தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

வியாழன், 2 ஆகஸ்ட், 2018

நெதர்லாந்தின் மீள் வருகை வெற்றி ! நேபாளத்தின் கன்னி ஒருநாள் சர்வதேசப்போட்டி தோல்வி !!


நேற்று தன்னுடைய கன்னி ஒருநாள் சர்வதேச போட்டியில் நேபாள அணி  நெதர்லாந்திடம் 55 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தது. எனினும் அந்த அணி சிறப்பாக பந்துவீசியதோடு துடுப்பாட்டத்திலும் வெற்றிக்காக போராடியது.

இதேவேளை அடுத்த உலகக்கிண்ணத் தகுதிகாண் போட்டியில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தனது ஒருநாள் சர்வதேச அந்தஸ்தை கடந்த மார்ச் மாதம் பெற்றுக்கொண்ண்ட நெதர்லாந்து நான்கு ஆண்டுகளின் பின்னர் முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் விளையாடியிருந்தது.

  இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் விளையாடும் 27 ஆவது அணியாகவும் நேபாளம் பதிவானது. கடைசியாக 2014 ஆம் ஆண்டு நவம்பரில் பப்புவா நியூகினி அணியே தனது கன்னி ஒருநாள் சர்வதேசப் போட்டியில் விளையாடியமை குறிப்பிடத்தக்கது.


இரண்டு ஒருநாள் சர்வதேச போட்டிகளைக் கொண்ட தொடரில் ஆடவே நேபாள அணி நெதர்லாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் போட்டி அம்ஸ்டல்வீன் நகரில் உள்ள ஏசுயு மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற நெதர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. ஒப்பீட்டளவில் 76 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி அனுபவம் மிக்க அணியான நெதர்லாந்தின் முதல் விக்கெட் 5 ஓட்டங்களுக்கு பறிபோனது. இதனைத் தொடர்ந்து முக்கிய இடைவெளிகளில் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு நேபாள பந்துவீச்சாளர்களால் முடியுமானது.

மிதவேகம் மற்றும் சுழல்  பந்து வீசக்கூடிய சகலதுறை வீரரான அணித் தலைவர் பரஸ் கத்கா நெதர்லாந்து மத்திய வரிசையை தணறிடித்தார். அவர் முக்கிய நான்கு விக்கெட்டுகளை வீழ்த்த நெதர்லாந்து அணியால் ஓட்டங்களை அதிகரிக்க முடியவில்லை.

மத்திய பின்வரிசையில் வந்த மைக்கல் ரிப்போன் 51 ஓட்டங்களை பெற்று நேபாளத்திற்கு சவால் கொடுக்கும் ஓட்டங்களை பெற உதவினார்.

இதன் மூலம் நெதர்லாந்து அணி 47.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 189 ஓட்டங்களை பெற்றது. இதன்போது நேபாள அணி சார்பில் ஆரம்ப வேகப்பந்து வீச்சாளர் சோம்பால் காமி (Sompal Kami) 3 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எட்ட முடியுமான 190 என்ற ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய நேபாள அணி ஆரம்பத்தில் சிறப்பாக ஆடியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கியானன்ந்ரா மல்லா 61 பந்துகளுக்கு 51 ஓட்டங்களை பெற்று நேபாள அணிக்காக ஒருநாள் சர்வதேச போட்டிகளில் முதல் அரைச்சதம் பெற்றவராக வரலாறு படைத்தார்.

ஒருகட்டத்தில் 87 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து வலுவான நிலையில் இருந்த நேபாள அணியின் மத்திய வரிசையில் வந்த மூன்று வீரர்கள் அடுத்தடுத்த பூஜ்யத்திற்கு ஆட்டமிழந்தனர். பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களும் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழக்க அந்த அணி 41.5 ஓவர்களில் 134 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இதன்போது நெதர்லாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அரைச்சதம் பெற்ற ரிப்போன்  பந்துவீச்சிலும் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

இந்த ஒருநாள் தொடரில் நெதர்லாந்து 1-0 என முன்னிலை பெற்ற நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (03) இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது. 


1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியில் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அறிமுகமான நெதர்லாந்து அணி நான்கு ஆண்டுகளுக்கு பின்னரே ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கு திரும்பியது. அந்த அணி இதற்கு முன்னர் கடைசியாக 2014 ஆம் ஆண்டு ஜனவரியில் கனடாவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடி இருந்தது.

மறுபுறம் இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கிரிக்கெட் அதிக பிரபலமான விளையாட்டாக இருக்கும் நிலையில் நேபாளம் தனது முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் ஆடுவதை ஒட்டி அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகத்துடன் போட்டியை பார்வையிட்டனர்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஐ.சி.சி. உலகக் கிரிக்கெட் லீக்கின் ஐந்தாவது பிரிவில் ஆடிய நேபாளம் தற்போது ஒருநாள் அந்தஸ்து பெற்ற 16 அணிகளில் ஒன்றாக உயர்வு பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

நெதர்லாந்து – 189 (47.4) – மைக்கல் ரிப்போன் 51, பேஸ் டி லீட் 30, ஸ்டீபன் மைபேர்க் 29, பரஸ் கட்கா 4/26, சோம்பால் காமி 3/34

நேபாளம் – 134 (41.5) – கியானன்ந்ரா மல்லா 51, தீபேந்ரா சிங் அரீ 33, பீட்டர் சீலார் 3/20, மைக்கல் ரிப்போன் 3/23, பிரெட் கிளாசன் 3/30 

முடிவு – நெதர்லாந்து அணி 55 ஓட்டங்களால் வெற்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...