தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

வியாழன், 30 ஆகஸ்ட், 2018

மாற்றங்களுடன் இங்கிலாந்து, முதற் தடவையாக மாற்றமில்லாத கோலி தலைமை தாங்கும் இந்திய அணி ??

இந்தியாவிற்கு எதிரான இன்றைய நான்காவது டெஸ்ட் போட்டியில் சில மாற்றங்களை இங்கிலாந்து கிரிக்கெட் அணி கொண்டுவந்துள்ளது.

காயம் காரணமாக இப்போட்டியில் விலகிய கிறிஸ் வோக்ஸ்க்கு பதிலாக சாம் குரன் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார், அத்துடன் கடந்த இரு டெஸ்ட் போட்டிகளில் பெரிதாக சோபிக்காத துடுப்பாட்ட வீரர் ஒலி போப்புக்குப் பதிலாக மீண்டும் சகலதுறை வீரர் மொயின் அலி உள்வாங்கப்பட்டுள்ளார்.

இதேவேளை கடந்த டெஸ்ட் போட்டியில் உபாதைக்குள்ளாகி இடைநடுவே விலகிக்கொண்ட விக்கெட் காப்பாளர் ஜொனி பெயார்ஸ்டோ மீண்டும் அணிக்குள் தனியே துடுப்பாட்ட வீரராக விளையாடவுள்ளார். இதன்மூலம் கடந்த போட்டியில் தனது கன்னிச் சதத்தைப் பெற்றுக்கொண்ட ஜோஸ் பட்லர் ஆறாம் இலக்கத் துடுப்பாட்ட வீரராக விளையாடவுள்ளார்.

இந்திய அணி கடந்த போட்டியில் அபார வெற்றியைப் பெற்ற அதே அணியையே இன்றைய தினம் ஈடுபடுத்தும் என நம்பப்படுகிறது.
இடுப்பு உபாதைக்குள்ளாகியிருந்த அஷ்வினும் பூரண குணமடைந்திருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே அணி இன்று விளையாடினால் விராட் கோலி தலைமை தாங்கியுள்ள 38 டெஸ்ட் போட்டிகளுக்குப் பின் முதல் தடவையாக மாற்றமில்லாத பதினொருவரை அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்திய சம்பவமாக இது பதிவாகும்.

எனினும் ஆடுகளத் தன்மையை இன்று பரிசீலித்து சிலவேளைகளில் வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் ஷமிக்கு பதிலாக சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜாவை இணைத்துக்கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது.

நடைபெற்று முடிந்த மூன்று டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி, 2-1 என முன்னிலை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...