இறுதிப் பந்து வரை நீடித்த இழுபறியில் வென்று ஆசியக் கிண்ணம் ஜெயித்த இந்தியா !


ஆறு நாடுகள் விளையாடிய ஆசியக் கிண்ணத்தின் வெற்றி இறுதிப் பந்திலே தான் தீர்மானிக்கப்படும் என்று யார் நினைத்திருப்பார்?
நேற்று இறுதிப் போட்டியின் இறுதிப்பந்திலே கேதார் ஜாதவ்வின் மூலமாகக் கிடைத்த ஓட்டம் இந்தியாவுக்கு அவர்களது 7வது ஆசியக் கிண்ணத்தை வென்று கொடுத்தது.

டுபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று இடம்பெற்று முடிந்திருக்கும் ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி பங்களாதேஷை 3 விக்கெட்டுக்களால் வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

14ஆவது முறையாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்று வந்த ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில், பங்களாதேஷ் அணி வெற்றி இலக்காக நிர்ணயம் செய்த 223 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய துடுப்பாடிய இந்திய அணி 7 விக்கெட்டுக்களை இழந்து ஆசியக் கிண்ணத் தொடரில் 7ஆவது தடவையாக சம்பியன் நாமம் சூடியது.

முன்னதாக இறுதி சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியளித்த பங்களாதேஷ் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இறுதிப்பந்து வரை போராடியிருந்தது. எனினும் பெற்ற அற்புதமான ஆரம்ப இணைப்பாட்டத்தைப் பயன்படுத்தி பெரிய ஓட்ட எண்ணிக்கையைப் பெறமுடியாது போனது பங்களாதேஷ் அணிக்குப் பாதகமாக அமைந்தது.

இந்திய அணிக்கு தமது பந்துவீச்சு மூலம் கடும் சவால் தந்த பங்களாதேஷ் அணி, 2016ஆம் ஆண்டிற்கு பின்னர் மீண்டும் ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் தொடர்ச்சியாக இரண்டாவது தடவை தோற்று கவலையுடன் நாடு திரும்புகிறது.

நேற்றைய இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை பங்களாதேஷ் அணிக்கு வழங்கியிருந்தார்.

பங்களாதேஷ் அணி ஆச்சரியமளிக்கும் விதமாக, தன்னுடைய ஆரம்ப ஜோடியை மாற்றியமைத்து, வழக்கமாக பின்வரிசையில் துடுப்பாடும் மெஹிதி ஹஸன் மிராஸ் மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோருடன் தமது துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்தது.
இருவரும் பங்களாதேஷ் அணியின் முதல் விக்கெட்டுக்காக 120 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்ததுடன், இந்திய அணிக்குப் பெரும் அழுத்தத்தை வழங்கியது.
லிட்டன் தாஸ் தனது கன்னிச் சதத்தைப் பூர்த்தி செய்தாலும், பங்களாதேஷ் அணியின் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் பிரகாசிக்காத நிலையில் அவ்வணிக்கு செளம்ய சர்க்கர் மட்டுமே ஆறுதலாக இருந்தார்.


முடிவில், 48.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த பங்களாதேஷ் அணி 222 ஓட்டங்களை குவித்தது. பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தில் லிட்டன் தாஸ் 12 நான்கு ஓட்டங்கள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 117 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு 121 ஓட்டங்கள் பெற்றிருக்க, செளம்ய சர்க்கர் 33 ஓட்டங்களை சேர்த்திருந்தார்.

இந்திய அணியின் சார்பாக, குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுக்களையும், கேதர் ஜாதவ் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 223 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணிக்கு விக்கெட்டுக்கள் சரிந்துகொண்டே இருந்தாலும், அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா 55 பந்துகளை எதிர்கொண்டு  3 சிக்ஸர்கள் மற்றும் 3 பெளண்டரிகள் அடங்கலாக 48 ஓட்டங்களை குவித்திருந்தார். இதன் பின்னர், தினேஷ் கார்த்திக் மற்றும் மஹேந்திர சிங் டோனி ஆகியோர் இந்திய அணிக்கு பொறுமையான இணைப்பாட்டம் ஒன்றை வழங்கி வெற்றி இலக்கை நோக்கி கொண்டு சென்றனர். 54 ஓட்டங்கள் வரையில் நீடித்த இந்த இணைப்பாட்டம் தினேஷ் கார்த்திக்கின் விக்கெட்டினை அடுத்து முடிவுக்கு வந்தது.
கார்த்திக் 37 ஓட்டங்களையும் தோனி 36 ஓட்டங்களையும் பெற்றனர்.

தோனியின் விக்கெட்டை அடுத்து பந்துவீச்சில் திறமை காண்பிக்கத் தொடங்கிய பங்களாதேஷ் அணியினர் போட்டியின் வெற்றி வாய்ப்பு சாதக நிலைமையை தமக்கு சொந்தமாக்கினர்.

தொடர்ந்து வெற்றிக்கு இறுதி ஓவருக்கு ஆறு ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் இந்திய அணிக்காக, அந்த வெற்றி ஓட்டங்களை கேதர் ஜாதவ் – குல்தீப் யாதவ் ஜோடி பெற்றுத் தந்தது.
இறுதி பந்தில் ஒரு ஓட்டம் தேவைப்பட்ட நிலையில் ஜாதவ் அந்த ஓட்டத்தை எடுத்து ரசிகர்களைக் கொண்டாட வைத்தார்.


ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக, பங்களாதேஷ் அணியின் லிட்டன் தாஸ் தெரிவு செய்யப்பட்டதோடு  தொடர் நாயகன் விருது, இந்திய அணியின் ஷீக்கர் தவானிற்கு வழங்கப்பட்டிருந்தது.

கருத்துரையிடுக

புதியது பழையவை