளது.


இன்றைய போட்டியின் ஆட்ட நாயகன் விருது ஃபக்கார் சமானுக்கு வழங்கப்பட்டது. 

அசீம் ஷெரிப்

புதன், 4 ஜூலை, 2018

விராட் கோலி மற்றொரு புதிய சாதனை !!


இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது T20 போட்டியில் இந்திய அணியின் தலைவர் விராட் கோலி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கெதிராக நேற்று மன்செஸ்டரில் நடைபெற்ற முதல் T20 போட்டியில் இந்திய அணி, கே.எல். ராகுலின் சதத்துடன் இலகுவான 8 விக்கட்டுகள் வெற்றிபெற்றிருந்தது.

நேற்றைய போட்டியில் 20 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட விராட் கோலி, சர்வதேச T20 போட்டிகளில் வேகமாக 2000 ஓட்டங்களைக் கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டுள்ளார்.

60 சர்வதேச T20 போட்டிகளில் விளையாடிய கோலி வெறும் 56 இன்னிங்ஸ்களில் 2000 ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச T20 போட்டிகளில் ஏற்கனவே நியூஸிலாந்து அணியின் மார்டின் குப்டில், பிரெண்டென் மெக்கலம், பாகிஸ்தானின் சொஹைப் மலிக் ஆகியோர் 2000 ஓட்டங்களை கடந்துள்ளதுடன், நான்காவதாக விராட் கோலி 2000 ஓட்டங்களை கடந்துள்ளார். \

எனினும் இந்திய ஆடவர் கிரிக்கெட்டில் தான் இந்த மைல்கல்லை கடந்த முதலாவது வீரர் விராட் கோலி என்பதுடன், மகளிர் கிரிக்கெட்டில் மிதாலி ராஜ் ஏற்கனவே இந்த மைல்கல்லை அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.



செவ்வாய், 3 ஜூலை, 2018

சுரங்க லக்மால் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராகத் தொடரவுள்ளார் ?


தென்னாபிரிக்க அணிக்கெதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியின் தலைராக சுரங்க லக்மால் தொடர்ந்து செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் நிர்வாகக்குழுவுக்கு இரண்டு போட்டிகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மே.தீவுகளுக்கு எதிராக சென் லூசியாவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, சந்திமால் பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டப்பட்டது.

எனினும் பந்தை சேதப்படுத்தியதை ஏற்றுக்கொள்ளாத இலங்கை அணி வீரர்கள், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள், இரண்டு மணி்த்தியாலம் வரை விளையாடவில்லை.

பின்னர் அடுத்த நாள் ஆதாரங்களை முன்வைத்த ஐசிசி சந்திமால் உட்பட ஹத்துருசிங்க மற்றும் அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோருக்கு தடை விதித்தது. இதனால் மே.தீவுகள் அணிக்கெதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் சந்திமால் விளையாடவில்லை.

அத்துடன் ஐசிசியின் மூன்றாம் நிலை குற்றம் புரிந்தமைக்காக, சந்திமாலுக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடைவதிக்க முடியும் என்ற நிலையில், தென்னாபிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான தலைவர் பதவி லக்மாலுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மே.தீவுகளுக்கெதிரான பார்படோஸில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியை லக்மால் தலைமையிலான இலங்கை அணி வெற்றிக்கொண்டது. அத்துடன் பார்படோஸில் டெஸ்ட் போட்டியை வென்ற முதலாவது தலைவர் என்ற பெருமையையும் லக்மால் பெற்றுள்ளார். இதனால் அணித்தலைவர் பதவியை லக்மால் ஏற்பார் எனவும், சந்திமால் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட மாட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனினும் உபாதையிலிருந்து குணமடைந்துள்ள திமுத் கருணாரத்ன மற்றும் மே.தீவுகளிலிருந்து நாடு திரும்பிய மெத்தியூஸ் ஆகியோர் தென்னாபிரிக்க தொடரில் விளையாடுவர் என்ற தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.

- அசீம் ஷெரிப்

இலங்கைக்கு ICC எச்சரிக்கை !!


Sri Lanka Cricket - ஸ்ரீலங்கா கிரிக்கெட் எனப்படும் இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தல் எதிர்வரும் 6 மாதங்களுக்குள் நடத்தப்படாவிட்டால் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உறுப்புரிமை பறிக்கப்பட நேரிடும் என ஐசிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.

டப்லினில் நேற்று நடைபெற்ற ஐசிசியின் வருடாந்த சந்திப்பின் போது, எடுக்கப்பட்ட தீர்மானங்களில் ஒன்றாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தேர்தல் விவகாரமும் விவாதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும், விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா, தற்போதைக்கு ஐசிசியின் இலங்கை பிரதிநிதியாக செயற்பட முடியும்.

எனினும் இந்த நிலை நீண்ட நாட்களுக்கு தொடர முடியாது எனவும், இன்னும் 6 மாதங்களுக்குள் இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தல் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட்  தேர்தல் நடத்தப்படாவிட்டால், ஐசிசி வழங்கியுள்ள உறுப்புரிமை தொடர்பில் ஆராயப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதே நிலையை பாகிஸ்தான், சிம்பாப்வே மட்டுமன்றி  Associate அந்தஸ்து நாடுகளின் சபைகளுக்கும் இந்நிலை ஏற்பட்டிருக்கிறது என்பது சுட்டிக்காட்டத் தக்கது.


திங்கள், 2 ஜூலை, 2018

பாகிஸ்தானின் தொடர் வெற்றிகளுக்கு படுதோல்வியுடன் முற்றுப்புள்ளி வைத்த அவுஸ்திரேலியா !!

சிம்பாப்வேயில் நடைபெற்று வரும் முத்தரப்பு T20 தொடரின் 2வது  போட்டியில் சர்வதேச T20 தரப்படுத்தலில் முதலிடத்தை வகிக்கும் பாகிஸ்தான் அணியை, அவுஸ்திரேலிய அணி பந்தாடியுள்ளது.

இதன்மூலம் 8 சர்வதேசப் போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்றுவந்த பாகிஸ்தானின் தொடர் வெற்றிகளுக்கு அவுஸ்திரேலியா முற்றுப்புள்ளி இட்டுள்ளது.

சிம்பாப்வே, பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதும் T20 முக்கோணத் தொடர் நேற்று ஆரம்பமாகியது. முதல் போட்டியில் சிம்பாப்வேயை வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி இன்று அவுஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது.

இங்கிலாந்து அணியிடம் 5 ஒருநாள் மற்றும் ஒரு T 20 எனத் தொடர்ச்சியாக தோல்வியை தழுவிவந்த ஆஸி அணியின் பந்து வீச்சு போட்டியை பிரகாசப்படுத்தியது.


முக்கியமாக உயரமான வீரர் பில்லி ஸ்டான்லேக் தன்னுடைய எகிறும் பந்துகள் அதே போல அதிவேகப் பந்துவீச்சு மூலம் பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர்களை திணறடித்தார்.

பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய மொஹமட் ஹபீஸ் பூஜ்ஜியம், ஃபக்கார்  சமான் 6 ஓட்டங்கள், ஹுசைன் டலாத் 10 ஓட்டங்கள் மற்றும் அணித்தலைவர் சப்ராஸ் அஹமட் 4 ஓட்டங்கள் என அனைவரையும் தனது வேகத்தால் ஸ்டான்லேக் அடுத்தடுத்து வெளியேற்றினார்.

ஸ்டான்லேக்கின் பந்துவீச்சுப் பெறுதி  - 4-0-8-4 !!

தொடர்ந்து களமிறங்கிய சொயிப் மலிக் துரதிஷ்டவசமாக 13 ஓட்டங்களுடன் ரன்-அவுட் மூலமாக ஆட்டமிழந்தார். எனினும் அடுத்ததாக களமிறங்கிய ஷடாப் கான் மற்றும் பஹீம் அஷ்ரப் ஆகியோர் ஓரளவு சிறப்பாக ஆடினர்.

ஷடாப் கான் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடங்கலாக 29 ஓட்டங்களையும், பஹீம் அஸ்ரப் 2 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக 21 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, ஷடாப் கானை அன்றூ டை வெளியேற்ற, பஹீம் அஸ்ரப்பை ரிச்சட்சன் வெளியேற்றினார்.

அடுத்தடுத்து விக்கட்டுகளை பறிகொடுத்த பாகிஸ்தான் அணி 116 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அவுஸ்திரேலிய அணியின் பந்து வீ்ச்சில் ஸ்டான்லேக் 4 விக்கட்டுகளையும்,  டை 3 விக்கட்டுகளையும் அதிகபட்சமாக வீழ்த்தினார்.

இந்நிலையில் பெறக்கூடிய வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி ஒரு விக்கட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கினை அடைந்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷோர்ட் மாத்திரம் 15 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, அணித்தலைவர் ஏரோன் பின்ச் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை திணறடித்தார்.

இவர் 6 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களையும், டிரவிஸ் ஹெட் 20 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுக்க, அவுஸ்திரேலிய அணி வெறும் 10.5 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக அவுஸ்திரேலிய அணியின் பில்லி ஸ்டான்லேக் தெரிவுசெய்யப்பட்டார்.

இந்த வெற்றி அவுஸ்திரேலியாவின் இளைய, அனுபவம் குறைந்த அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையும் உற்சாகமும் தந்திருப்பதாக ஏரோன் பின்ச் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
Related Posts Plugin for WordPress, Blogger...