பங்களாதேஷைப் பந்தாடி பிறந்தநாளைக் கொண்டாடிய ரஷீத் கான் !

இத்தனை நாட்களும் டீன் ஏஜ் சுழல் புயலாக உலகம் முழுவதும் எதிரணிகளை அச்சுறுத்தி வந்த ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் தன்னுடைய 20வது பிறந்தநாளை மிகச்சிறந்த சகலதுறைப் பெறுபேறுகளுடன் பங்களாதேஷ் அணியை ஆப்கானிஸ்தான் வென்றுகொள்ள முதன்மைக் காரணியாகக் கொண்டாடினார்.

ஆசியக் கிண்ணத் தொடரின் ஆறாவது மோதலாக நேற்று நடைபெற்ற பங்களாதேஷ் – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான போட்டியில், பங்களாதேஷ் அணியினை 136 ஓட்டங்களால் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அசத்தல் வெற்றி ஒன்றினை பதிவு செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ் ஆகிய இரண்டு அணிகளும் தங்களது முன்னைய போட்டிகளில் இலங்கை அணியுடன் பெரிய வெற்றிகளைப் பதிவு செய்து ஆசியக் கிண்ணத் தொடரின் அடுத்த சுற்றுக்கு தெரிவாகிய நிலையிலேயே தங்களுக்குள் பலப்பரீட்சை நடாத்தியிருந்தன.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் அஸ்கர் ஆப்கான் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.

ஹஷ்மதுல்லாஹ் ஷஹிதி தனது  3 ஆவது ஒரு நாள் அரைச் சதத்துடன் 58 ஓட்டங்களை குவித்திருந்தார்.

ஆப்கானிஸ்தான்  அணி சடுதியாக விக்கெட்டுக்களை இழக்கத் தொடங்கி ஒரு கட்டத்தில் 160 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து பின்னடைவை சந்தித்தது.

எனினும், இத் தருணத்தில் நேற்று தனது 20 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடிய ரஷீத் கான் மற்றும் குல்படின் நயீப் ஜோடி இணைந்து பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சினை துவம்சம் செய்யத் தொடங்கினர். ஆப்கானிஸ்தானின் முதல் இன்னிங்ஸில் எஞ்சியிருந்த 56 பந்துகளையும் எதிர்கொண்ட இரண்டு வீரர்களும் 95 ஓட்டங்களை முறியடிக்கப்படாத இணைப்பாட்டமாக பகிர்ந்தனர்.

இவர்களின் இணைப்பாட்ட உதவியோடு ஆப்கானிஸ்தான் அணி  50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 255 ஓட்டங்களை குவித்தது. ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்திற்காக உதவிய ரஷீத் கான் 32 பந்துகளுக்கு முகம் கொடுத்து 8 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 57 ஓட்டங்களையும், குல்படின் நயீப் 38 பந்துகளில் 42 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சு சார்பாக ஷகிப் அல் ஹஸன் 4 விக்கெட்டுக்களையும், அபு ஹைடர் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

256 என்கிற சற்று கடினமான வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணி, ஆரம்பத்தில் இருந்தே தடுமாற்றம் காட்டத் தொடங்கியது. அவ்வணியின் ஆரம்ப வீரர்களாக வந்த நஷ்முல் ஹொசைன் சன்டோ, லிடன் ஹொசைன் ஆகிய இருவரும் பத்து ஓட்டங்களை கூட தாண்டியிருக்கவில்லை.


பின்னர் வந்த துடுப்பாட்ட வீரர்களில் ஷகிப் அல் ஹஸன் தவிர ஏனைய பங்களாதேஷ் வீரர்கள் ஆப்கானிஸ்தானின் சுழலுக்கு தடுமாறத் தொடங்கினர்.  யாரும் பங்களாதேஷ் அணிக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காமல் போக அவ்வணி 42.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 119 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் படு தோல்வியடைந்தது.

ஷகிப் அல் ஹஸன் 32 ஓட்டங்களைப் பெற்று அவ்வணியின் அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்தார்.

ஆப்கானிஸ்தான் அணிக்காக ஏற்கனவே துடுப்பாட்டத்திலும் பிரகாசித்திருந்த ரஷீத் கான், குல்படின் நயீப் மற்றும் இளம் சுழல் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி தமது தரப்பின் வெற்றியினை ஊர்ஜிதம் செய்திருந்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகன் விருது ஆப்கானிஸ்தான் அணிக்காக துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் பிரகாசித்த Birthday Boy  ரஷீத் கானிற்கு வழங்கப்பட்டது.

ஆசியக் கிண்ணத்தில் இன்று முதல்  Super  Four  சுற்று ஆரம்பிக்கிறது.

 ஆப்கானிஸ்தான் அணி “சூப்பர் 4” சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியினையும், பங்களாதேஷ் அணி இந்தியாவையும் எதிர்கொள்கின்றது.
ஒரே நேரத்தில் இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

கருத்துரையிடுக

புதியது பழையவை