PSL Play Off போட்டிகள்: ரசிகர்களுக்கு அனுமதி வழங்கி பாகிஸ்தான் பிரதமர் உத்தரவு!
பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரின் PSL Play Off மற்றும் இறுதிப் போட்டிகளை மைதானத்திற்குச் சென்று நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் இதற்கான அங்கீகாரத்தை இன்று வழங்கியுள்ளார்.
ஈரான் போர் சூழல் காரணமாக எரிபொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த, இந்த ஆண்டு பி.எஸ்.எல் போட்டிகள் மூடிய கதவுகளுக்குப் பின்னால் ஆரம்பமாகின. இந்நிலையில், தற்போது இந்தத் தடையை நீக்க பிரதமர் முடிவு செய்துள்ளார்.
நிபந்தனையுடன் அனுமதி :
பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் (PCB) தலைவரும், உள்துறை அமைச்சருமான மோசின் நக்வி, பிரதமருடனான சந்திப்பிற்குப் பிறகு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். "தேசிய சிக்கன நடவடிக்கைகளுக்கு அமைவாக, மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும் அல்லது எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள வேண்டும்" என்ற நிபந்தனையுடன் பிரதமர் இந்த அனுமதியை வழங்கியதாக நக்வி தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முக்கியப் போட்டிகள் விபரம்: இந்த அனுமதியின்படி, கராச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள PSL Qualifier போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பெஷாவர் சல்மி மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் மோதவுள்ளன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.
அதைத் தொடர்ந்து, நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள Eliminator போட்டியில் ஹைதராபாத் கிங்ஸ்மென் மற்றும் முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்தத் தொடரின் பிரம்மாண்ட இறுதிப் போட்டி மே மாதம் 3ஆம் திகதி லாகூரில் நடைபெறவுள்ளது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு மைதானத்திற்குள் நுழைய அனுமதி கிடைத்துள்ளதால் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

0 கருத்துகள்