தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

வியாழன், 22 நவம்பர், 2018

நான்கு ஓட்டங்களால் அவுஸ்திரேலியா விறுவிறு வெற்றி !! கார்த்திக்கின் அதிரடி வீணானது

நேற்று அவுஸ்திரேலிய – இந்திய அணிகளுக்கு இடையில் பிரிஸ்பேனில் நடைபெற்ற முதலாவது T20 போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் இறுதிநேர அதிரடித் துடுப்பாட்டத்தையும் மீறி, அவுஸ்திரேலிய அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் விறுவிறுப்பான வெற்றி பெற்றுள்ளது.


டக்வர்த் லூவிஸ் முறைப்படி அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்த 174 (17) என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 17 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களை பெற்றதுடன், நான்கு ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி, அவுஸ்திரேலிய அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. இதன்படி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி மந்தமான ஓட்ட வேகத்துடன் ஓட்டங்களை பெற்றது.

ஆரம்ப வீரர் ஷோர்ட்டின் ஆட்டமிழப்பின் பின்னர் அணித் தலைவர் ஆரோன் பின்ச் உடன் இணைந்த கிரிஸ் லின், கலீல் அஹமட்டின் ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசி அணியின் ஓட்ட வேகத்தை அதிகரித்தார். பின்னர் குல்தீப் யாதவ் வீசிய அடுத்த ஓவரில் ஆரோன் பின்ச் 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அதிரடியாக 37 (20) ஓட்டங்களை பெற்ற கிரிஸ் லின் குல்தீப்பின் பந்தில் ஆட்டமிழந்தார்.


தொடர்ந்து ஜோடி சேர்ந்த மார்க் ஸ்டொய்னிஸ் மற்றும் கிளேன் மெக்ஸ்வேல் ஆகியோர் அதிரடியாக ஆடி இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை மிரட்டினர். இருவரும் இணைந்து 78 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற, அவுஸ்திரேலிய அணி 16.1 ஓவர்களில் 153 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இதன்போது மழைக் குறுக்கிட்டதன் காரணமாக அணிக்கு தலா 17 ஓவர்களாக போட்டி மட்டுப்படுத்தப்பட, அவுஸ்திரேலிய அணி 17 ஓவர்களில் 158 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. எவ்வாறாயினும் டக்வர்த் லூவிஸ் முறைப்படி இந்திய அணிக்கு 174 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அவுஸ்திரேலிய அணி சார்பில் கிளேன் மெக்ஸ்வேல் 24 பந்துகளுக்கு 4 சிக்ஸர்கள் அடங்கலாக 46 ஓட்டங்களை பெற்றதுடன், மார்க் ஸ்டொய்னிஸ் ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களை பெற்றார்.

பின்னர், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சிக்கர் தவான் அபாரமாக துடுப்பெடுத்தாட, ரோஹித் சர்மா (7), கே.எல்.ராஹுல் (13) மற்றும் அணித் தலைவர் விராட் கோஹ்லி (4) ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து தனியொருவராக இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்திய சிக்கர் தவான் அரைச்சதம் கடந்து 76 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இந்திய அணி வெற்றிபெறுவதற்கு 30 பந்துகளில் 65 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், துடுப்பெடுத்தாட களமிறங்கிய தினேஷ் கார்த்திக் வேகமாக ஓட்டங்களை குவிக்கத் தொடங்கினார். ரிஷாப் பாண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் குறைந்த பந்துகளுக்கு 51 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற, பாண்ட் 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.


போட்டியின் இறுதி ஓவரை மார்க் ஸ்டோய்னிஸ் வீச, 13 ஓட்டங்கள் என்ற நிலையில் இந்திய அணி  விளையாடியது. எனினும் முறையே மூன்றாம், நான்காம் பந்துகளில் குர்னால் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் ஆட்டமிழக்க இந்திய அணியின் வெற்றி கைநழுவியது. இறுதிப் பந்துக்கு குல்தீப் யாதவ் பௌண்டரி விளாசிய போதும், இந்திய அணி 4 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

இந்திய அணி சார்பில் இறுதியில் களமிறங்கி, அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை மிரட்டிய தினேஷ் கார்த்திக் 13 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 30 ஓட்டங்களை விளாசியிருந்தார். அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் அடம் சம்பா மற்றும் மார்க் ஸ்டொய்னிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக சம்பா தெரிவானார்.

இதேவேளை, அவுஸ்திரேலியா – இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20I போட்டி எதிர்வரும் 23ம் திகதி மெல்போர்னில் நடைபெறவுள்ளதுடன், மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில் அவுஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை வகிக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...