தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

சனி, 31 மார்ச், 2018

குசல் ஜனித் மறுத்தார், இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் SRH அழைப்பை ஏற்றார் - #IPL2018

ஐ.பி.எல் தொடரில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியிலிருந்து டேவிட் வோர்னர் நீக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக இலங்கை அணியின் அதிரடி வீரர் குசல் ஜனித் பெரேராவை இணைப்பது பற்றிப் பேசப்பட்டு வருவதாக கிரிக்கெட் தமிழ் செய்திகளில் சொல்லியிருந்தோம். எனினும் தற்போது சன்ரைசர்ஸ் அணியினால் இங்கிலாந்து அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான அலெக்ஸ் ஹேல்ஸ் உள்வாங்கப்பட்டுள்ளார்.
இதை சன்ரைசஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் உறுதிசெய்துள்ளதோடு, அவரை பெருமையாக வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அலெக்ஸ் ஹேல்சை ஹைதராபாத் அணி, இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

குசல் தற்போது இலங்கையில் நடைபெறும் #SLCSuper4 நான்கு நாள் போட்டிகளில் கலந்து கொண்டு டெஸ்ட் அணியில் தனது இடத்தை உறுதிப்படுத்திக்கொள்ள நோக்கம் கொண்டிருப்பதாலேயே இந்த வாய்ப்பை நிராகரித்ததாகக் கூறப்படுகிறது.

பந்தின் தன்மையை வேண்டுமென்றே மாற்ற முயன்ற குற்றத்துக்காக, டேவிட் வோர்னருக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தலைவர் பதவியில் இருந்து வோர்னர் விலகிக்கொள்ள கேன் வில்லியம்சன் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார்.

அலெக்ஸ் ஹேல்ஸ் ஏற்கனவே இங்கிலாந்தில் இரவு விடுதியொன்றில், பென் ஸ்டோக்சுடன் இணைந்து ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டிலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...