ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதிய சீர்திருத்தக் குழுவின் தலைவராக எரான் விக்ரமரத்ன நியமனம்
ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில், அதன் புதிய சீர்திருத்தக் குழுவின் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஶ்ரீ லங்கா கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் இன்று(29) தமது பதவி விலகல் கடிதங்களை விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கையளித்துள்ளனர். அவர்களின் பதவி விலகலை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே ஏற்றுக்கொண்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இடைக்கால நிர்வாகம் மற்றும் சீர்திருத்தக் குழு
தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு, 1973ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 31 மற்றும் 34ஆம் பிரிவுகளின் கீழ் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கமைய, ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிர்வாகம் தற்காலிகமாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
கிரிக்கெட் விளையாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், நிர்வாகக் கட்டமைப்பில் முறையான சீர்திருத்தங்களை முன்னெடுக்கவும் ஒன்பது பேர் கொண்ட விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள ஏனைய உறுப்பினர்கள்:
ரொஷான் மஹாநாம
குமார் சங்கக்கார
சிதத் வெத்திமுனி
துஷிர ரதல்ல
அவந்தி கொழும்புகே
பிரகாஷ் ஷாப்டர்
உபுல் குமாரப்பெரும
தினால் பிலிப்ஸ்
ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டின் எதிர்காலத்தை மறுசீரமைக்கும் நோக்கில் இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்