Latest Updates

6/recent/ticker-posts

வரலாறு படைத்த ப்ரோட்டியாஸ்(தென் ஆபிரிக்கா) - Proteas ! 27 வருட கனவு பலித்தது – தென் ஆப்பிரிக்காவில் பெருவிழா!

 வரலாறு படைத்த ப்ரோட்டியாஸ் - Proteas ! 27 வருட கனவு பலித்தது – தென் ஆப்பிரிக்காவில் பெருவிழா!


ஜோகன்னஸ்பர்க்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு ஜோகன்னஸ்பர்க் சர்வதேச விமான நிலையத்தில் இன்று (புதன்கிழமை) மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நின்று, தங்கள் ஹீரோக்களை ஆர்ப்பரித்து வரவேற்றனர். 



27 வருட கால ஐசிசி கோப்பைக்கான ஏக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் பரம வைரிகளான அவுஸ்திரேலியாவை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தெ.ஆ அணி இந்த மகத்தான வெற்றியைப் பெற்றது.

வரவேற்பு விழாவில் கேப்டன் & பயிற்சியாளர்:


வெற்றி பெற்ற தெ.ஆ அணியின் தலைவர் டெம்பா பவுமா மற்றும் பயிற்சியாளர் ஷுக்ரி கொன்ராட் ஆகியோர், சாம்பியன் பட்டத்திற்குரிய 'மேஸ்' (Mace) - செங்கோலை ஏந்தியவாறு, ஆர்ப்பரித்த ரசிகர்களை முதலில் வரவேற்றனர். ஒரு வெற்றியின் கம்பீரம் அவர்களது முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

ஒவ்வொரு வீரரும் கையில் பூங்கொத்துகளை ஏந்தியவாறு, சில ரசிகர்களுடன் கைகுலுக்கியும், சிலரை அணைத்தும், கையெழுத்திட்டும் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். ரசிகர்கள் ஆரவாரம் செய்து, தங்கள் ஆதர்ச வீரர்களை ஒரு கணம் கூட கண்ணை இமைக்க விடாமல் பார்த்துக்கொண்டனர்.



வெற்றிக்கு வித்திட்ட வீரர்கள்:

இந்த வரலாற்று வெற்றிக்கு வித்திட்டவர்களில் முக்கியமாக, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஐடன் மார்க்ரம் குறிப்பிடப்பட வேண்டும். முதல் இன்னிங்ஸில் ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்த போதிலும், இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 136 ஓட்டங்கள் குவித்து, லண்டனில் ஒருநாள் அரைவாசி ஆட்டம் மீதமிருந்த நிலையில் வெற்றிக்கு வழிவகுத்தார். அவரது இந்த மீள்வருகை, அணியின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது.



வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா, இறுதிப் போட்டியில் ஒன்பது விக்கெட்டுகளைக் கைப்பற்றி, தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணியாக அமைந்தார். 1998 ஆம் ஆண்டு ஐசிசி நாக்அவுட் டிராபியை (தற்போது சாம்பியன்ஸ் டிராபி) வென்ற பிறகு, தென் ஆப்பிரிக்கா ஒரு பெரிய கோப்பையை வென்றது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்த நகர்வுகள் & புதிய நட்சத்திரங்கள்:

வெற்றி பெற்ற அணியும் பயிற்சியாளர்களும் இன்று பிற்பகலில் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா தலைமையகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்த உள்ளனர்.

அடுத்து, தென் ஆப்பிரிக்க அணி எதிர்வரும் ஜூன் 28 ஆம் திகதி புலாவுவேயோவில் வடக்கு அண்டை நாடான ஜிம்பாப்வேக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தப் போட்டிகளில் டெம்பா பவுமா தொடர்ந்து அணிக்குத் தலைமை தாங்குவார். எனினும், ஐடன் மார்க்ரம் மற்றும் ககிசோ ரபாடா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட உள்ளது.

இந்தப் புதிய தொடரில், டைட்டன்ஸ் அணியைச் சேர்ந்த லுவான்-ட்ரே பிரெட்டோரியஸ் (Lhuan-dre Pretorius) மற்றும் லெசேகோ செனோக்வானே (Lesego Senokwane) உட்பட ஐந்து புதுமுக வீரர்கள் அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளனர். 19 வயதான பிரெட்டோரியஸ், அண்மையில் நடைபெற்ற உள்ளூர் நான்கு நாள் போட்டியில் ஐந்து ஆட்டங்களில் மூன்று சதங்கள் அடித்து, சராசரியாக 72.66 ஓட்டங்களைப் பெற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். செனோக்வானேவும் அதே போட்டியில் துடுப்பாட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டு, இரண்டு சதங்கள் உட்பட 559 ஓட்டங்கள் குவித்துள்ளார். இவ்விரு வீரர்களும் சமீபத்தில் மேற்கிந்தியத் தீவுகள் 'ஏ' அணிக்கு எதிரான தென் ஆப்பிரிக்க 'ஏ' அணியில் அறிமுகமானதைத் தொடர்ந்து தேசிய அணிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

டெஸ்ட் தொடருக்குப் பிறகு, தென் ஆப்பிரிக்கா ஜிம்பாப்வே மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் ஹராரேயில் ஏழு போட்டிகள் கொண்ட இருபதுக்கு20 தொடரிலும் விளையாடவுள்ளது.

டெஸ்ட் குழாம்: டெம்பா பவுமா (தலைவர்), டேவிட் பெடிங்ஹாம், மெத்யூ பிரீட்ஸ்கே, டெவால்ட் பிரெவிஸ், கோர்பின் போஷ், டோனி டி சோர்சி, சுபாயர் ஹம்சா, கேசவ் மஹாராஜ், க்வெனா மாபாகா, வியானா முல்டர், லுங்கி இங்கிடி, லுவான்-ட்ரே பிரெட்டோரியஸ், லெசேகோ செனோக்வானே, பிரேனலன் சுப்ராயன், கைல் வெரெய்ன், கோடி யூசுப்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்