தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

வியாழன், 5 ஜூலை, 2018

தடை தாண்டி தலைவராக விளையாடுவாரா சந்திமால்? இலங்கை அணி அறிவிப்பு !


எதிர்வரும் 12 ஆம் திகதி  காலியில் ஆரம்பமாகவிருக்கும் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள 16 பேர் அடங்கிய இலங்கை குழாத்தினை தேசிய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்கள் இன்று வெளியிட்டிருக்கின்றனர்.


இந்த டெஸ்ட் தொடரிலும் இலங்கை அணியினை வழிநடாத்தும் பொறுப்பு தினேஷ் சந்திமாலுக்கே கொடுக்கப்பட்டிருக்கின்றது. எனினும், சென். லூசியாவில் மேற்கிந்திய தீவுகள் – இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தினை இரண்டு மணிநேரம் தாமதித்த குற்றச்சாட்டு சந்திமால் மீது உள்ள நிலையிலேயே அவர் அணித்தலைவராக நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

சந்திமாலின் இந்த தவறு கிரிக்கெட்டின் மகத்துவத்தினைப் பேணத்தவறிய மூன்றாம் நிலை (Level 3) குற்றம் என்பதால் அவர் இந்த டெஸ்ட் தொடரில் விளையாடும் வாய்ப்பினை முழுமையாக இழக்கும் நிலை காணப்படுகின்றது என்று கிரிக்கெட் தமிழில் இதற்கு முந்தைய செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

சந்திமாலோடு சேர்த்து இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க, இலங்கை அணியின் பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்க ஆகியோரும் போட்டியினை தாமதித்த மூன்றாம் நிலை குற்றத்தில் தாம் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட நிலையில் இவர்களுக்கு ஜூலை 10 ஆம் திகதி (முதலாம் டெஸ்ட் போட்டிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக) ஐ.சி.சி. இன் நீதியாணையாளர் தலைமையில் இடம்பெறும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நான்கு தொடக்கம் எட்டு வரையிலான போட்டி இடைநிறுத்தல் புள்ளிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திமால் போட்டி இடைநிறுத்தல் புள்ளிகளை பெறுவராயின் அவருக்கு தென்னாபிரிக்க அணியுடனான இந்த டெஸ்ட் தொடரிலும் அதனை அடுத்துவரும் இன்னும் சில போட்டிகளிலும் விளையாட முடியாது போகலாம்.

எனவே, சந்திமால் போட்டித் தடையினைப் பெறுகின்ற நிலையில் இலங்கை அணியினை தென்னாபிரிக்காவுடனான இந்த டெஸ்ட் தொடரில் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளரான, உப தலைவர் சுரங்க லக்மால் வழிநடாத்துவார். லக்மாலின் தலைமையிலான இலங்கை அணி பார்படோஸ் டெஸ்ட் வெற்றியுடன் மேற்கிந்திய தீவுகளுடனான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை 1-1 என சமநிலைப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த டெஸ்ட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட்  தொடரில் காயம் காரணமாக விளையாடாது போயிருந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான டிமுத் கருணாரத்ன மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டிருக்கின்றார். டிமுத் கருணாரத்ன இலங்கை அணியில் தொடக்க வீரரான மஹேல உடவத்தவின் இடத்தினை எடுத்துக் கொள்கின்றார். மஹேல உடவத்த அண்மைய மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடரில் நான்கு இன்னிங்ஸ்களில் துடுப்பாடி வெறும் 23 ஓட்டங்களினை மாத்திரமே குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தனது இரண்டாவது குழந்தையின் பிறப்பின் காரணமாக மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட்  தொடரின் இறுதி இரண்டு போட்டிகளிலும் விளையாடாது நாடு திரும்பியிருந்த இலங்கையின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட அணியின் தலைவர் அஞ்செலோ மெதிவ்சும் தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடருக்கு அழைக்கப்பட்டிருக்கின்றார்.


இன்னும், இத்தொடருக்கான இலங்கை அணிக்கு சைனமன் சுழல் (இடதுகை மணிக்கட்டு) வீரரான லக்ஷான் சந்தகனுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றது. சந்தகன் மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடரின் போது ஒழுக்க விதிகளை மீறிய குற்றச்சாட்டில் நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்ட சுழல் வீரரான ஜெப்ரி வன்டர்செயினை அணியில் பிரதியீடு செய்திருக்கின்றார்.

அதேநேரம் குசல் பெரேரா, ரங்கன ஹேரத் ஆகியோரும் இந்த டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியில் இணைக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் உடற்தகுதியினை நிரூபிக்க வேண்டிய கட்டாய நிலையில் காணப்படுகின்றனர். குசல் ஜனித் பெரேரா மேற்கிந்திய தீவுகளுடன் பார்படோஸில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது விளம்பர பலகையில் மோதி உபாதைக்கு ஆளாகியிருந்துடன், ரங்கன ஹேரத் மேற்கிந்தியத் தீவுகளுடனான டெஸ்ட் தொடரில் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த போது காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாளை மறுதினம் தென் ஆபிரிக்காவுக்கு எதிராகக் கொழும்பில் ஆரம்பமாகவுள்ள பயிற்சிப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் சபை அணிக்குத் தலைவராக மத்தியூஸ் நியமிக்கப்பட்டுள்ள அதேநேரம், மேற்கிந்தியத் தீவுகளில் சோபிக்காத துடுப்பாட்ட வீரர்கள் தனஞ்சய டீ சில்வா, ரொஷேன் சில்வா மற்றும் தனுஷ்க குணத்திலக்க ஆகியோரும் பெயரிடப்பட்டுள்ளார்கள்.

இலங்கை குழாம்

தினேஷ் சந்திமால் (அணித்தலைவர்), சுரங்க லக்மால் (உப அணித்தலைவர்), அஞ்செலோ மத்தியூஸ், டிமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், தனுஷ்க குணத்திலக்க, தனஞ்சய டி சில்வா, ரொஷேன் சில்வா, நிரோஷன் திக்வெல்ல, குசல் ஜனித் பெரேரா (உடற்தகுதி சரியாகும் பட்சத்தில்), ரங்கன ஹேரத் (உடற்தகுதி சரியாகும் பட்சத்தில்), தில்ருவான் பெரேரா, அகில தனன்ஞய, லக்ஷான் சந்தகன், லஹிரு குமார, கசுன் ராஜித

மேலதிக வீரர்கள்

அசித்த பெர்னாந்து, தசுன் சானக்க, மலிந்த புஷ்பகுமார, ஷெஹான் ஜயசூரிய

- அசீம் ஷெரிப்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...