தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

புதன், 19 செப்டம்பர், 2018

போராட்ட குணத்தை வெளிப்படுத்திய ஹொங் கொங், தடுமாறி வென்ற இந்தியா

ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியாக நேற்று  நடைபெற்ற இந்தியா – ஹொங் கொங்  அணிகளுக்கு இடையிலான போட்டியில், யாரும் எதிர்பாராத வகையில் ஹொங் கொங் அணி காட்டிய மிக ஆக்ரோஷமான போராட்டத்தினால் இந்தியா சற்றே தடுமாறி, பின்னர்
ஹொங்கொங் அணியினை 26 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது.

ஹொங் கொங் அணியினை தோற்கடித்து ஆசியக் கிண்ணத் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்திருக்கும் இந்தியா குழு A சார்பில் பாகிஸ்தான் அணியுடன் சேர்ந்து ஆசியக் கிண்ணத் தொடரின் “சுப்பர் 4” சுற்றுக்கும் முன்னேறுகின்றது.


இதேவேளை இந்தியாவுடன் தோல்வியடைந்த ஹொங்கொங், இலங்கை அணிக்கு அடுத்ததாக ஆசியக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் இரண்டாவது அணியாக மாறியுள்ளது.


டுபாயில் இடம்பெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஹொங்கொங் அணியின் தலைவர் அன்ஷுமான் ராத் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இந்திய அணிக்காக வழங்கியிருந்தார்.
ஆசியக் கிண்ணத் தொடரில் வழமையான தலைவர் வீரர் விராட் கோலிக்கு ஓய்வு வழங்கிய இந்திய அணி இப்போட்டியில் 20 வயதேயான இடதுகை வேகப்பந்து வீச்சாளர்  கலீல் அஹ்மட்டினை அறிமுகம் செய்திருந்தது.

முதலில் துடுப்பாடிய இந்திய அணிக்கு ஷீக்கார் தவான், அம்பதி ராயுடு ஆகிய வீரர்கள் சிறந்த முறையில் செயற்பட்டு ஓட்டங்கள் குவிக்க உதவினர். இதில் தனது 14 ஆவது ஒருநாள் சதத்தினை பூர்த்தி செய்த தவான் 120 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 15 பெளண்டரிகள் அடங்கலாக 127 ஓட்டங்களை பெற்றிருந்ததோடு, நீண்ட இடைவெளி ஒன்றின் பின்னர் இந்திய ஒரு நாள் அணியில் இணைந்த அம்பத்தி ராயுடு 60 ஓட்டங்களை பெற்றுத் தந்தார்.

இவர்களின் துடுப்பாட்ட பங்களிப்போடு இந்திய அணி, நிர்ணயம் செய்யப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 285 ஓட்டங்கள் குவித்தது. ஹொங்கொங் அணியின் பந்துவீச்சு சார்பாக கின்சித் ஷா  3 விக்கெட்டுக்களையும், எஹ்சான் கான் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.


வெற்றி இலக்கான 286 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஹொங்கொங் அணிக்கு, ஆரம்ப வீரர்களாக வந்த நிசகத் கான் மற்றும் அணித்தலைவர் அன்ஷுமான் ராத் ஆகியோர் யாரும் எதிர்பாராத வகையில் மிகப் பிரமாண்டமான துவக்கத்தினை வழங்கினர்.

இரண்டு வீரர்களும் முதல் விக்கெட்டுக்காக 174 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்ததுடன், இந்த இணைப்பாட்டத்தினால், ஹொங்கொங் அணி இந்தியாவின் வெற்றி இலக்கினை நெருங்கும் ஒரு நல்ல நிலையை அடைந்தது.

எனினும் ஹொங்கொங் அணியின் முதல் விக்கெட் குல்தீப் யாதவ்வினால் கைப்பற்றப்பட அவ்வணி பின்னடைவை காட்டத் தொடங்கியது. ஹொங்கொங் அணியின் தலைவர் அன்ஷுமான் ராத் 73 ஓட்டங்களுடன் முதலில் ஆட்டமிழந்தார்.

பின்னர் ஹொங்கொங் அணிக்கு நம்பிக்கை அளித்திருந்த மற்றுமொரு வீரரான நிசகாத் கானின் விக்கெட்டும் சிறிது நேரத்தில் பறிபோனது. 112 பந்துகளை எதிர்கொண்டிருந்த நிசகாத் கான் ஒரு சிக்ஸர் மற்றும் 12 பெளண்டரிகள் அடங்கலாக 92 ஓட்டங்களை குவித்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சதம் ஒன்றினை பெறத் தவறினார்.
அவர் 90 ஓட்டங்களில் மூன்றாவது தடவையாக ஆட்டமிழந்தார்.


தொடர்ந்து ஹொங்கொங் அணி மிகவும் குறுகிய ஓட்ட இடைவெளிகளில் விக்கெட்டுக்களை பறிகொடுத்தது. ஹொங்கொங் அணியின் மத்திய வரிசை மிகவும் பலமான ஒன்றாக அமைந்திருக்காத காரணத்தினால் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து அவ்வணி 259 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

26 ஓட்டங்களால்  போட்டியில் தோல்வியடைந்தாலும், ஹொங்கொங் அணியின் ஒரு நாள் போட்டிகள் வரலாற்றில் இரண்டாவது இன்னிங்ஸ் ஒன்றில் அவர்கள் பெற்ற அதிகூடிய  ஓட்டங்களாக இந்த 259 ஓட்டங்கள் அமைந்திருந்தது.

இந்திய அணியின் பந்துவீச்சு சார்பாக அறிமுக வீரர் கலீல் அஹ்மட் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதமும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியும் தமது தரப்பின் வெற்றியினை ஊர்ஜிதம் செய்திருந்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகன் விருது இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் சதம் பெற்ற ஷீக்கார் தவானிற்கு வழங்கப்பட்டது.


ஆசியக் கிண்ணத் தொடரின் இன்றைய, மிக மிக எதிர்பார்க்கப்படும் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...