தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

திங்கள், 3 செப்டம்பர், 2018

மீண்டும் வந்த மொயின் அலி இந்தியாவை சுழற்றி எடுத்தார் - இங்கிலாந்துக்கு தொடர் வெற்றி !

நான்கு நாட்களுக்குள்ளேயே நான்காவது டெஸ்ட் போட்டியை முடிவுக்கு நேற்றுக் கொண்டுவந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரையும் தன்வசப்படுத்தியுள்ளது. முதற்தடவையாக இந்தத் தொடரில் அணியில் சேர்க்கப்பட்ட மொயின் அலியின் சுழல்பந்துவீச்சும் அவரும் சாம் கர்ரனும் காட்டிய சகலதுறைத் திறமைகளும் சேர்ந்து இந்தியாவை உருட்டி எடுத்து 60 ஓட்டத் தோல்வியை வழங்கியது.

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணியும் மூன்றாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்று  தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற அடிப்படையில் இந்தப் போட்டி ஆரம்பித்தது
இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி கடந்த 30 ஆம் திகதி இங்கிலாந்தின் சௌதம்டன் (Southampton) நகரில் ஆரம்பித்து,  இங்கிலாந்து  அணி 60 ஓட்டங்களால் வெற்றி பெற்று ஒரு போட்டி எஞ்சியிருக்கும் நிலையில் தொடரை 3-1 என கைப்பற்றியிருக்கிறது.

தொடரை கைப்பற்றும் நோக்கில் இங்கிலாந்து அணியும் தொடரை சமன் செய்யும் எதிர்பார்ப்பில் இந்திய அணியும் இந்த டெஸ்ட் போட்டியில் களமிறங்கிஇருந்தன. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. மேலும் இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரர் மொயின் அலி இணைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 86 ஓட்டங்களுக்கு முதல் ஆறு விக்கெட்டுகளையும் இழந்து இக்கட்டான நிலையில் இருந்த போது மீள் வரவில் சாதித்துக்காட்டத் துடித்த மொயின் அலி மற்றும் கடந்த போட்டியில் அணியில் சேர்க்கப்படாதிருந்த சாம் கரன் ஆகியோரின் இணைப்பாட்டம் அவ்வணிக்கு கைகொடுத்தது. இருவரும் இணைந்து ஏழாவது விக்கெட்டுக்காக 81 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 246 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.


துடுப்பாட்டத்தில்  சாம் கரன் 78 ஓட்டங்களை பெற்றிருந்தார். இது அவர் டெஸ்ட் போட்டிகளில் பெற்றுக்கொண்ட அதிக பட்ச ஓட்ட எண்ணிக்கையாக பதிவாகியது. மேலும் மொயின் அலி 40 ஓட்டங்களையும் பெற்றிருந்தார்.

பந்து வீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா மூன்று விக்கெட்டுக்களையும் இஷாந்த் ஷர்மா, அஷ்வின் மற்றும் மொஹமட் சமி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.
இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட்டின் விக்கெட்டை கைப்பற்றிய இஷாந்த் ஷர்மா டெஸ்ட் போட்டிகளில் தனது 250 ஆவது விக்கெட்டை பதிவு செய்தார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியாவின் மூன்றாவது வேகப் பந்துவீச்சாளராக மாறிக்கொண்டார்.


இந்திய அணி சார்பாக அணித் தலைவர் விராட் கோலி 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க புஜாரா கடைசிவரை ஆட்டமிழக்காமல் 132 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். ஒரு கட்டத்தில் இங்கிலாந்தை விடக் குறைவாகவே ஓட்டங்களைப் பெறும் எனக் கருதப்பட்ட இந்தியாவை காப்பாற்றியவர் புஜாரா. இறுதியில் இந்திய அணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 273 ஓட்டங்களை பெற்று இங்கிலாந்து அணியை விட 27 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்தது.

இங்கிலாந்து அணி சார்பாக பந்து வீச்சில் மொயின் அலி 5 விக்கெட்டுகளையும் ஸ்டுவர்ட் புரோட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்க்சில் 271 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணிக்கு 245 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இங்கிலாந்து அணி சார்பாக இரண்டாவது இன்னிங்ஸில் ஜோஸ் பட்லர் 69 ஓட்டங்களையும் ஜோ ரூட் மற்றும் சாம் கரன் ஆகியோர் முறையே 48 மற்றும் 46 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் மொஹமட் சமி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


245 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடக்  களமிறங்கிய இந்திய அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளும் 22 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது.

ஒப்பீட்டளவில் இலகுவாகக் கருதப்பட்ட இலக்கு எனினும்  நான்காவது இன்னிங்ஸ் என்பதால் இங்கிலாந்து அணிக்கும் வாய்ப்பு இருந்தது.

எனினும் அணித்தலைவர் கோலி மற்றும் ரஹானே ஆகியோரின் இணைப்பாட்டம் இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்தது. இருவரும் இணைந்து நான்காவது விக்கெட்டுக்காக 101 ஓட்டங்கள் பெற்றிருந்த போது கோலி 58 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

கோலியின்  ஆட்டமிழப்பை வாய்ப்பாக வைத்து இங்கிலாந்து விக்கெட்டுக்களை உடைக்க ஆரம்பித்தது.

தொடர்ந்து ஏனைய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இறுதியில் இந்திய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 184 ஓட்டங்களை மட்டுமே பெற்று 60 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.
ரஹானேயும் அரைச்சதம் பெற்றிருந்தார்.

இங்கிலாந்து சார்பாக பந்துவீச்சில் மொயின் அலி நான்கு விக்கெட்டுகளையும் அன்டர்சன் மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தி இங்கிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

துடுப்பாட்டத்தில் மொத்தமாக 49 ஓட்டங்களையும் பந்துவீச்சில் 9 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் மொயின் அலி போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

இதே மைதானத்தில் மொயின் அலி நான்கு ஆண்டுகளுக்கும் முன்பும் இந்தியாவுக்கு எதிராக 8 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.
அலியின் ஆறாவது போட்டி சிறப்பாட்டக்காரர் விருது இதுவாகும்.

இரு அணிகளுக்குமிடையிலான ஐந்தாவதும் இறுதியுமன டெஸ்ட் போட்டி எதிர்வரும் 7 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...