தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

ஞாயிறு, 11 மார்ச், 2018

சந்திமலுக்கு போட்டித் தடை, மீண்டும் தலைவராகிறார் திசர பெரேரா !! - Nidahas Trophy 2018

நடைபெற்றுவரும் சுதந்திரக் கிண்ணத் தொடரில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட குற்றத்தினால் இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமலுக்கு இரண்டு போட்டிகளில் விளையாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.



நேற்று பங்களாதேஷுடன் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி பந்துவீச மிக நீண்ட நேரம் எடுத்துக்கொண்டதனாலேயே இந்தத் தண்டனை போட்டித் தீர்ப்பாளர் க்றிஸ் ப்ரோட்டினால் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கை அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களது போட்டி ஊதியத்தில் 60 வீதம் தண்டமாக அறவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து இவ்விரு போட்டிகளிலும் திசர பெரேரா இலங்கை அணிக்குத் தலைமை தங்குவார் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இந்தத் தொடருக்கு இலங்கை அணியின் உப தலைவராக நியமிக்கப்பட்ட சுரங்க லக்மால் முதல் இரு போட்டிகளிலும் விளையாடாத நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

வழமையான இலங்கை அணியின் தலைவரான அன்ஜெலோ மத்தியூஸ் உபாதையிலிருந்து முற்றிலும் குணமடையாத நிலையிலேயே சந்திமல்  தலைவராகப் பொறுப்பெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
சில வருடங்களாகவே அடிக்கடி தலைமைத்துவ மாற்றங்கள், தடுமாற்றங்கள் இலங்கை அணியைப் பாடாய்ப்படுத்தி வருகின்றது.

இதேவேளை பங்களாதேஷ் அணியின் தலைவர் மஹ்முதுல்லாவுக்கும் 20 வீதத் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.
நேற்றைய போட்டியில் பங்களாதேஷும் பந்துவீச சற்று அதிக நேரம் எடுத்துக்கொண்டதனாலேயே இந்தத் தண்டனை. பங்களாதேஷின் ஏனைய வீரர்களுக்கு ஊதியப் பணத்தில் 10 வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...