தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

திங்கள், 30 ஏப்ரல், 2018

அனுபவி ராஜா அனுபவி !! கிரிக்கெட்டை மறந்து கேரளாவில் கும்மாளமிடும் கிறிஸ் கெயில் !!

யூனிவெர்ஸ் பொஸ் என்று தனக்குத் தானே புகழ் மகுடம் சூட்டிக்கொண்ட மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி கலக்கல் துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெயில் வாழ்க்கையை அனுபவிக்கவென்றே பிறந்தவர். எப்போதுமே ஜாலியாக இருப்பதில் ஆர்வமுடையவர்.

இப்போது கிரிக்கெட் விளையாட்டுக்குச் சிறிய இடைவெளி கொடுத்துள்ள பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி வீரர் கிறிஸ் கெயில், கேரளாவின் இயற்கை அழகைக் குடும்பத்துடன் ரசித்து வருகிறார்.

ஐபிஎல் 2008 இல் தொடங்கப்பட்டதில் இருந்து விளையாடிவரும் மேற்கிந்தியத்தீவுகள் வீரர் கிறிஸ் கெயிலை இந்த ஆண்டு ஏலத்தின் முதல்நாளில் எந்த அணியும் வாங்கவில்லை. ஆனால், 2-ம் நாள் ஏலத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி வாங்கியது.


முதல் இரு போட்டிகளிலும் களமிறங்காத கெயில், அடுத்தடுத்த போட்டிகளில் களமிறங்கி அரை அரைசதம், சதம் என விளாசி அணியின் வெற்றிகளுக்கு முக்கியக்காரணமாக அமைந்தார். கிங்ஸ் லெவன் அணியும் தற்போது புள்ளிப்பட்டியலில் முதல் 3 இடங்களுக்குள் வந்துள்ளது.

மேற்கிந்தியத்தீவுகள் வீரர் கெயில், இயல்பாகவே உல்லாசம், கேளிக்கை ஆகியவற்றில் அதிகமான ஈடுபாடு உடையவர். இந்தச்சூழலில் கோடைக்காலத்தின் வெப்பத்தைத் தணிக்கவும், உற்சாகமாக பொழுதைப்போக்கவும் கேரள மாநிலத்துக்கு கெயில் குடும்பத்துடன் வந்துள்ளார்.

கெயில் அவரின் மனைவி, குழந்தைகள், தாய், அவரின் மாமியார் என பெரிய கூட்டத்துடன் கேரளாவில் தங்கி கலக்கி வருகின்றனர்.

கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருக்கும் கெயிலும் அவரின் குடும்பத்தினரும் படகு வீடுகளில் சவாரி செய்வதும், குளிப்பதும், மீன்பிடிப்பதும், ஆயுர்வேத மசாஜ் என விடுமுறை நாட்களை அனுபவித்து வருகின்றனர்.

இது குறித்து நட்சத்திர ஹோட்டலிலின் முக்கிய நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் குடும்பத்துடன் எங்கள் ஹோட்டலுக்கு வந்துள்ளார். அவரின் மனைவி, குழந்தைகள், தாய், மாமியார் என அதிகமானோர் விருந்தினர்களாக வந்துள்ளனர்.

இன்னும் சில நாட்கள் இங்குத் தங்கி இருப்பார்கள். கேரளாவின் பாரம்பரிய ஆயுர்வேத மசாஜ் செய்கிறார்கள், படகு வீடுகளில் சவாரி செய்கிறார்கள், மீன்பிடித்து மகிழ்கிறார்கள், கேரளாவின் பாரம்பரிய உணவுகள், மீன் உணவுகள் என மிகுந்த மகிழ்ச்சியாக பொழுதைப் போக்குகிறார்கள். மாலை நேரங்களில் முக்கிய இடங்களுக்குச் சென்று பார்வையிட்டு மகிழ்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

வரும் மே3-ம் தேதி இந்தூரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மோதுகிறது. அந்தப் போட்டிக்கு முன்பாக கெயில் அணியில் சென்று இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை G.பிரசாத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...