தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

செவ்வாய், 13 மார்ச், 2018

நேற்றைய நாயகனுக்கு இனித் தொடர் முழுதும் தடை - ககிசோ றபாடா

தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ககிஸோ றபாடாவுக்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.

                                                                  படம் : www.hindustantimes.com

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நேற்று தென்னாபிரிக்க அணி அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியில் வேகப்பந்துவீச்சாளர் றபாடாவின் மிக முக்கியமான பங்களிப்பு இருந்தது.
போட்டியில் மொத்தமாக 11 விக்கெட்டுக்களை வீழ்த்திய றபாடா, முதலாம் இன்னிங்ஸில்  night watchman ஆக வந்து 29 முக்கியமான ஓட்டங்களை எடுத்திருந்தார்.

வீச்சில் அசத்திய ற பாடா முதல் இன்னிங்ஸில் 5 விக்கட்டுகளை வீழ்த்தியதுடன், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்காற்றி, போட்டியின் நாயகனாகவும் தெரிவானார்.

எனினும் முதலாம் இன்னிங்ஸில்  அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கட்டை கைப்பற்றிய றபாடா, அவரின் அருகில் சென்று முறையற்ற ரீதியில் அவருக்கு பிரியாவிடை கொடுத்ததுடன் உடல் ரீதியாக மோதியதும் போட்டித் தீர்ப்பாளரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதைப் பற்றி நாம் இங்கே குறிப்பிட்டிருந்தோம்.

சம்பவம் குறித்து விசாரணை செய்த போட்டி மத்தியஸ்தர் ஐசிசியிடம் முறைப்பாட்டை தெரிவிக்க, றபாடாவுக்கு இரண்டு போட்டிகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை நடைபெறும் நேரம் நேற்றும் டேவிட் வோர்னரை ஆட்டமிழக்கச் செய்தபிறகு அவரையும் தகாத முறையில் வழியனுப்பி வைத்திருந்தார்.

இதன்படி அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அடுத்து நடைபெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் றபாடாவுக்கு விளையாடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது தனிப்பட்டமுறையில் றபாடாவுக்கு மட்டுமன்றி, முதல் டெஸ்ட் தோல்விக்குப் பிறகு இப்போது தான் தொடரை சமநிலைக்கு கொண்டுவந்துள்ள தென் ஆபிரிக்காவுக்கும் பெரிய இழப்பாக அமையவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...